சேர்ந்து போகலாமே.. அண்ணாமலை சொன்னதை அப்படியே கேட்டாரா ஓபிஎஸ்? உண்மையில் என்ன நடந்தது?
ஓ பன்னீர்செல்வம் தனது வேட்பாளரை வாபஸ் வாங்க வேண்டும் என்று அவரிடம் கேட்டுக்கொண்டேன், என்று அண்ணாமலை கூறி இருந்தார்.
சென்னை: ஓ பன்னீர்செல்வம் சார்பாக ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தலில் நிறுத்தப்பட்ட வேட்பாளர் வாபஸ் வாங்கப்பட்டு உள்ளார். ஓ பன்னீர்செல்வத்தின் இந்த முடிவிற்கு பின் அண்ணாமலை இருக்கிறாரோ என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தலுக்காக முன்னாள் எம்எல்ஏ தென்னரசு எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். தற்போது பொதுக்குழு உறுப்பினர்கள் சார்பாக வேட்பாளரை தேர்வு செய்ய வாக்களிக்கப்பட்ட வாக்கு சீட்டுகளை அவை தலைவர் தமிழ் மகன் உசேன் டெல்லிக்கு கொண்டு சென்றுள்ளார்.
முன்னாள் எம்எல்ஏ தென்னரசுவிற்குத்தான் பொதுக்குழுவில் பெரும்பான்மை வாக்குகள் இருப்பதாக தமிழ் மகன் உசேன் குறிப்பிட்டு உள்ளார்.

பொதுக்குழு
பொதுக்குழுவில் பெரும்பான்மை உறுப்பினர்கள் இவருக்கு ஆதரவாக கடிதம் எழுதி உள்ளனர். இந்த நிலையில் இன்று இரவிற்குள் அதிமுகவின் பொது வேட்பாளர் இறுதி செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலும் எடப்பாடி தரப்பிற்கு அதிக பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு உள்ளதால், தென்னரசுதான் வேட்பாளராக தேர்வு செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் அதிமுகவில் ஓ பன்னீர்செல்வம் சார்பாக நிறுத்தப்பட்டு இருந்த ஈரோடு கிழக்கு தொகுதி சட்டசபை இடைத்தேர்தல் வேட்பாளர் செந்தில் முருகன் வாபஸ் வாங்கப்பட்டு உள்ளார்.

வாபஸ்
பொதுக்குழுவில் வாபஸ் இருக்காது என்பதால் அதற்கு முன்பாக ஓபிஎஸ் தரப்பு வாபஸ் வாங்கி உள்ளது. இந்த அறிவிப்பை வெளியிட ஓ பன்னீர்செல்வம் செய்தியாளர் சந்திப்பிற்கு கூட வரவில்லை. ஓபிஎஸ் தரப்பு நிர்வாகி கு.ப.கிருஷ்ணன்தான் இந்த அறிவிப்பை வெளியிட்டார். முன்னதாக இது தொடர்பாக பேட்டி அளித்த பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. ஆனால் அதிமுக ஒன்றாக இருக்க வேண்டும். அதிமுக ஒரு அணிக்குள் இருந்தால்தான் திமுகவை எதிர்க்க முடியும். இது பற்றி ஓ பன்னீர்செல்வத்திடம் பேசினேன்.

அண்ணாமலை
ஓ பன்னீர்செல்வத்தின் வேட்பாளரை விட எடப்பாடி தரப்பின் வேட்பாளருக்கு அதிக ஆதரவு உள்ளூரில் உள்ளது. அதனால் அவருக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று ஓ பன்னீர்செல்வத்திடம் கேட்டுக்கொண்டேன். ஓ பன்னீர்செல்வம் தனது வேட்பளாரை வாபஸ் வாங்க வேண்டும் என்று அவரிடம் கேட்டுக்கொண்டேன், என்று அண்ணாமலை கூறி இருந்தார். அண்ணாமலை கூறியபடியே தற்போது ஓ பன்னீர்செல்வம் இறங்கி வந்துள்ளார். தனது வேட்பாளரை வாபஸ் வாங்கி உள்ளார். எப்போதும் பாஜகவுடன் நெருக்கமாக இருக்கும் ஓ பன்னீர்செல்வம் இந்த முறை பாஜக சொல்வதை அப்படியே கேட்டு, அண்ணாமலையின் கருத்தை கேட்டு நடந்து உள்ளாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஓபிஎஸ் புகழேந்தி
இது தொடர்பாக தற்போது ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி பதில் அளித்துள்ளார். பல்வேறு ஊடகங்களில் பேசிய அவர், அதிமுகவில் ஒற்றுமையை ஏற்படுத்தியது பாஜக. அதிமுக ஒன்றாக இருந்ததற்கு பாஜக ஒரு காரணம். ஆனால் அவர்கள்தான் இப்போது ஓ பன்னீர்செல்வம் இந்த முடிவை எடுக்க காரணம் என்று சொல்ல முடியாது. அண்ணாமலை சொல்லித்தான் ஓபிஎஸ் கேட்டார் என்றெல்லாம் சொல்ல முடியாது. அண்ணாமலை பேச்சை கேட்டு வாபஸ் வாங்கினோம் என்று சொன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனென்றால் ஓபிஎஸ் இரட்டை இலை சின்னம் முடங்க கூடாது என்றுதான் அந்த முடிவை எடுத்தார். சின்னத்திற்கு சிக்கல் வர கூடாது என்றுதான் அந்த முடிவை எடுத்தார். மற்றபடி இதில் எந்த அழுத்தமும் , யாருடைய அழுத்தமும் இல்லை துன்று புகழேந்தி விளக்கி உள்ளார்.












Click it and Unblock the Notifications