தமிழக அரசியலில் முதன்முறையாக.. திமுகவுடன் தேமுதிக கூட்டணி! எடப்பாடிக்கு ஜெர்க் கொடுக்கும் ’வாரிசு’
சென்னை: அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா என்பது போல தமிழகத்தில் அரங்கேற போகிறது மிகப் பெரிய ஒரு அரசியல் மாற்றம். இதுவரை திமுகவுடன் கூட்டணி அமைக்காத தேமுதிக 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைக்க இருக்கிறது. சட்டமன்றத் தேர்தல் சுற்றுப்பயணத்தை எடப்பாடி பழனிச்சாமி துவங்கி இருக்கும் நிலையில், இந்த தகவல் அதிமுகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் பத்து மாதம் இருக்கும் நிலையில் தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் தேர்தல் வேலையை தொடங்கி விட்டன. இந்த 2026 தேர்தலில் நான்கு முனை போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், விஜயின் தமிழக வெற்றிக் கழகம் ஆகிய நான்கு முனை போட்டி நிலவும் சூழலில் திமுக கூட்டணி மிக வலுவாக இருக்கிறது. 2019 தேர்தலுக்கு முன்பிருந்தே திமுக கூட்டணி தொடர்கிறது.

2019 மக்களவைத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல், ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல், 2024 மக்களவைத் தேர்தல் மற்றும் ஈரோடு உள்ளிட்ட இடைத்தேர்தல்களில் திமுக கூட்டணியே அபார வெற்றி பெற்றது. இதனால் 2026 தேர்தலில் இந்த கூட்டணி தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய சூழலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட், மமக, மஜக, தவாக உள்ளிட்ட கட்சிகள் இருக்கின்றன. மேலும் சிறு சிறு அமைப்புகள், கட்சிகள் திமுகவுக்கு ஆதரவாக இருக்கின்றன.
இது ஒருபுறம் இருக்க திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி திட்ட வட்டமாக செயலாற்றி வருகிறார். இதுவரை அடுத்தடுத்து இரண்டு முறை திமுக ஆட்சி அமைத்ததில்லை, அடுத்தடுத்து இரண்டு தேர்தல்களில் அதிமுக தோற்றதில்லை என்ற வரலாற்றை தொடர வைக்க எடப்பாடி பழனிச்சாமி தீவிரமாக முயற்சித்து வருகிறார். ஆனால் கூட்டணி தான் பிரச்சனைக்குறியதாக இருக்கிறது. தற்போதைய சூழலில் அதிமுக கூட்டணியில் பாஜக மட்டுமே அதிகார பூர்வமாக இருக்கிறது மற்றபடி கடந்த காலங்களில் அதிமுக பாஜக கூட்டணியில் இருந்த தேமுதிக, பாமக இதுவரை தங்கள் நிலைப்பாட்டை கூறவில்லை.
இந்த நிலையில் பாமகவில் உட்கட்சி விவகாரம் மிகவும் சீரியஸாக போய்க் கொண்டிருக்கிறது. கூட்டணி தொடர்பான முடிவை யார் எடுப்பார் என்ற குழப்பம் நிலவுகிறது. ராமதாஸ் திமுக கூட்டணிக்கும், அன்புமணி அதிமுக கூட்டணிக்கும் செல்ல வேண்டும் என விரும்புகின்றனர். உட்கட்சி மோதல் முடிவுக்கு வந்தால் தான் கூட்டணி தொடர்பான இறுதி முடிவை எடுக்க முடியும். இது ஒரு புறம் இருக்க தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
ஏற்கனவே சொன்னது போல மாநிலங்களவை உறுப்பினர் விவகாரம் தொடர்பாக அதிமுக மீது தேமுதிக அதிருப்தியில் இருக்கிறது. மக்களவை சீட்டு தருவதாக உறுதி அளித்து கடிதம் தரப்பட்டதாகவும் நாகரீகம் கருதி அதனை வெளியிடவில்லை என பிரேமலதா விஜயகாந்த் கூறியிருந்தார். ஜனவரி மாதம் நடக்கும் மாநாட்டுக்கு பிறகு தான் கூட்டணி தொடர்பான முடிவு அறிவிக்கப்படும் எனக் கூறியிருக்கிறார். இந்த நிலையில் அதிமுக கூட்டணியை பலவீனம் அடையச் செய்ய அந்த கட்சியை தங்கள் கூட்டணிக்கு அழைப்பது தான் பொருத்தமாக இருக்கும் என திமுக தலைமை விரும்புகிறது.
இதற்காக தேமுதிக 'வாரிசு' நிர்வாகி உடன் பேச்சு நடத்தி உள்ளது திமுக தலைமை. கடந்த தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து மக்களவைத் தேர்தலை சந்தித்த போதும் ஒரு எம்பி தொகுதியை கூட பெற முடியவில்லை. மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் கிடைக்கவில்லை என்பதால் மிகவும் அதிர்ச்சியில் இருக்கிறாராம் அந்த வாரிசு. எனவே 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்தால் நிச்சயம் ஐந்து எம்எல்ஏக்களாவது கிடைப்பார்கள் அல்லது திமுகவிடம் கேட்டு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை பெறலாம் என்பதுதான் அந்த வாரிசின் திட்டம்.
இந்த நிலையில் வாரிசின் திட்டத்திற்கு 'மூத்த' தலைவர் ஒப்புதல் தெரிவிக்கவில்லையாம் திமுகவை எதிர்த்து ஆரம்பிக்கப்பட்ட கட்சிதான் தேமுதிக. விஜயகாந்த் இருந்தவரை திமுகவுடன் கூட்டணி அமைக்கவில்லை. 2016 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது, 2016 தேர்தலில் மக்கள் நல கூட்டணி, 2021 தேர்தலில் தனி கூட்டணி அதற்கு முந்தைய தேர்தல்களில் தனித்துப் போட்டி என தேமுதிக இதுவரை திமுகவுடன் கூட்டணி அமைத்ததில்லை. மேலும் கல்யாண மண்டபம் இடிப்பு உள்ளிட்ட விவகாரங்களில் திமுக தலைமை மீது விஜயகாந்த் குடும்பம் கோபத்தில் இருக்கிறது. இருந்த போதும் 'வாரிசின்' எதிர்காலம் கருதி இந்த முடிவை எடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் தனது மாமா மூலம் திமுக தலைமையிடம் வாரிசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என்கின்றனர் விவரம் அறிந்த தேமுதிகவினர்.












Click it and Unblock the Notifications