Diwali 2025: தீபாவளி நாளில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி! தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு
சென்னை: இந்தியாவில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்துத் தரப்பினரும் கொண்டாடும் பண்டிகையாகத் தீபாவளி பண்டிகை இருக்கிறது. இதற்கிடையே தீபாவளியன்று பட்டாசு வெடிக்கத் தமிழக அரசு நேரக் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அதன்படி, தீபாவளியன்று காலை 6-7 மணி வரை, இரவு நேரத்தில் 7-8 வரை பட்டாசுகளை வெடிக்க அனுமதிக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்தியா முழுக்க பொதுமக்கள் கொண்டாடும் ஒரு பண்டிகையாகத் தீபாவளி இருக்கிறது. புராணங்களின் அடிப்படையில் தீபாவளிக்குப் பல்வேறு காரணங்கள் சொல்லப்படும் நிலையில், அந்த நாளை நாடு முழுக்க உள்ள மக்கள் கோலாகலமாகக் கொண்டாடி வருகிறார்கள்.

தீபாவளி
மேலும், தீபாவளி என்றாலே புத்தாடைகளுடன் சேர்த்து வாங்குவது பட்டாசுகள் தான். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை காலை முதல் நள்ளிரவு வரை தீபாவளி நாளில் பட்டாசு சத்தங்கள் கேட்டுக் கொண்டே இருக்கும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக அதிகரிக்கும் காற்று மாசு உள்ளிட்டவை காரணமாகப் பட்டாசுகளை வெடிக்கப் பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, இந்தாண்டும் தீபாவளியன்று பட்டாசு வெடிக்க நேரக் கட்டுப்பாடுகளை இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளியன்று காலை 6-7 மணி வரை பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்படும் எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதேபோல இரவு நேரத்தில் 7-8 வரை பட்டாசுகளை வெடிக்க அனுமதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு
இது தொடர்பாகத் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தீபாவளித் திருநாள் மக்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் திருநாளாகும். இத்திருநாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். அதேவேளையில் பட்டாசுகளை வெடிப்பதால் நம்மை சுற்றியுள்ள நிலம், நீர், காற்று உள்ளிட்டவை பெருமளவில் மாசுபடுகின்றன. பட்டாசு வெடிப்பதால் எழும் அதிகப்படியான ஒலி மற்றும் காற்று மாசினால் சிறு குழந்தைகள், வயதான பெரியோர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டுள்ள வயோதிகர்கள் உடல் அளவிலும் மனதளவிலும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.
உச்ச நீதிமன்ற உத்தரவு
பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்குத் தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொது நல வழக்கில் உச்ச நீதிமன்றம் தனது 23.10.2018ஆம் நாளிட்ட ஆணையில், சுற்றுச் சூழலுக்கு உகந்த மூலப்பொருட்களைப் பயன்படுத்தி பட்டாசுகளை உற்பத்தி செய்ய வேண்டும் எனவும், வருங்காலத்தில் பசுமைப் பட்டாசுகளை உற்பத்தி செய்து விற்பனை செய்ய வேண்டும் எனவும் நிபந்தனைகளை விதித்தது.
மேலும், உச்ச நீதிமன்றம் தனது ஆணையில் பட்டாசுகளை வெடிப்பதால் காற்றின் தரம் பாதிக்கப்படுவது குறித்து போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் திறந்த வெளியில் குறிப்பிடப்பட்ட பகுதிகளில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க மாநில அரசுகள் வலியுறுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
நேரக் கட்டுப்பாடு
உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு 2018-ஆம் ஆண்டிலிருந்து தீபாவளி பண்டிகையன்று காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையில் மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்து அனுமதி வழங்கியது. இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகை தினத்தன்று, கடந்த ஆண்டைப் போலவே காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications