ரபேல் வாட்ச் சர்ச்சை.. மனைவியின் வருமானத்தை மறைத்தாரா அண்ணாமலை?டிரெண்டான வருமானவரி ஆவணம்
சென்னை: அண்ணாமலை ஒரு பத்திரிகையாளர் சந்திப்புக்குக் கட்டிக் கொண்டுவந்த ரஃபேல் வாட்ச் புதிய பிரச்சனை உருவெடுத்துள்ளது.
முதன்முதலாக இந்தச் சர்ச்சை தீயைப் பற்றவைத்தவர் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி. இவர்தான் அண்ணாமலையின் இந்த வாட்ச் விவகாரத்தை வெளிச்சம் போட்டுக்காட்டினார்.
அவரது ட்விட்டர் பதிவை அடுத்து தலைப்புச் செய்தியாக மாறினார் அண்ணாமலை.

செந்தில் பாலாஜி வைத்த குற்றச்சாட்டு:
அமைச்சர் செந்தில் பாலாஜி தனது ட்விட்டர் பதிவில் முதன்முதலாக, பிரான்ஸ் நிறுவனத்திற்காக, உலகில் வெறும் 500 கை கடிகாரங்கள் மட்டுமே தயாரிக்கப்பட்ட, 5 லட்சத்துக்கும் மேல் விலையுள்ள Rafale watchஐ வெறும் 4 ஆட்டுக்குட்டி மட்டுமே சொத்தென சொல்லும் ஆட்டுப்புளுகர் கட்டியிருக்கிறார். அவர் வாங்கின ரசீதை ஒரு மணி நேரத்திற்குள் வெளியிட்டால் எளியவர்களும் வாங்கி மகிழலாம்.
வெளிநாட்டு வாட்சை கட்டியிருக்கும் தேசியவியாதி, மன்னிக்கத் தேசியவாதி, ஆடு வளர்த்துச் சேர்த்து 5 லட்ச ரூபாய் வாட்ச் கட்டும் அளவுக்கு உயர்ந்தது எப்படி? வார்ரூம் வழியாக தொழிலதிபர்களை மிரட்டினால் இப்படியெல்லாம் பணம் கிடைக்குமா? கடிகாரம் வாங்கிய ரசீதை ஒரு மணி நேரத்திற்குள் வெளியிட முடியுமா? இல்லை வழக்கம்போல excel sheet ஏமாத்து வேலை தான் வருமா?" என்று முதலில் பதிவு போட்டார்" என்று ட்வீட் போட்டார்.

அண்ணாமலை அளித்த பதில்:
அதற்கு உடனடியாக பதில் அளிக்காத அண்ணாமலை, பின் சர்ச்சை பெரிய அளவுக்குச் செல்கிறது என்பதை உணர்ந்து மீண்டும் விளக்கம் அளித்தார். அதாவது இந்த வாட்ச் தேர்தலில் தான் நிற்பதற்கு முன்பே வாங்கியது என்றும், ரஃபேல் விமானம் வந்த பிறகே நாட்டின் பாதுகாப்பு சிறப்பாக மாறியது என்றும் அதன் அடையாளமாகவே தான் ரஃபேல் வாட்ச் வாங்கி கட்டி உள்ளேன் என்றும் அதற்குள் ரஃபேல் உதிரிப் பாகங்கள் உள்ளன என்றும் பல விளக்கங்களை அளித்தார். அப்போதும் அசராத அமைச்சர் செந்தில் பாலாஜி, "சம்பளக் கணக்கை வெளியிடுகிறேன், சாம்பார் கணக்கை வெளியிடுகிறேன் எனக் கம்பி கட்டும் கதைகளை மக்களிடம் சொல்ல வேண்டாம். இவை அனைத்து 'பல்பு' வாங்கிய அரவக்குறிச்சி தேர்தல் மனுவிலேயே இருக்கிறது. இவர் என்ன வெளியிடுவது? யார் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ள முடியும். வேலியில் போகிற ஓணானை வேட்டிக்குள் விட்டுக் கொண்டது போல ரபேல் ஊழலை மீண்டும் மக்களிடம் நினைவூட்டிக் கதறும் முட்டாள்களிடம் கேட்பது எளிய கேள்விதான்.
