செந்தில் பாலாஜியை உடனே டிஸ்மிஸ் செய்யுங்கள்..ஆளுநருக்கு கோரிக்கை வைத்த ஜெயக்குமார்
சென்னை: அமலாக்கத்துறை அதிகாரிகளால் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை முதல்வர் ஸ்டாலின் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். முதல்வர் நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆளுநர் நடவடிக்கை எடுத்து செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றும் ஜெயக்குமார் கோரிக்கை வைத்துள்ளார்.
கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் மற்றும் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். கடந்த மாதம் 26-ந்தேதி தொடங்கிய இந்த சோதனை தொடர்ந்து 8 நாட்கள் வரை நீடித்தது. கடந்த 3ஆம் தேதி நிறைவடைந்த ஐடி ரெய்டில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் நேற்று ராமேஸ்வரப்பட்டியில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் பெற்றோர் வீடு, சகோதரர் அசோக்குமார் வீடு, கொங்குமெஸ் மணி, ஆடிட்டர் வீடு, நகைக்கடை, சென்னை தலைமை செயலகத்தில் உள்ள அமைச்சரின் அலுவலக அறை உள்ளிட்ட 8 இடங்களில் அமலாக்கத்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர்.
அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த வழக்கில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. கைது நடவடிக்கையின் போது அமைச்சருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நள்ளிரவு 2 மணியளவில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். விசாரணைக்கு செல்லும் வழியில் அமைச்சர் செந்தில் பாலாஜி, தனக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறி, கதறி அழுதார். இதையடுத்து அவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் காரில் படுக்க வைத்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
இந்நிலையில் செந்தில் பாலாஜி கைது தொடர்பாக பட்டினம்பாக்கம் இல்லத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பதற்கேற்ப செந்தில் பாலாஜி கைது உள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி கைது நடவடிக்கையை ஊரார் கைதட்டி வரவேற்கின்றனர். பல ஊழல்கள் நடந்துள்ளது 2 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செந்தில் பாலாஜி கொள்ளையடித்துள்ளார்.
அதிமுக ஆட்சியில் குறிப்பிட்ட நேரத்தில் தான் மதுவிற்கப்பட்டது. இப்போது 24 மணி நேரமும் மது விற்கப்படுகிறது. அரசின் வரிவருவாயை சட்ட விரோத பார்கள் மூலம் அரசுக்கு வருவாயை அமைச்சர் செந்தில் பாலாஜி தடுத்துள்ளார். அந்த வருவாய் ஒரு குடும்பத்திற்கு சென்றுள்ளது. 2 ஆண்டுகளில் பார்கள் மூலம் ஒன்றரை சதவிகிதம் வரைவு காசோலை மூலம் அரசுக்கு வரும் அதை செந்தில் பாலாஜி தனக்கு வரும்படி செய்துள்ளார்.
தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் என்பது போல் உள்ளார். ஸ்டாலின் துடிதுடித்து போயுள்ளார். ஸ்டாலின் குறித்த அனைத்து விவரங்களும் செந்தில் பாலாஜிக்கு தெரியும் என்பதால் முதல்வர் பயந்து போயுள்ளார் என்று கூறினார்.
அமலாக்கத்துறை விசாரணைக்கு ஒத்துழைப்பு தருவேன் என்று கூறிய செந்தில் பாலாஜி கைதாவதில் என்ன பிரச்சினை என்று கேள்வி எழுப்பிய ஜெயக்குமார்,அமலாக்கத்துறை வசம் உள்ள செந்தில் பாலாஜியை முதல்வர் ஸ்டாலின் எப்படி சந்திக்கமுடியும் என்று கேள்வி எழுப்பினார். செந்தில் பாலாஜி மீது முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்படி எடுக்காவிட்டால் ஆளுநர் நடவடிக்கை எடுத்து செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றும் ஜெயக்குமார் கேட்டுக்கொண்டார்.
அதிமுக ஆட்சி காலத்தில் தலைமைச் செயலகத்தில் ரெய்டு நடந்த போது தமிழகம் தலை குனிந்து விட்டதாக மு.க ஸ்டாலின் கூறினார். இப்போது அமலாக்கத்துறை ரெய்டு நடந்துள்ளது. இப்போது முதல்வராக உள்ள ஸ்டாலின் என்ன செய்வார். உங்களுக்கு வந்தால் ரத்தம் எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா என்றும் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். இதனிடையே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜிக்கு என்ன சிகிச்சை தரப்படுகிறது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி எழுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications