விஜயகாந்த் மறைவு.. அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து
சென்னை: விஜயகாந்த் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சினிமா உலகிலும் அரசியலிலும் முத்திரை பதித்த விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். அவருக்கு வயது 71. விஜயகாந்த் மரண செய்தியை கேட்டு பிரேமலதா உடைந்து போனார். துக்கம் தாங்காமல் கண்ணீர்விட்டு கதறி அழுதார். மகன்கள் விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் ஆகியோர் பிரேமலதாவை ஆறுதல்படுத்தினார்கள். தேமுதிகவினரும் என்று கண்ணீர்விட்டு கதறினார்கள்.

இந்த நிலையில் விஜயகாந்த் உடல் சாலிகிராமம் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் அங்கிருந்து தேமுதிக அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. தேமுதிக அலுவலகத்திற்கு விஜயகாந்த் உடல் வருகிறது என தெரிந்தவுடன் லட்சக்கணக்கான தொண்டர்கள் அங்கு குவியத் தொடங்கினர். விஜயகாந்த் ஊர்வலம் சாலிகிராமத்திலிருந்து கோயம்பேடு வர 4 மணி நேரம் எடுத்துக் கொண்டது.
கோயம்பேடு அலுவலகத்தில் விடிய விடிய பொதுமக்கள், ரசிகர்கள், விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வந்தனர். கோயம்பேடு பகுதி நெரிசல் மிக்கது என்பதால் விஜயகாந்த் உடலை பொதுமக்கள் அஞ்சலிக்காக தீவுத்திடல் கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. இதன்படி, இன்று காலை 4.50 மணிக்கு விஜயகாந்தின் உடல் கட்சி அலுவலகத்திலிருந்து தீவுத்திடல் நோக்கி பயணத்தை தொடங்கியது.
ஆம்புலன்ஸ் வாகனத்தில் விஜயகாந்த் உடலுடன் பிரேமலதா, சுதீஷின் மனைவி ஆகியோர் செல்கிறார்கள். தொண்டர்கள் கேப்டன் கேப்டன் என கதறி அழுதனர். இதையடுத்து தீவுத்திடலில் இருந்து கேப்டன் விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் மதியம் 1 மணிக்கு கிளம்பி பூந்தமல்லி சாலை வழியாக தேமுதிக தலைமை கழக வளாகத்தில் இன்று மாலை 4.45 மணிக்கு அரசு மரியதையுடன் இறுதிச் சடங்கு நடத்தப்படுகிறது.
இதனிடையே, விஜயகாந்த் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. தொடர்பாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தலைவர் இராமசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் திரை உலகில் தனக்கென ஒரு பாதை அமைத்து அதில் அனைவரையும் ஒருங்கிணைத்தவர்.
திரைப்படத் தயாரிப்பாளர்களை "முதலாளி" என அன்போடு அழைத்தவர் விஜயகாந்த். தமிழ் திரை உலகின் நலனுக்காக உழைத்தவர். தன்னுடன் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டு மக்களுக்கும் தனது ஒவ்வொரு பிறந்த நாளிலும் நலத்திட்டங்கள் வழங்கி மகிழ்ந்தவர். அவரது மறைவு பேரிழப்பாகும்.
அவரது குடும்பத்தாருக்கும் ரசிகர்களுக்கும் சங்கம் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். மனித நேய மிக்க கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று படப்பிடிப்புகள் அனைத்தையும் ரத்து செய்து அவரது இறுதி பயணத்தில பங்கேற்போம்" என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications