'கட்சியில் பொருளாதாரம் இல்லை' என சொல்லி கூட்டணி வைத்தாரே பிரேமலதா.. அவர் டெபாசிட்டையும் இழந்தார்
சென்னை: சட்டசபை தேர்தலுக்கு முன், கட்சியில் பொருளாதாரம் இல்லை என்பதாலேயே கூட்டணி வைக்கிறோம் என ஓப்பான பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தேர்தலில் டெபாசிட்டையும் இழந்தது அக்கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் பெரும்பான்மைக்குத் தேவையான 118 இடங்களில் திமுக முன்னிலையில் உள்ளது.
மறுபுறம் இந்தத் தேர்தலில் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்ட தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தோல்வியடைந்துள்ளது அக்கட்சி தொண்டர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆரம்பமே சறுக்கல்
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு முன்னரே, அதிமுக கூட்டணியில் இடம்பெறக் கணக்குப் போட்டு காய்களை நகர்த்தியது தேமுதிக. ஆனால் அதிமுக முதலில் பாமகவுடனான தொகுதிப் பங்கீடு இறுதி செய்வதிலேயே ஆர்வம் காட்டியது. அதன் பின்னரே தேமுதிக பக்கம் வந்தது. இது தேமுதிகவுக்கு கடும் அதிருப்தியை ஏற்பட்டது.

அதிமுக கெடுபிடி
இதையெல்லாம் தாண்டியும் பேச்சுவார்த்தை பல கட்டங்களாக நடைபெற்றது. இருப்பினும், அதிமுக கூட்டணி இறுதி செய்யப்படவில்லை. தேமுதிக பாமகவைப் போலவே தனக்கும் குறைந்தபட்சம் 23 தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனக் கேட்டது. ஆனால், அதிமுக தரப்பில் இதை ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக வெளியேறியது.

பொருளாதாரம் சரியில்லை
கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்ந்து கொண்டிருந்தபோது ஒரு முறை செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேமுதிவால் தனித்துப் போட்டியிட முடியும். அதற்குக் கட்சி தொண்டர்கள் உட்பட அனைவரும் தயாராக இருக்கிறோம். ஆனால் கட்சியின் பொருளாதாரம் இப்போது சரியில்லை. இதன் காரணமாகக் கூட்டணி பற்றிப் பேசுகிறோம் என்று ஓப்பனாகவே தெரிவித்தார்.

60 இடங்களில் களமிறங்கிய தேமுதிக
அதன் பின்னர் டிடிவி தினகரனின் அமமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைத்தது தனிக்கதை. அமமுக கூட்டணியில் தேமுதிக 60 இடங்களில் களமிறங்கியது. இதில் உடல்நிலை காரணமாக அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தேர்தலில் போட்டியிடவில்லை. அதேநேரம் அவரது மனைவியும் தேமுதிக பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்த் விருதாச்சாலம் தொகுதியில் போட்டியிட்டார். சுமார் ஒரு மாதம் விருதாச்சாலம் தொகுதியிலேயே முகாமிட்டிருந்த பிரேமலதா, சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டார். தேர்தலில் வென்றுவிடுவோம் என்ற நம்பிக்கையிலேயே அவர் இருந்தார்.

பெரும் ஷாக்
இருப்பினும், இன்று தேர்தல் முடிவுகள் வெளியாகத் தொடங்கியதில் இருந்தே தேமுதிகவினருக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்தது. அக்கட்சி போட்டியிட்ட எந்தவொரு இடத்திலும் முன்னிலையில் இல்லை. அவ்வளவு ஏன் இரண்டாம் இடத்தைக்கூடப் பிடிக்க முடியவில்லை. விருதாச்சாலம் தொகுதியில் போட்டியிட்ட பிரேமலதா விஜயகாந்த் மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டார்.

டெபாசிட்டும் காலி
10 ஆண்டுகளுக்கு முன் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெற்றி பெற்ற அந்தத் தொகுதியில் பிரேமலதாவால் சுமார் 25 ஆயிரம் வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது. பொருளாதாரம் இல்லை என்பதாலேயே கூட்டணி வைக்கிறோம் என ஓப்பான பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா, தேர்தலில் டெபாசிட்டையும் இழந்தது அக்கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications