தவெகவில் இணைந்தாரா இயக்குநர் வெற்றி மாறன்? மதுரையில் நடந்த சம்பவம்.. உண்மை என்ன?
தமிழக வெற்றிக் கழக நிகழ்ச்சியில் இயக்குநர் வெற்றி மாறன் பங்கேற்றது பல்வேறு தரப்பினருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதனால் சோசியல் மீடியாவில் தவெகவில் இயக்குநர் வெற்றி மாறன் இணையவுள்ளதாக சில தரப்பினர் பதிவிட்டு வந்தனர். இதுதொடர்பாக விசாரிக்கையில், மதுரையில் தவெக சார்பாக நடந்த மாட்டு வண்டி பந்தய நிகழ்ச்சியில் வெற்றி மாறன் சிறப்பு விருந்தினராக மட்டுமே கலந்து கொண்டது தெரிய வந்தது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் கடந்த ஆண்டு பிப்.2ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். இதனைத் தொடர்ந்து தவெக சார்பாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விக்கிரவாண்டியில் பிரம்மாண்ட மாநாடு நடத்தப்பட்டது. இதன்பின் பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை எதிர்த்து போராடிய மக்களை விஜய் சந்தித்தார்.

இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் தவெக நிர்வாகிகள் நியமனத்தில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. ஏற்கனவே 4 கட்டமாக மாவட்டச் செயலாளர்கள் அறிவிப்பு வெளியாகியது. இதனைத் தொடர்ந்து நிர்வாகிகளுக்கு அந்தந்த மாவட்ட தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தவெகவின் 2ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் கொள்கை தலைவர்களான பெரியார், அம்பேத்கர், காமராசர், அஞ்சலையம்மாள் மற்றும் வேலு நாச்சியார் ஆகிய 5 பேருக்கும் சிலை அமைக்கப்பட்டு, அவர்களுக்கு விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதன்பின் பல்வேறு மாவட்டங்களிலும் தவெகவின் 2ஆம் ஆண்டு தொடக்க விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் மதுரை வடக்கு மாவட்டச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள கல்லணை, அழகர் கோவிலில் மாட்டுவண்டி பந்தய நிகழ்ச்சியை நடத்தினார். 2 பிரிவுகளாக நடத்தப்பட்ட போட்டியில், வெற்றி பெற்றவர்களுக்கு பல்வேறு பரிசுகள் அளிக்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் யாரும் எதிர்பார்க்காத வகையில் இயக்குநர் வெற்றிமாறன் கலந்து கொண்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அவருக்கு தவெக நிர்வாகிகள் ராட்சச மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர். மற்றபடி இயக்குநர் வெற்றி மாறன் தவெகவில் இணையவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது.
ஏற்கனவே விடுதலை 2 படத்தில் கொள்கை இல்லாத தலைவர்கள் வெறும் ரசிகர்களை மட்டுமே உருவாக்குவார்கள் என்று வசனம் இடம்பெற்றது பேசு பொருளாகியது. இதனை எழுதிய வெற்றி மாறனை அழைத்து தவெக நிர்வாகிகள் நிகழ்ச்சி நடத்தி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வெற்றி மாறன் தனது அடுத்த படத்தின் வேலைகளுக்காக மதுரையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications