கூட்டணி குறித்து நாளை முக்கிய அறிவிப்பை விஜயகாந்த் அறிவிப்பார்.. மீட்டிங்கில் பொங்கிய பிரேமலதா!
சென்னை: கூட்டணியில் உரிய மதிப்பு அளிக்காவிட்டால் தேமுதிகவினர் தனித்து போட்டியிடவும் தயாராக இருக்க வேண்டும். சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து நாளை முக்கிய அறிவிப்பை விஜயகாந்த் அறிவிப்பார் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா தெரிவித்தார்.
அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக, தங்களுக்கு உரிய முக்கியத்துவத்தை அதிமுக தருவதில்லை என்று ஆதங்கத்தை அவ்வப்போது வெளிப்படுத்தி வருகிறது. இதேநேரம் உரிய முக்கியத்துவம் அளிக்காவிட்டால் தனித்து போட்டியிடவும் தயங்க மாட்டோம் என தேமுதிக கூறி வருகிறது.
தொண்டர்கள், கட்சி நிர்வாகிகளின் எண்ணப்படி தான் தேமுதிக கூட்டணி விவகாரத்தில் முடிவு எடுக்கும் என்றும் இறுதி நிலைப்பாட்டை செயற்குழு, பொதுக்குழுவை கூட்டி தெரிவிப்போம் என்றும் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா கூறியிருந்தார்.
பிரேமலதா கருத்து
இதனிடையே சசிகலா சிறையில் இருந்து விடுதலையாகி உள்ள நிலையில், இன்னும் கொரோனாவில் இருந்தும் குணமாகி உள்ளார். இன்னும் ஓரிரு நாளில் டிஸ்சார்ஜ் ஆக உள்ளார். அவரை வரவேற்று பிரேமலதா பேசிய சில கருத்துக்களை அதிமுக ரசிக்கவில்லை. முதல்வர் எடப்பாடி குறித்து அவர் பேசியது, அதிமுகவிற்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. அத்துடன் தேமுதிக 41 இடங்கள் கேட்டு பிடிவாதம் காட்டும் நிலையில், அதை பற்றி அதிமுக கண்டுகொள்ளவில்லை. தேமுதிகவை கொஞ்சம் விட்டு பிடிக்கலாம் என்று அதிமுக கருதுவதாக தெரிகிறது.
பிரேமலதா கருத்து
திமுக உடன் கூட்டணி போக முடியாது என்பதுடன், வேறு எங்கும் தேமுதிக கூட்டணி செல்லாது என அதிமுக நினைப்பதாக சொல்லப்படுகிறது. இதனால்தேமுதிக உடன் சீட் குறித்து பேச்சுவார்த்தையை அதிமுக இதுவரை தொடங்கவில்லை. அதேநேரம் பாமக, பாஜக உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதனால் தான் தேமுதிகவினர் தனித்து போட்டியிடவும் தயங்க மாட்டோம் என்ற ரீதியில் எச்சரித்து வருகிறார்கள். "யாருக்கு எவ்வளவு தொகுதி என்பதை கூட்டணிக்கான தலைமை பேச வேண்டும்... தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால்தான் பேச்சுவார்த்தை என்று சொல்வது, தாமதத்திற்கு வழிவகுத்துவிடும்.. கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்க அதிமுக காலதாமதம் செய்கிறது என்று பிரேமலதா விஜயகாந்த் ஓபனாக கூறியும் இதுவரை பதில் இல்லை
அதிமுக தயாராக இல்லை
இதனிடையே தேமுதிக கேட்கும் தொகுதிகளை ஒதுக்க அதிமுக தயாராக இல்லை என்று சொல்லப்படுகிறது. மிக குறைந்த அளவு தொகுதிகளை தரவே அதிமுக விரும்புவதாக சொல்லப்படுவதால் தேமுதிக அதிர்ச்சி அடைந்துள்ளது. அடுத்த என்ன முடிவு எடுக்கலாம் என தேமுதிக பொறுப்பாளர்கள் கூட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று நடந்தது. இதில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா பங்கேற்றனர்
கூட்டணியில் தொடர்வதா?
மேலும் கட்சியின் நிர்வாகிகள், சட்டமன்ற பொதுத்தேர்தலுக்காக நியமிக்கப்பட்ட மண்டல பொறுப்பாளர்கள், மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்கள், சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆலோனை கூட்டத்தில் வர உள்ள சட்டப்பேரவை தேர்தலை எவ்வாறு எதிர்க்கொள்வது?. தனித்து போட்டியிடலாமா? அல்லது அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி அமைத்து போட்டியிடலாமா? என்பது குறித்தும் அப்போது ஆலோசனை நடத்தப்பட்டது.. கூட்டத்தில் பொறுப்பாளர்கள் பல்வேறு விதமான கருத்துக்களை தெரிவித்தனர். அப்போது பேசிய பிரேமலதா 234 தொகுதியிலும் தனித்து போட்டியிட தயாராக இருக்க வேண்டும். கூட்டணியில் உரிய மதிப்பு அளிக்காவிட்டால் தனித்து போட்டியிடவும் தயாராக இருக்க வேண்டும். சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து நாளை முக்கிய அறிவிப்பை விஜயகாந்த் அறிவிப்பார் என்றார்.