பல லட்சம் மதிப்பு கொண்ட வெளிநாட்டுக் கடிகாரம் கட்டுவதுதான் தேசபக்தியா? இதுதான் நீங்கள் அளந்துவிடும் Made in India வா? தேர்தலுக்குப் பிறகு வாங்கியதாகச் சொல்லிவிட்டால் 'வேட்பு மனுவில் ஏன் கணக்குக் காட்டவில்லை' என்ற கேள்வியைத் தவிர்த்துவிடலாம் என 'புத்திசாலித்தனமாக' மே 2021 இல் வாங்கியதாகச் சொல்லும் அந்த ஐந்து லட்ச ரூபாய் கடிகாரத்திற்கான பில் இருக்கிறதா அல்லது இனிமேல்தான் தயார் செய்ய வேண்டுமா?" என்று மீண்டும் விமர்சித்திருந்தார்.
உடனே சமூக வலைத்தளங்களில் இந்தத் தகவல் வைரலானது. பலரும் இந்த வாட்ச் பற்றி தேடத்தொடங்கினர். நாம் இந்தக் கடிகாரத்தில் அப்படி என்னதான் உள்ளது எனத் தேடியதில் சில தகவல்கள் பிரமிப்பை ஏற்படுத்தின.

எப்படி இது விலை உயர்ந்த வாட்ச்:
ரபேல் என்பது பிரான்ஸ் நாட்டின் போர் விமானம் ஆகும். டஸால்ட் நிறுவனத்தின் இந்த போர் விமானத்தைத்தான் இந்தியாவும் பயன்படுத்தி வருகிறது. இதற்கான ரபேல் டீலிங்கும் ஊழல் புகார்களை எதிர்கொண்டு பெரிய சர்ச்சையானது. இந்த டஸால்ட் நிறுவனமும் பிரபல வாட்ச் தயாரிப்பு நிறுவனமான பெல் அண்ட் ராஸ் நிறுவனமும் அடிக்கடி இணைந்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன. டஸால்ட் நிறுவனத்தின் போர் விமானங்களைப் பறைசாற்றும் விதமாக பெல் அண்ட் ராஸ் நிறுவனம் நிறைய வாட்ச் சீரிஸ்களை வெளியிட்டுள்ளது.
அந்த வகையில் பல்கான் போர் விமானத்தைப் பாராட்டும் விதமாக அதன் 50ம் ஆண்டு விழாவில் பல்கான் போர் விமான மாடல் வாட்சை பெல் அண்ட் ராஸ் நிறுவனம் வெளியிட்டது. அதன்பின் ரபேல் விமானத்தின் பெருமையைப் பறைசாற்றும் விதமாக சில வருடங்களுக்கு முன் ரபேல் மாடல் வாட்சுகளை வெளியிட்டது. இந்த மாடல் வாட்சுகள் இந்திய ரூபாயில் அப்போது 4.40 லட்சத்திற்கு விற்பனை ஆனது. இதில் மொத்தம் 500 மாடல்கள் மட்டுமே உலகம் முழுக்க தயாரிக்கப்பட்டது. அப்போதே புக் செய்த 500 பேருக்கு மட்டுமே உலகில் இந்த வாட்ச் கிடைத்தது என்ற விவரங்கள் தெரியவந்தன.

அண்ணாமலை பதிலால் வந்த சந்தேகம்:
அண்ணாமலை அளித்துள்ள விளக்கம் குறித்து ஃபேஸ்புக் பதிவில் சில கேள்விகளை முன்வைத்துள்ளார் எழுத்தாளர் ஷாஜகான். அவர், "சுவிட்சர்லாந்த் கடிகாரம் தயாரிப்பில் பெயர் போன நாடு. அதே சுவீஸ் நாட்டில் தான் Bell & Ross என்கிற நிறுவனம். இது ஒரு Luxury watches தயாரிக்கும் நிறுவனம். இது ரஃபேல் விமானத்தைத் தயாரிக்கும் நிறுவனமான தஸால்ட் நிறுவனத்தின் 50வது பொன்விழாவை ஒட்டி 2013 ஆம் ஆண்டு Bell & Ross vintage sport heritage என்ற மாடல் வாட்சை தயாரித்து வழங்கியது.
