தட்டி விடு.. தட்டி விடு.. சைலண்டாக கறார் காட்டிய உதயநிதி.. சீனியர்கள் சிபாரிசையே ஏற்கலையா? ஆஹா!
சென்னை : திமுக இளைஞரணியில் மாநில பொறுப்பைப் பெற சீனியர் அமைச்சர்கள் தொடங்கி பலரும் சிபாரிசு செய்தும் அவற்றை எல்லாம் நிராகரித்து, சிறப்பாகச் செயல்பட்ட இளைஞரணியின் மாவட்ட அமைப்பாளர்களையே மாநிலப் பொறுப்புக்கு கொண்டு வந்திருக்கிறார் உதயநிதி ஸ்டாலின் என்கிறார்கள் அன்பக வட்டாரத்தினர்.
உதயநிதி ஸ்டாலினிடம், தங்கள் மகன்களுக்கு மாநில பதவிக்கு சிபாரிசு செய்த சீனியர் அமைச்சர்கள், இளைஞரணியில் பதவி பெற முயன்ற எம்.எல்.ஏக்கள் பற்றி திமுக வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
சீனியர் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் என யார் சிபாரிசையும் ஏற்காமல் தானே தனது அணியின் மாநில நிர்வாகிகளை செலக்ட் செய்துள்ளார் உதயநிதி ஸ்டாலின். இதில், உதயநிதியிடம் பரிந்துரை செய்த சீனியர்களுக்கு அதிர்ச்சியாம்.
இளைஞரணியின் மாநில துணைப் பொதுச்செயலாளர்களை அழைத்து வாழ்த்துத் தெரிவித்து, அவர்களுக்கு முக்கியமான அறிவுரைகளையும் கூறியிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். உயர்மட்டத் தலைவர்கள் பலரும், இந்தப் பதவிக்கு சிபாரிசு செய்தும் அதையெல்லாம் ஏற்காமல், நானே உங்களைப் பார்த்துப் பார்த்து தேர்வு செய்துள்ளேன் என அவர்களிடம் தெரிவித்திருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.
புதிய பொறுப்பாளர்கள்
திமுக இளைஞர் அணி, மகளிர் அணி மாநில நிர்வாகிகள் பட்டியலை திமுக தலைமை கடந்த 23ஆம் தேதி வெளியிட்டது. திமுகவின் இளைஞரணி செயலாளராக சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் மீண்டும் நியமிக்கப்பட்டார். இளைஞர் அணி துணைச் செயலாளர்களாக 9 பேர் நியமிக்கப்பட்டனர். இளைஞரணி துணைச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளவர்களில் தூத்துக்குடி ஜோயல் மட்டுமே ஏற்கனவே அதே பொறுப்பில் இருந்தவர். மற்ற 8 துணை செயலாளர்களும் புதிதாக இந்தப் பொறுப்புக்கு வந்திருக்கிறார்கள். இந்த 8 பேருமே இளைஞரணியில் மாவட்ட அமைப்பாளர்களாகப் பணியாற்றியவர்கள்.
அதிகார மையம்
திமுகவின் அதிகார மையங்களில் ஒருவராக விளங்கும் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இயங்கும் அணி என்பதால், இளைஞர்கள் ஆர்வமாக இணைந்து வருகின்றனர். திமுக இளைஞரணியில் பொறுப்பு வகித்த பலருக்கு கடந்த தேர்தல்களிலேயே எம்.பி. எம்.எல்.ஏ சீட்கள் கிடைத்தன. உதயநிதி ஸ்டாலினின் வருகைக்குப் பிறகு, உள்ளாட்சித் தேர்தல் வரை இளைஞரணியினருக்கு கணிசமான சீட்களை பெற்றுக் கொடுத்து வருகிறார். வரும் காலங்களில், உதயநிதியின் கை இன்னும் ஓங்கும் என்பதால், அவரது கண்பார்வை பட்டுவிட்டால் நாம் எங்கோ சென்று விடலாம் என்பதற்காக இளைஞரணியில் பொறுப்பு பெற திமுகவில் போட்டா போட்டி நிலவுகிறது.
குவிந்த சிபாரிசு
திமுகவில் கடந்த அக்டோபர் மாதம் பொதுக்குழு நடைபெற்ற பிறகு, கட்சியில் முக்கிய பொறுப்பு கிடைக்காத இளைஞர்கள் பலரும் இளைஞரணியை நோக்கி குறிவைத்தனர். தற்போது எம்.பி, எம்.எல்.ஏக்களாக இருக்கும் பலருமே கூட, இளைஞரணியில் மாநிலப் பதவி பெற தீவிரமாக முயன்றுள்ளனர். சீனியர்கள் அமைச்சர்கள் பலர் தங்கள் மகன்களுக்கும், தங்களுக்கு நெருக்கமானவர்களும் இளைஞரணியில் பதவி பெற உதயநிதியிடம் சிபாரிசு செய்துள்ளனர். ஆனால், எந்த எம்.பி, எம்.எல்.ஏவுக்கும் மாநில பொறுப்பை அளிக்காமல் புத்தம் புதிய படையை தயார் செய்திருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.
மூத்த அமைச்சர்
திமுக பொதுச் செயலாளரும், மூத்த அமைச்சருமான துரைமுருகன், உதயநிதியிடம், தனது மகனுக்கு இளைஞரணியில் மாநில பொறுப்பு வழங்குமாறு கேட்டுக்கொண்டாராம். வேலூர் எம்.பியாக இருக்கும் கதிர் ஆனந்த், திமுகவில் கட்சிப் பொறுப்பு எதிலும் இல்லை. மாவட்ட செயலாளர் பதவியை அவருக்குப் பெற்றுத் தர துரைமுருகன் முயன்ற நிலையில், அது தரப்படவில்லை. அதன்பிறகே, உதயநிதியிடம் கேட்டுள்ளார். மரியாதைக்கு துரைமுருகனிடம் ஓகே சொன்ன உதயநிதி, பட்டியலில் கதிர் ஆனந்த்தை கொண்டு வரவில்லை.
முட்டி மோதிய அமைச்சர்கள்
அதேபோல, உயர் கல்வித்துறை அமைச்சரும், திமுக துணை பொதுச் செயலாளருமான பொன்முடியும், தனது மகனான கள்ளக்குறிச்சி எம்.பி கௌதமசிகாமணிக்கு மாநில இளைஞரணி பொறுப்பைக் கேட்டுள்ளார். அவருக்கும் இளைஞரணியில் இடம் கொடுக்கப்படவில்லை. தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு தனது மகன் அலெக்ஸ் ராஜாவுக்காக உதயநிதியிடம் பேசியிருக்கிறார், அதையும் உதயநிதி ஏற்கவில்லை என்கிறார்கள் திமுக வட்டாரத்தினர்.
நேரு மகன்
சீனியர் அமைச்சர் கே.என்.நேரு தனது மகன் அருணை அரசியலில் தீவிரமாக முகம் காட்ட வைக்க முயற்சிக்கிறார். தான் முதன்மைச் செயலாளராக ஆகிவிட்டதால், மாவட்டத்தில் செல்வாக்கை தக்கவைப்பதற்காக அருணை முன்னிறுத்தி வருகிறார் நேரு. எனினும், உதயநிதியின் கண் பட்டால் அருணுக்கு விரைவில் வளர்ச்சி கிடைக்குமே என்பதற்காக இளைஞரணியில் பொறுப்புக் கேட்டிருக்கிறார் கே.என்.நேரு.
வேலைக்கு ஆகவில்லை
அமைச்சர் ராணிப்பேட்டை காந்தியின் மகன் வினோத், தற்போது திமுகவில் சுற்றுச்சூழல் அணியின் மாநில துணைச் செயலாளராக இருக்கிறார். மாவட்ட அரசியலில் தீவிரம் காட்டி வரும் வினோத்துக்கு, உதயநிதியின் ஆதரவு கிடைக்க வேண்டும் என்பதற்காக இளைஞரணியில் மாநில பொறுப்பு பெற முயன்றுள்ளார் அமைச்சர் காந்தி. இப்படியாக, சீனியர்கள் தலைகள் பலர் முயற்சித்தும் எந்த சிபாரிசும் உதயநிதியிடம் வேலைக்கு ஆகவில்லை என்கிறார்கள் அன்பக வட்டாரத்தினர்.
மாவட்ட அமைப்பாளர்கள்?
வேண்டுமானால், மாவட்ட பொறுப்புகள் கொடுக்கலாம் என உதயநிதி சொல்கிறார் என இளைஞரணி தலைமையில் இருந்து சம்பந்தப்பட்டவர்களுக்குச் சொல்லப்பட்டுள்ளது. இப்போதே திமுக இளைஞரணி மாவட்ட அமைப்பாளர்கள் பதவிக்கும் போட்டிகள் தீவிரமடைந்து வருவதால், அதிலும் சிபாரிசுகளை ஏற்காமல் செயல்பாட்டின் அடிப்படையிலேயே நிர்வாகிகளை தேர்வு செய்வாரா எனும் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.
கடும் போட்டி
தான் அத்தனை சிபாரிசுகளையும் புறந்தள்ளியது பற்றி, புதிதாக தேர்வு செய்யப்பட்ட இளைஞரணி துணைச் செயலாளர்களிடமே பேசியுள்ளார் உதயநிதி. திமுக இளைஞரணி துணை செயலாளர்களுடன் கடந்த 24ஆம் தேதி ஆலோசனை நடத்திய உதயநிதி, "இந்தப் பொறுப்புக்கு எவ்வளவு போட்டி இருந்தது என உங்களுக்கே தெரியும். தெரிஞ்சிருக்கலாம். சீனியர் அமைச்சர்கள் தொடங்கி, கட்சியில் முக்கியமான பொறுப்புகளில் இருக்கும் பலரும் இளைஞரணி மாநில பொறுப்புகளுக்காக சிபாரிசு செய்தார்கள். அவர்கள் எல்லோர் மீதும் நான் மிகுந்த மரியாதை வைத்திருந்தாலும், யார் சிபாரிசையும் ஏற்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
எல்லாவற்றையும் மீறி
இளைஞரணியில் சிறப்பாகச் செயல்படுபவர்கள் யார் என்று நானே பார்த்துப் பார்த்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தான் இங்கே இருக்கிறீர்கள். இந்தப் பதவியை அவர்கள் சிபாரிசு செய்தவர்களுக்கு வழங்காததால் சீனியர்கள் சிலருக்கே என் மீது வருத்தம் இருக்கும். ஆனால், அதையெல்லாம் மீறித்தான் உங்களை கொண்டு வந்திருக்கிறேன். கட்சி வளர்ச்சி தான் முக்கியம், மற்றதெல்லாம் அதன் பிறகுதான்" என உதயநிதி பேசியுள்ளதாகத் தெரிகிறது.