மீட்டிங் அழைப்பு.. மீடியேட்டராக ‘தலை’.. லிஸ்ட்டை காட்டி தெறிக்க விட்ட கவர்னர்? எடப்பாடிக்கு செக்!
சென்னை : பாஜக மேலிட உத்தரவை ஏற்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, எடப்பாடி பழனிசாமியோடு, ஓ.பன்னீர்செல்வத்தை இணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் பரபரக்கின்றன.
எடப்பாடி பழனிசாமி தனது சகாக்களோடு சென்று ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்தது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியது. திமுக அரசு மீதான பல்வேறு புகார்களை தெரிவிப்பதற்காகவே ஆளுநரைச் சந்தித்ததாக கூறினார் எடப்பாடி பழனிசாமி.
ஆனால், ஓபிஎஸ் - ஈபிஎஸ்ஸை இணைத்து வைக்கும் அசைன்மெண்ட் டெல்லியில் இருந்து ஆளுநருக்கு கொடுக்கப்பட்டிருப்பதாகவும், ஆளுநரின் அழைப்பின் பேரிலேயே ஈபிஎஸ், அவரைச் சந்திக்கச் சென்றதாகவும் அதிமுக உயர்மட்ட நிர்வாகிகள் வட்டாரத்தில் தகவல்கள் உலவி வருகின்றன.

ஆளுநரை சந்தித்த எடப்பாடி அன் கோ
எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து திமுக அரசு மீதான 10 பக்க புகார் மனுவை சமீபத்தில் அளித்தார். அவரோடு முன்னாள் அமைச்சர்களான ஈபிஎஸ் ஆதரவாளர்கள் 7 பேரும் சென்றிருந்தனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் நடந்த பல்வேறு சம்பவங்களை சுட்டிக்காட்டி சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டதாக தெரிவித்தார். மேலும், திமுக ஆட்சியில் மெகா ஊழல்கள் நடைபெற்று வருவதாகவும், இவர்களை தட்டிக்கேட்க சரியான ஆள் ஆளுநர் தான் என்பதால், ஆளுநரிடம் புகார் அளித்தோம் என்றும் தெரிவித்தார்.

ஆளுநர் ரவிதான் அழைத்தாரா?
ஆனால், எடப்பாடி பழனிசாமி ஆளுநரைச் சந்தித்ததே, ஆளுநர் ரவியின் அழைப்பின் பேரில் தான் என்கிறார்கள் அதிமுக உயர்மட்டத் தலைவர்களோடு நெருக்கமானவர்கள். அதிமுகவில் ஓபிஎஸ், ஈபிஎஸ் இடையே நிலவி வரும் மோதலைத் தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம் அனைத்து மாவட்டங்களுக்கும் புதிதாக நிர்வாகிகளை நியமித்து வருகிறார். எடப்பாடி பழனிசாமியும் தனது அணியின் பலத்தைத் தக்கவைக்க தொடர்ச்சியாக பொதுக்கூட்டங்களையும் திமுக அரசுக்கு எதிராக போராட்டங்களையும் நடத்தி வருகிறார்.

திணறவிட்ட மேலிடம்
அதிமுக மோதல் தொடர்பாக, ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவருமே பாஜக தலைமையைச் சந்திக்க கடும் முயற்சிகளை மேற்கொண்டனர். டெல்லிக்குச் சென்று மோடி, அமித்ஷா ஆகிய தலைவர்களை சந்திக்க முயன்றனர். இருவரும் தமிழகம் வந்திருந்தபோதும் தனித்தனியாகச் சந்திக்க முயன்றனர். ஆனால், தனியாகச் சந்திக்க இருவருக்குமே நேரம் ஒதுக்கப்படவில்லை. பிரதமர் மோடி விமான நிலையத்தில் வரவேற்கவும், வழியனுப்பவும் மட்டுமே ஓபிஎஸ், ஈபிஎஸ்ஸுக்கு அனுமதி கொடுத்தார். அதேபோல, அமித்ஷாவும் இருவரையும் தனியாகச் சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை.

திரும்பிய பார்வை
டெல்லி தலைமையிடம் பேச எடப்பாடி பழனிசாமி முட்டி மோதியும், டெல்லி மனமிரங்காததால் கொஞ்சம் சூடான எடப்பாடி பழனிசாமி, பாஜகவை சீண்டும் வகையில் நடந்து கொண்டார். தன் தரப்பை மதிக்காமல் பாஜக ஓபிஎஸ் அணிக்குச் சாதகமாகச் செயல்பட்டு வருவதால், டென்ஷனாகி, நாங்கள் தமிழ்நாட்டின் எதிர்க்கட்சி, அவர்கள் தேசியக்கட்சி, மோடி, அமித்ஷா தமிழ்நாட்டுக்கு வரும்போதெல்லாம் சென்று சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை, தேவை இருந்தால் சந்திக்கலாம் எனப் பேசினார் எடப்பாடி பழனிசாமி. இது டெல்லியின் கவனத்திற்குச் சென்றதால், உடனே அங்கிருந்து பார்வை ஈபிஎஸ் நோக்கித் திரும்பியது எனக் கூறப்படுகிறது.