ரஃபேல் விமானம் ஆர்டர் கொடுக்கப்பட்டது 2016 ஆம் ஆண்டு. அண்ணாமலை கட்டி இருக்கும் வாட்ச் தயாரானது 2015 ஆம் ஆண்டு. ஆக அதற்கு ரஃபேல் விமானம் இந்தியா வந்ததற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இதில் ரஃபேல் விமான உதிரிப் பாகங்கள் உள்ளன என்பது எல்லாம் மக்களை ஏமாற்றும் பேச்சு. 2015இல் வெளியான BR-03 94 என்ற மாடலைத்தான் அண்ணாமலை கட்டி உள்ளார். அதற்கு ரஃபேல் விமான வந்ததற்கும் எந்தத் தொடர்பும் இல்லை" என்று கூறியுள்ளார்.
இதனிடையே இந்தச் சர்ச்சை குறித்து ஒரு விழாவில் பேசிய அண்ணாமலை விளக்கம் அளித்தார். அப்போது அவர், "ஒரு சாதாரண மனிதனிடம் ஆட்சியில் இருப்பவர்கள் ரசீது கேட்கிறார்கள். என்னைவிட என் மனைவி 7 மடங்கு அதிகமாகச் சம்பாதிக்கிறார். விரைவில் அந்த விளக்கங்களை வெளியிடுவேன்" என்றார். இந்தப் பேச்சும் இப்போது பல கேள்விகளை எழுப்பி வருகிறது. சமூக வலைத்தளங்களில் அவரது வருமானவரி செலுத்தியதற்கான ஆவணங்களை வெளியிட்டு சந்தேகங்களை முன்வைக்கின்றனர்.
அண்ணாமலையின் குறிப்பிட்ட இந்தப் பேச்சு குறித்து எழுத்தாளர் ஷாஜகான் ஆர் ஒரு பதிவை எழுதியுள்ளார். அதற்கு 'த நேஷன் வான்ட்ஸ் டு நோ' என்று தலைப்பு வைத்துள்ளார். அதில் ஷாஜகான், "அண்ணாமலை எனது மனைவி என்னைக் காட்டிலும் 7 மடங்கு அதிகம் சம்பாதிக்கிறார். 2021 சட்டமன்றத் தேர்தலில், அரவாக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்ட அண்ணாமலை சமர்ப்பித்த அறிக்கையின்படி, 2020-21 ஆண்டில் அவரது வருமானம் 7,67,020 (ஏழு லட்சத்து அறுபத்தேழாயிரம்). அவருடைய துணைவியார் வருமானம் இதன் ஏழு மடங்கு என்றால் - 53,69,140 - ஐம்பத்து மூன்று லட்சத்து அறுபத்தொன்பதாயிரம் இருக்க வேண்டும்.
ஆனால் அந்த அறிக்கையில் தன் துணைவியாரின் வருமானம் என அண்ணாமலை காட்டியது 15,09,430 (பதினைந்து லட்சம்தான்). அப்படியானால், இரண்டே சாத்தியங்கள். 1. வருமான வரித்துறைக்கு வருமானத்தைக் குறைத்துக் காட்டியிருக்கிறார்? 2. தேர்தல் ஆணையத்துக்கும் வருமானத்தைக் குறைத்துக் காட்டியிருக்கிறார்? அல்லது, கிறிஸ்துமஸ் விழாவில் சொன்னது பொய். எது உண்மை? அண்ணாமலை விளக்குவாரா? ஊடகத்தினர் விளக்குமாறு கேட்பார்களா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இவரது குறிப்பிட்ட இந்தப் பதிவை திமுகவினர் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications