நெருங்கி வந்த அமித்ஷா.. “ஏதாவது சொல்வாரா?” உற்று கவனித்த ஓபிஎஸ்.. ‘மகிழ்ச்சி’ - நடந்தது என்ன?
சென்னை : சென்னை வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துப் பேச ஓ.பன்னீர்செல்வம் முயன்ற நிலையில், வெறும் சம்பிரதாய சந்திப்பாக கைகுலுக்கலோடு முடிவடைந்துள்ளது.
சென்னையில் நடைபெற்ற இந்தியா சிமெண்ட்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வந்த அமித்ஷாவை சந்திக்க ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவருமே நேரம் கேட்டிருந்தனர். ஆனால், தனியாகச் சந்திக்க இருவருக்குமே நேரம் வழங்கப்படவில்லை எனக் கூறப்பட்டது. அதேநேரம், அமித்ஷா பங்கேற்ற நிகழ்ச்சியில் ஓ.பன்னீர்செல்வமும் பங்கேற்றார்.
இதனால், அமித்ஷா - ஓபிஎஸ் சந்திப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மரியாதை நிமித்தமான கைகுலுக்கலோடு இந்தச் சந்திப்பு நிறைவடைந்தது. அமித்ஷா வேறு எதுவும் சொல்வாரா என ஓபிஎஸ் கவனித்தும், அங்கிருந்து நகர்ந்தார் அமித்ஷா. இதையடுத்து பாஜக அலுவலகமான கமலாலயத்திற்குக் கிளம்பினார் அமித்ஷா.

சென்னையில் அமித்ஷா
சென்னையில் நடைபெற்ற இந்தியா சிமெண்ட்ஸ் பவள விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று இரவு சென்னை வருகை தந்தார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த அவர், கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஓய்வெடுத்தார். தொடர்ந்து இன்று காலை ராஜ்பவனில் இருந்து கார் மூலம் புறப்பட்டு வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கத்திற்குச் சென்றார்.

அமித்ஷா ஓபிஎஸ்
கலைவாணர் அரங்கத்தில் இந்தியா சிமெண்ட்ஸ் 75-வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசினார் அமித்ஷா. இந்த நிகழ்ச்சியில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, கிரிக்கெட் வீரர் தோனி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் அங்கிருந்து புறப்பட்டு தியாகராய நகரில் உள்ள பா.ஜ.க தலைமை அலுவலகமான கமலாலயத்திற்குச் சென்றார் அமித்ஷா.

சந்திக்க நேரம் கேட்டிருந்த ஈபிஎஸ், ஓபிஎஸ்
சென்னை வந்துள்ள அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனியாக சந்தித்துப் பேச நேரம் கேட்டதாக தகவல் வெளியானது. ஆனால், எடப்பாடி பழனிசாமிக்கு நேரம் கொடுக்கப்படவில்லை என்றும், ஓபிஎஸ் மட்டும் அமித்ஷாவை சந்திப்பார் என்றும் கூறப்பட்டது. அமித்ஷா உடனான சந்திப்பின் போது ஒன்றுபட்ட அதிமுக குறித்து பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாகவும் கூறப்பட்டது.

கைகுலுக்கிய அமித்ஷா
எனினும், அப்படியான தனிப்பட்ட சந்திப்பு எதுவும் நிகழவில்லை. இந்தியா சிமெண்ட்ஸ் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு மேடையில் இருந்து இறங்கிய அமித்ஷா, தன்னைச் சந்திக்க வந்த பலருடன் கைலுக்கினார். அப்போது ஓபிஎஸ் நின்றிருந்ததை கவனித்து, அவருடனும் கைகுலுக்கினார். மரியாதை நிமித்தமாக நடந்த இந்தச் சந்திப்பின்போது இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டனர்.

நிமிர்ந்து பார்த்த ஓபிஎஸ்
தனிப்பட்ட முறையிலோ, அதிமுக உட்கட்சி விவகாரங்கள் பற்றியோ ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அமித்ஷா கைகுலுக்கி விசாரித்ததும், வேறு ஏதும் சொல்வாரா என கவனமாக பார்த்தார் ஓபிஎஸ். ஆனால், எதுவுமே பேசாமல் அங்கிருந்து நகர்ந்தார் அமித்ஷா. இதையடுத்து பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்திற்குச் சென்றார் அமித்ஷா. அங்கு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

மகிழ்ச்சி + திருப்தி
இதையடுத்து, வெளியே வந்த ஓ.பன்னீர்செல்வத்திடம் செய்தியாளர்கள் இந்த சந்திப்பு பற்றி கேள்வி எழுப்பினர். அதற்கு, பிரதமர் மோடியையும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்தித்தது மகிழ்ச்சிகரமாகவும், திருப்திகரமாகவும் இருந்தது என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். எனினும், தனிப்பட்ட முறையில் சந்திப்பு நடக்காதது அரசியல் நோக்கர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications