சனாதனம்! என்ன பாக்குற.. இனி உன் உருட்டல் மிரட்டலுக்கு பயப்பட போவதில்லை.. மாரிசெல்வராஜ் ட்வீட்
சென்னை: சனாதனம் குறித்து பேசிய உதயநிதி ஸ்டாலினுக்கு இயக்குநர் மாரி செல்வராஜ் ஆதரவு தெரிவித்துள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் நடந்த மாநாட்டில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேசுகையில் இந்த மாநாட்டின் தலைப்பே என்னை கவர்ந்திருக்கிறது. சனாதன எதிர்ப்பு மாநாடு என்று போடாமல் சனாதன ஒழிப்பு மாநாடு என போட்டிருக்கிறார்கள். சிலவற்றை மட்டும்தான் எதிர்க்க வேண்டும். சிலவற்றை ஒழித்தே தீர வேண்டும்.
அந்த வகையில் சனாதனம் என்பதை எதிர்ப்பதை விட ஒழிப்பதே சரியாகும். கொசு, டெங்கு, கொரோனா இவற்றையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்து கட்ட வேண்டும். அதை போலதான் இந்த சனாதனத்தையும் எதிர்க்காமல் ஒழிக்க வேண்டும். சனாதனம் என்பது சமத்துவத்துக்கும் சமூகநீதிக்கும் எதிரானது. இவ்வாறு உதயநிதி தெரிவித்திருந்தார்.
இந்த கருத்துக்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர், வழக்கு பதிவு செய்வதாகவும் அறிவித்தனர். ஆனால் உதயநிதியோ எந்த வழக்கையும் தாம் சந்திக்க தயாராக இருப்பதாகவும், சனாதனத்திற்கு எதிராக எப்போதும் பேசுவேன் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என கூறிய உதயநிதியின் தலையை சீவ ரூ 10 கோடி தருவதாக சாமியார் ஒருவர் கூறி சர்ச்சையை கிளப்பியுள்ளார். அயோத்தியை சேர்ந்த சாமியார் பரமஹம்ச ஆச்சாரியா என்பவர்தான் உதயநிதியின் தலைக்கு ரூ 10 கோடி கொடுப்பதாக கூறியுள்ளார். மேலும் உதயநிதியின் புகைப்படத்தை வாளால் கிழித்து அதை கொளுத்தியும் வீடியோ வெளியிட்டுள்ளார். இதற்குத்தான் தமிழகத்தில் எதிர்வினைகள் வந்து கொண்டிருக்கின்றன.
உதயநிதியோ யாரும் சாமியாரின் உருவபொம்மையை எரித்தும் அவர் மீது வழக்கு தொடர்ந்தும் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்றும் வழக்குகளை சட்டபடி எதிர்கொள்வேன் என்றும் அறிக்கை வாயிலாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில் உதயநிதியை சனாதனம் குறித்த கருத்துக்கு எதிர்ப்போரை போல் நிறைய பேர் ஆதரவும் தருகிறார்கள்.
உதயநிதிக்கு பிரபலங்கள் பலர் அடுத்தடுத்து ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் சத்யராஜ் கூறுகையில் சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெளிவாக பேசியுள்ளார். அமைச்சரின் துணிச்சலை பாராட்டுகிறேன். ஒவ்வொரு விஷயத்தையும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கையாளும் விதம் பெருமையாக உள்ளது என சத்யராஜ் தெரிவித்துள்ளார்.
அது போல் இயக்குநர் மாரி செல்வராஜ் மாமன்னன் படத்தின் கடைசி காட்சியை வெளியிட்டு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அதில் உதயநிதி பேசும் டயலாக், "என்ன பாக்குற, இனிமே உன் உருட்டல் மிரட்டலுக்கு எல்லாம் யாரும் பயப்பட போவதில்லை, இதுக்கு அப்புறமும் துப்பாக்கி தூக்கி மிரட்டினா கூட, அவன் அவன் அவனோட திசையை பார்த்து ஓடிகிட்டு தான் இருப்பான், புரியுதா" என்று கேட்கும் காட்சி இடம்பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications