ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர்
சென்னை: முதல்வர் ஸ்டாலினை பார்க்க அவரது வீட்டில் அமைச்சர் துரைமுருகன் 3 மணி நேரம் காத்திருந்து, பின்னர் அவரை பார்க்க அவரது செயலாளர் மறுத்ததால் கண்ணீருடன் காரில் ஏறினாரே, இதை இல்லை என துரைமுருகன் மறுக்க முடியுமா என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக அரசியலில் தற்போதைய ஹாட் டாபிக், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் திமுக கூட்டணியில் இருந்து அதிரடியாக வெளியேறியதுதான்.

வெளியேறியதுடன் அவர் பாஜக கூட்டணிக்கும் அதிமுக கூட்டணிக்கும் செல்ல மாட்டேன் என தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அவர் பாமக ராமதாஸுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாக சொல்லப்பட்டது. ஆனால் அதுவும் இல்லை என்றாகிவிட்டது.
தவாக போட்டியில்லை
அதாவது தவாக தேர்தலில் போட்டியிடவில்லை என வேல்முருகன் தெரிவித்துவிட்டார். இந்த நிலையில் புதிய தலைமுறை சேனலுக்கு வேல்முருகன் அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியிருப்பதாவது: திமுக ஒரு சீட்டு தூக்கிப் போட்டால் ஓடி வந்துவிடுவார்கள் என நினைக்கிறார்களா? நான் ஜெயலலிதா காலத்திலேயே இரண்டு சீட்டுகள் போதாது என்றும் இரட்டை இலக்கத்தில் சீட் வேண்டும் என்றும், எனது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் சொல்லி துணிச்சலாக போயஸ் கார்டனை விட்டு வெளியே வந்தவன்.
திமுக கூட்டணியில் இருந்து வெளியேற்றம்
நான் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது குறித்து அமைச்சர் துரைமுருகனிடம் செய்தியாளர்கள் கேட்ட போது முகபாவனைகளால் என்னை கிண்டல் செய்தாரே! இதே துரைமுருகன், முதல்வரை பார்க்க அவரது வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்தார். ஆனாலும் அவரை பார்க்க அவரது செயலாளர் மறுத்துவிட்டார்.
கண்ணீர் வடித்த துரைமுருகன்
இதனால் துரைமுருகன் கண்ணீருடன் வீடு திரும்பினார். அவரை நான்தான் வழியனுப்பி வைத்தேன். நான் சவால் விடுகிறேன், இதை இல்லை என்று துரைமுருகன் மறுக்க முடியுமா?
எனது அரசியல் பயணத்தில் கொள்கை மாறாதவன். மறைந்த முதல்வர் ஜெயலலிதா 69 சதவீத இடஒதுக்கீட்டை நிலைநாட்ட அவர் டெல்லி வரை சென்று போராடினார். இன்று திமுகவை ஆதரிக்கும் கி. வீரமணி போன்றவர்களே அன்று அவரை 'சமூக நீதி காத்த வீராங்கனை' என்று போற்றியிருந்தனர்.
முதல்வர் நேரம் தரவில்லை
தமிழகத்தின் வாழ்வுரிமைக்காக 150-க்கும் மேற்பட்ட தமிழர் அமைப்புகளை ஒருங்கிணைத்து தான் உருவாக்கிய 'தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு' தலைவர்களைச் சந்திக்க முதல்வர் ஸ்டாலின் ஏன் நேரம் ஒதுக்கவில்லை என்பதுதான் என் கேள்வி.
இந்தக் கூட்டமைப்பில் திருமாவளவன், வைகோ முதல் கொளத்தூர் மணி வரை பல முக்கியத் தலைவர்கள் இருந்தும், அவர்களைச் சந்திக்க முதல்வர் அலுவலகம் தயங்குவது ஏன்?
அரசை இயக்கும் அதிகாரிகள்
தமிழக அரசை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்களோ அல்லது முதல்வரோ நடத்தவில்லை, மாறாக விரல் விட்டு எண்ணக்கூடிய சில அதிகாரிகளே இயக்குகிறார்கள்.
அமைச்சர்கள் தங்கள் துறைச் செயலாளர்களைப் பார்க்க அவர்கள் அறைக்குச் சென்று காத்துக் கிடக்கும் அவலம் இந்த ஆட்சியில் தான் நடக்கிறது. தமிழக அரசு வேலைகளில் தமிழர்களுக்கு 100 சதவீத முன்னுரிமை அளிக்கவில்லை.
சாதிவாரி கணக்கெடுப்பு
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தத் தயங்குவது போன்ற விவகாரங்களில் திமுக அரசு சமூக நீதிக்கு எதிராகச் செயல்படுகிறது என்றார் வேல்முருகன். அவர் மேலும் அதிகார வர்க்கத்தின் பிடியில் சிக்கியுள்ள இந்த அரசு, உழைக்கும் பாட்டாளி வர்க்கத்தின் உரிமைகளை நசுக்குவதாகவும், இதற்கு எதிராகத் தனது குரல் என்றும் ஒலிக்கும் என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications