2005 முதல் 2024 வரை.. தேமுதிகவின் கூட்டணியும், சோதனைகளும்.. மாநாட்டில் பிரேமலதா முடிவு என்ன?
சென்னை: சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்கள் மட்டுமே இருக்கும் சூழலில், கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள பாசார் கிராமத்தில் மாநாடு நடைபெற்று வருகிறது. தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கொடியேற்றி வைத்து மாநாட்டை தொடங்கி வைத்துள்ளார். இதையடுத்து கலை நிகழ்ச்சிகள் தொடங்கி நடந்து வருகின்றன.
இந்த மாநாட்டில் தேமுதிகவின் கூட்டணி தொடர்பான அறிவிப்பை வெளியிட உள்ளதாக பிரேமலதா விஜயகாந்த் கூறியிருந்தார். திமுக, அதிமுக மற்றும் தவெக ஆகிய 3 கட்சிகளுடனும் தேமுதிக பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறது. அதிலும் அண்மையில் நடந்த விஜயகாந்த் குருபூஜை விழாவில் எடப்பாடி பழனிசாமி நேரில் கலந்து கொண்டார். மறுபுறம் திமுகவில் இருந்து உதயநிதி ஸ்டாலின், எவ வேலு பங்கேற்றனர்.

இதனால் பிரேமலதா விஜயகாந்தின் முடிவு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 2005ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதி தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற கட்சியை மதுரையில் பிரம்மாண்டமாக தொடங்கினார் விஜயகாந்த். அதே வேகத்தில் 2006 சட்டசபைத் தேர்தலில் தனித்து களமிறங்கிய விஜயகாந்த் கட்சி, சுமார் 8.4 சதவிகித வாக்குகளை பெற்றது.
அப்போது விருத்தாசலத்தில் போட்டியிட்ட விஜயகாந்த் மட்டுமே வென்றார். இதன்பின் 2009 லோக்சபா தேர்தலிலும் தேமுதிக தனித்தே களம் கண்டது. அப்போது ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியவில்லை என்றாலும், 10.3 சதவிகித வாக்குகளை பெற்றது. இதன்பின் 2011ஆம் ஆண்டு அதிமுக தலைமையிலான கூட்டணியில் 41 தொகுதிகளில் போட்டியிட்டார்.
அப்போது 29 தொகுதிகளில் தேமுதிக வென்றதோடு, எதிர்க்கட்சியாகவும் அமர்ந்தது. எதிர்க்கட்சித் தலைவராக விஜயகாந்த் இருக்கையில் அமர்ந்தார். அப்போது தேமுதிகவின் வாக்கு சதவிகிதம் 7.9ஆக சரிந்தது. ராமதாஸ்-க்கு கூட கிடைக்காத அங்கீகாரம் விஜயகாந்திற்கு விரைவாகவே கிடைத்தது. ஆனால் அந்த தேர்தலுக்கு பின் தேமுதிக சரியத் தொடங்கியது.
2014ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணியில் விஜயகாந்த் இணைந்தார். அப்போதும் தேமுதிக 14 தொகுதிகளில் போட்டியிட்டு ஒன்றில் கூட வெல்லவில்லை. அப்போது தேமுதிக வாக்கு சதவிகிதம் 5.1ஆக சரிந்தது. பின்னர் 2016 சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைய வேண்டும் என்று முன்னாள் முதல்வர் கருணாநிதியிடம் இருந்து அழைப்பு வந்தது.
ஆனால் விஜயகாந்த் தலைமையில் மக்கள் நலக் கூட்டணி உருவாகியது. மதிமுக, விசிக, சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகளுடன் 3வது அணி அமைத்து தேர்தலை சந்தித்தார். அதில் 104 தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிக ஒரு தொகுதியில் கூட வெல்லவில்லை. உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிட்ட விஜயகாந்தும் தோல்வி அடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதில் தேமுதிகவின் வாக்கு சதவிகிதம் 2.41ஆக குறைந்தது. பின்னர் 2019 லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து 4 தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிக, ஒன்றிலும் வெல்லவில்லை. இம்முறை வாக்கு சதவிகிதம் 2.19ஆக குறைந்தது. இதன்பின் 2021ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலின் போது அமமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்து 60 தொகுதிகளில் போட்டியிட்டது.
அப்போதும் மீண்டும் அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடைந்ததோடு, வாக்கு சதவிகிதம் 0.43ஆக குறைந்தது. இதன்பின் தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் காலமானார். இதனால் தேமுதிக பொதுச்செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் பொறுப்புக்கு வந்தார். பின் நடந்த லோக்சபா தேர்தலில் தேமுதிக அதிமுக கூட்டணியில் 5 தொகுதிகளில் போட்டியிட்டது.
இதில் விருதுநகர் தொகுதியில் களமிறங்கிய விஜயகாந்த் மகன் விஜய் பிரபாகரன் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இம்முறையில் அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடைந்தாலும், வாக்கு சதவிகிதம் 2.59ஆக அதிகரித்தது. இதனால் 2026 சட்டசபைத் தேர்தலில் பிரேமலதா விஜயகாந்தின் கூட்டணி முடிவு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
2011, 2016, 2019 ஆகிய 3 தேர்தல்களிலும் திமுக தரப்பில் தேமுதிகவுக்கு கூட்டணி அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த 3 முறையும் விஜயகாந்த் திமுக கூட்டணியில் இணைய மறுத்துவிட்டார். கட்சி தொடங்கப்பட்டு 21 ஆண்டுகளாகி இருக்கும் சூழலில், ஒருமுறை கூட திமுகவுடன் கூட்டணி அமைத்ததில்லை. இதனால் பிரேமலதா விஜயகாந்த் என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்று அக்கட்சி தொண்டர்கள் எதிர்பார்த்துள்ளனர்.












Click it and Unblock the Notifications