இந்த "டைப்" தங்கம் வேண்டவே வேண்டாம்.. கடையை சாத்திய மக்கள்.. அவசரமாக செபியிடம் ஓடிய விற்பனையாளர்கள்
சென்னை: இந்திய புல்லியன் மற்றும் ஜூவல்லர்ஸ் சங்கம் (IBJA), டிஜிட்டல் தங்கம் வழங்குநர்களை சந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபியின் (SEBI) கீழ் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. இதன் மூலம் நுகர்வோர் ஏமாற்றப்படுவதாக நிலவும் அச்சத்தைப் போக்கலாம் என்று சங்கம் நம்புகிறது.
டிஜிட்டல் தங்க தளங்கள் செபியின் அதிகார வரம்பிற்கு வெளியே செயல்படுகின்றன.. இதனால் அவை நம்பகமானவை அல்ல என்று சமீபத்தில் செபி எச்சரித்ததை அடுத்து, புல்லியன் சங்கம் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது. இளம் முதலீட்டாளர்கள் மத்தியில் உடனடி பணப்புழக்கம் மற்றும் பாதுகாப்பு செலவுகள் இல்லாததால் டிஜிட்டல் தங்கத்தின் மீதான ஆர்வம் அதிகரித்து வருகிறது. ஆனால் இப்போது திடீரென செபி வெளியிட்டுள்ள அறிக்கை இதன் மீதான நம்பிக்கையை குறைக்கிறது.

செபி சொன்னது என்ன?
இந்தியப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி), டிஜிட்டல் தங்கம் மற்றும் இ-தங்கம் தயாரிப்புகளில் முதலீடு செய்வதற்கு எதிராக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. பல ஆண்டுகளாக இந்த முதலீட்டு வழிகள் இருந்தாலும், தங்கத்தின் விலைகளில் ஏற்பட்ட உயர்வு மற்றும் ஆன்லைன் தளங்கள் மூலம் டிஜிட்டல் முறையில் தங்கத்தைச் சொந்தமாக்கும் வசதி ஆகியவை கடந்த ஒரு வருடத்தில் இவை பிரபலமடைவதற்குக் காரணமாக அமைந்தன. இந்த நிலையில்தான் இதில் செய்யப்படும் முதலீடுகளை செபி விமர்சனம் செய்துள்ளது.
டிஜிட்டல் தங்கப் பொருட்கள் பெரும்பாலும் சாதாரண தங்கத்திற்கு மாற்றான முதலீடுகளாகப் பிரச்சாரம் செய்யப்படுகின்றன என்று செபி தெரிவித்துள்ளது. எனினும், இவை கட்டுப்படுத்தப்படாதவை மற்றும் எந்த ஒழுங்குமுறை வரம்பிற்கும் உட்படாதவை என்பதால், முதலீட்டாளர்களுக்கு அதிக அபாயங்களை உருவாக்குகின்றன.
பிளாக்செயின் தொழில்நுட்பம்
டிஜிட்டல் தங்கம் என்பது அரிய உலோகத்தை உடல் ரீதியாகப் பெறாமல் தங்கம் வாங்குவதைக் குறிக்கிறது. இதன் விலை தங்கத்தின் விலையுடன் இணைக்கப்பட்டுள்ளது. பிளாக்செயின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி டிஜிட்டல் தங்கம் உருவாக்கப்படுகிறது. இது முதலீட்டாளர்களை மின்னணு முறையில் தங்கம் வாங்க, விற்க மற்றும் சேமிக்க அனுமதிக்கிறது.
இது அணுகுவதற்கு எளிதானது மற்றும் அவசர காலங்களில் விரைவாக விற்க உதவுகிறது. பெரிய முதலீடுகள் தேவைப்படும் பாரம்பரிய தங்கக் கொள்முதல்களைப் போலல்லாமல், டிஜிட்டல் தங்கம் அல்லது இ-தங்கம் தயாரிப்புகள் முதலீட்டாளர்களைக் குறைவான தொகையில் தங்கத்தை சொந்தமாக்கத் தொடங்க அனுமதிக்கின்றன. ஆனால் இது பாதுகாப்பற்றது என்று செபி கூறி உள்ளது.
செபியிடம் பறந்த கோரிக்கை
இதையடுத்து டிஜிட்டல் தங்க விற்பனை கிட்டதட்ட 30% வரை குறைந்து உள்ளது. டிஜிட்டல் தங்க விற்பனை மிக மோசமான சரிவை சந்தித்துள்ளது. இந்திய புல்லியன் மற்றும் ஜூவல்லர்ஸ் சங்கம் (IBJA), டிஜிட்டல் தங்கம் வழங்குநர்களை சந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபியின் (SEBI) கீழ் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது
"பல்வேறு டிஜிட்டல் தங்க நிறுவனங்கள் எங்களை அணுகியுள்ளன. அவை செபி மூலமாகவோ அல்லது சந்தை கட்டுப்பாட்டு அமைப்பு பரிந்துரைக்கும் வேறு எந்த ஒழுங்குமுறை அமைப்பின் கீழோ வர விருப்பம் தெரிவித்துள்ளன" என்று இதன் கூட்டமைப்புகள் தெரிவித்துள்ளன.
மக்கள் இடையே அச்சம்
இளம் வாங்குவோர் மத்தியில் டிஜிட்டல் தங்கத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. பண்டிகைகள் மற்றும் ஷாப்பிங் நிகழ்வுகளின் போது இந்த பிரிவு கணிசமாக வளர்ச்சி கண்டுள்ளது. இந்த ஆண்டு தன்தேராஸ் அன்று சேஃப்கோல்ட் 1,950 கோடி ரூபாய் மதிப்பிலான பரிவர்த்தனைகளைப் பதிவு செய்தது, இது கடந்த ஆண்டு 800 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால் திடீரென டிஜிட்டல் தங்க தயாரிப்புகள் பத்திரங்களாகவோ அல்லது கமாடிட்டி டெரிவேடிவ்களாகவோ ஒழுங்குபடுத்தப்படவில்லை என்றும், அவை செபியின் அதிகார வரம்பிற்கு வெளியே இருப்பதாகவும், கோல்ட் ஈ.டி.எஃப்., எலெக்ட்ரானிக் கோல்ட் ரசீதுகள் போன்ற செபியால் ஒழுங்குபடுத்தப்பட்ட தங்க கருவிகளுக்கான முதலீட்டாளர் பாதுகாப்பு வழிமுறைகள் இவற்றுக்கு பொருந்தாது என்றும் கடந்த வாரம் செபி முதலீட்டாளர்களுக்கு எச்சரித்தது.
இது ஏற்கனவே தங்கத்தை டிஜிட்டல் முறையில் வாங்கியவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதை சரி செய்ய வேண்டும் என்று செபிக்கு கோரிக்கைகள் பறந்து உள்ளன.












Click it and Unblock the Notifications