ரவி மூலம் ஆக்ஷன்
எடப்பாடி பழனிசாமியின் பேச்சால் கோபமடைந்த டெல்லி தலைமை, ஆளுநர் ரவி மூலம் அடுத்தகட்ட ஆக்ஷனில் இறங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கணிசமான இடங்களைப் பிடிக்க விரும்பும் பாஜக தலைமை, தமிழ்நாட்டில் வலுவான கூட்டணியை உருவாக்க விரும்புகிறது. ஓபிஎஸ், ஈபிஎஸ் இணைந்த அதிமுக, டிடிவி தினகரன், சசிகலா ஆகியோர் ஓரணியில் நிற்க வேண்டும் என்று பாஜக தலைமை விரும்புகிறது. அதை ஈபிஎஸ் ஏற்றுக்கொள்ளாததன் காரணமாகவே, டெல்லி தலைமை, எடப்பாடியை சுற்றலில் விட்டது.

அதிமுக மேல்மட்ட புள்ளிகள்
அதற்கு எடப்பாடி பழனிசாமியும் எதிர்வினை ஆற்றியதால், உடனே ஆளுநர் மூலம் ஆட்டத்தை ஆரம்பித்து விட்டது பாஜக என்கிறார்கள். அதிமுக உயர்மட்ட தலைவர்களுக்கு நெருக்கமான புள்ளிகள் சிலர் ஆளுநர் - எடப்பாடி அணி சந்திப்பு குறித்துக் கூறுகையில், ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் தங்கள் பலத்தைக் காட்ட நடத்தும் யுத்தத்தை பாஜக தலைமை சிறிதும் விரும்பவில்லை. பலமுறை கூறியும் இருவரும் கடுமையாக விமர்சித்துக் கொண்டே இருக்கின்றனர் என்பதால் பாஜக மேலிடம் ஆளுநரை இந்த விஷயத்தில் பேசுமாறு கூறியுள்ளது என்கிறார்கள்.

ஈபிஎஸ்ஸை பணிய வைக்க
ஆளுநர் ரவி மூலம் ஈபிஎஸ் - ஓபிஎஸ்ஸை இணைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. சமீபத்தில் நேரில் சென்று ஈபிஎஸ் ஆளுநரைச் சந்தித்ததும் அதற்காகத்தான். எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்களான முன்னாள் அமைச்சர்கள் பலர் மீதும் பல்வேறு ஊழல் வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகளில் சில மாதங்களுக்கு முன்பு கூட ரெய்டுகள் நடத்தப்பட்டுள்ளன. பல ஆதாரங்களையும் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை கையில் வைத்துள்ளது. இதை வைத்தே, ஆளுநர் மூலம் பேசி எடப்பாடி பழனிசாமியை பணிய வைக்க முயற்சி நடப்பதாகக் கூறுகின்றனர்.

மெர்ஜர் பிளான்
ஊழல் வழக்குகளில், ஆளுநர் விசாரணை நடத்த உத்தரவிட முடியும். எனவே, உங்களுக்கு எதிரான வழக்குகளில் ஆதாரங்கள் இருக்கிறது எனக் கூறி, பாஜக தலைமை சொல்வதைக் கேளுங்கள், இல்லையென்றால் சிக்கல் உருவாகும் என எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு மெசேஜ் கொடுத்துள்ளார் ஆளுநர் என்கிறார்கள். தமிழக ஆளுநர் ரவி, பாஜக தலைமைக்கு மிகவும் நெருக்கமானவராக இருக்கிறார், கடந்த முறை பிரதமர் மோடி சென்னை வந்தபோது கூட ஆளுநர் மாளிகையிலேயே தங்கினார். ஆளுநர் மாளிகையில், பாஜகவினரை சந்தித்து ஆலோசனையும் நடத்தினார். அந்தவகையில், பாஜக அரசின் தூதுவராகவே ஆளுநர் ரவி இங்கு செயல்பட்டு வருகிறார். அந்த அடிப்படையிலேயே எடப்பாடியையும் - ஓ.பன்னீர்செல்வத்தையும் இணைத்து வைக்கும் அசைன்மெண்ட் அவருக்கு தரப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.

இணையும் கரங்கள் - இணைக்கும் ஆளுநர்
கடந்த 2017ல் ஓபிஎஸ், சசிகலா தரப்பு பிளவு ஏற்பட்ட நிலையில், சசிகலா சிறை சென்ற பிறகு, ஓ.பன்னீர்செல்வத்துடன் எடப்பாடி பழனிசாமியை இணைத்து வைக்க அப்போது இருந்த ஆளுநர் வித்யாசாகர் ராவ் மூலம் ஒரு சமரச உடன்படிக்கையை ஏற்படுத்தியது டெல்லி பாஜக தலைமை. ஆளுநர் தான் இருவரின் கைகளையும் பிடித்து சேர்த்து வைத்து ஓபிஎஸ்ஸை துணை முதல்வராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அதேபோன்று இப்போது அதிமுகவில் இரு அணிகளுக்கும் இடையே நடக்கும் மோதலைத் தீர்த்து, தங்களுக்கு சாதகமான நிலையை உருவாக்க ஆளுநரை ஈடுபடுத்தி இருக்கிறது டெல்லி பாஜக தலைமை எனக் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications