இயக்குநர் வேலு பிரபாகரன் மரணம்.. 60 வயதில் 25 வயது குறைந்த பெண்ணை 2வது திருமணம் செய்தவர்! பின்னணி
சென்னை: தமிழ் திரைப்பட இயக்குநரான வேலு பிரபாகரன் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாலையில் அவர் காலமானார்.
தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநர்களில் ஒருவராக இருந்தவர் வேலு பிரபாகரன். இவர் சினிமாவில் பல பரிமாணங்களை கொண்டவர். முதலில் கேமராமேனாக சினிமாவில் அறிமுகம் ஆனார். அதன்பிறகு இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என்று பல பிரிவுகளில் அவர் கால்பதித்து இருந்தார்.

1989ல் இயக்குநர் ஆனார். 'நாளைய மனிதன்' என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநரானார். அது ஹிட் அடித்ததால் தொடர்ந்து திரைப்படங்களை இயக்கினார். அதன் 2வ பாகத்தை 1990ல் 'அதிசய மனிதன்' என்ற பெயரில் இயக்கி மீண்டும் வெற்றி பெற்றார்.
பிறகு 'அசுரன், ராஜாகிளி' படங்களை இயக்கினார். நடிகர் அருண் பாண்டியனை வைத்து ‛கடவுள்', நெப்போலியன் நடித்த ‛சிவன்', சத்யராஜின் ‛புரட்சிக்காரன்' போன்ற படங்களை இயக்கினார். அடுத்தடுத்து படங்கள் தோல்வியடைந்தன. இதையடுத்து நடிகர் ஆனார். 'பதினாறு, கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ், கடாவர், பீட்சா 3, ரெய்டு, வெப்பன், கஜானா' உள்பட பல திரைப்படங்களில் நடித்தார்.
வேலு பிரபாகரனுக்கு தற்போது 68 வயது ஆனது. இதற்கிடையே தான் சமீபகாலமாக அவர் உடல் நல பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு வந்தார். சென்னை கொட்டிவாக்கத்தில் தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது.
வேலு பிரபாகரன் 2 திருமணம் செய்தவர். முதல் மனைவி பெயர் பி ஜெயாதேவி. அதன்பிறகு கடந்த 2017 ல் தனது 60வது வயதில் 2வது திருமணம் செய்தார். அவர் தன்னை விட 25 வயது குறைந்த பெண்ணான செர்லி தாஸை திருமணம் செய்தார். இது பேசும் பொருளானது. செர்லி தாஸ், வேலு பிரபாகரன் உடன் 'காதல் கதை' என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு இருவருக்கும் ஏற்பட்ட பழக்கத்தை தொடர்ந்து திருமணம் செய்து கொண்டனர்.
வேலு பிரபாகரன் அடிப்படையில் பெரியாரிஸ்ட்டுகளாக அறியப்படுகிறார். பெரியார் குறித்த தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்று வந்தார். யூடியூப்களிலும் பேட்டியளித்து வந்தார். தனது திரைப்படங்களிலும் கடவுள் மறுப்பு, நாத்திகம் தொடர்பான கருத்துகளை கூறியிருந்தார். தற்போது அவர் மறைந்துள்ள நிலையில் திரையுலகத்தை சேர்ந்தவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications