கழுதை தேய்ந்து கட்டெறும்பாகி.. சீந்துவார் யாருமில்லாத நிலைக்கு தள்ளப்பட்ட தேமுதிக!!
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி இல்லை என முடிவெடுத்து இப்போது நடுத்தெருவில் நிற்கக் கூடிய ஒரே கட்சியாக தேமுதிகதான் இருக்கிறது. எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன் என்கிற சினிமா வசனம் நிச்சயம் தேமுதிகவுக்கு பொருந்தும். தேமுதிகவை முச்சந்திக்கு கொண்டு வநது நிறுத்திய அத்தனை பெருமையும் பிரேமலதா விஜயகாந்த், சுதீஷ், விஜய பிரபகாரனுக்குதான் போக வேண்டும்.
தேர்தல் களத்தில் தவிர்க்க முடியாத விஸ்வரூப சக்தியாக சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இருந்தது தேமுதிக. இப்போது சீந்துவார் யாருமில்லாத நிலையில் இருக்கிறது.
சட்டசபை தேர்தலில் அதிமுக அணியில் 13 இடங்கள்தான் கிடைக்கும் என்ற நிலையில் ச்சீ..ச்சீ இந்த பழம் புளிக்கும் என பேசுகிறது தேமுதிக. திமுக கூட்டணியில் வெற்றி ஒன்றை இலக்காக கொண்டு சொற்ப தொகுதிகளை அத்தனை கட்சிகளும் பெற்றுக் கொண்டிருக்கின்றன என்பதை கூட எண்ணிப் பார்க்கவில்லை தேமுதிக.

என்ன செய்யும் தேமுதிக
தேமுதிகவுக்கான வாய்ப்புகள் மூன்றுதான். 1) தனித்துப் போட்டியிடுவது 2) நடிகர் கமல்ஹாசன் தலைமையிலான கூட்டணியில் இணைவது 3) தினகரனின் அமமுக அணியில் இணைவது. கட்சி தொடங்கியதில் கமல்ஹாசனை விட சீனியர் விஜயகாந்த். அதனால் கமல்ஹாசனை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக் கொண்டு தேமுதிக மநீம கூட்டணியில் இணையுமா? என்பது கேள்விக்குறி. அமமுக அணிக்கு தேமுதிக வெல்வதற்கே அதிக வாய்ப்புகள் உள்ளன. எந்த அணிக்கு போனாலும் தேமுதிகவுக்கு இந்த தேர்தல் இறுதி அத்தியாயமாகவே இருக்கப் போகிறது என்பதாகவே தெரிகிறது.

மிரட்டிய 2006
2006 சட்டசபை தேர்தலில் தேமுதிக 232 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டது. அதுதான் தேமுதிகவின் முதல் தேர்தல். அந்த தேர்தலிலேயே 8.38% வாக்குகளை அள்ளியது. 27.64 லட்சம் வாக்குகள் தேமுதிகவுக்கு கிடைத்தன. விஜயகாந்த் மட்டுமே அந்த தேர்தலில் வென்றார்.

அதிரவைத்த தேமுதிக
2009 லோக்சபா தேர்தலில் தேமுதிக தனித்தே போட்டியிட்டது. அந்த தேர்தலில் 31.26 லட்சம் வாக்குகள் அதாவது 10.3% என பெற்று அசத்தல் ஆட்டம் ஆடியது தேமுதிக. இதனால் தேமுதிகவை கண்டு அதிமுக, திமுக மிரண்டு போயின. 2011 சட்டசபை தேர்தலில் தேமுதிகவை இழுக்க திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும் படாதபாடு பட்டன.

எதிர்க்கட்சியான தேமுதிக
2011 சட்டசபை தேர்தலில் தேமுதிக அதிமுக கூட்டணியில் இடம்பெற்றது. அப்போது தேமுதிகவுக்கு 41 தொகுதிகளை கொடுத்தார் ஜெயலலிதா. அந்த தேர்தலில் தேமுதிக 29 இடங்களில் வெற்றி பெற்று சட்டசபையில் பிரதான எதிர்க்கட்சியானது. திமுகவுக்கு எதிர்காலம் மீது அச்சத்தை உருவாக்கியது தேமுதிக. ஆனால் விதி வலியது என்பதை போல தேமுதிகவின் தேய்பிறை காலமும் தொடங்கியது.

தொடங்கியது சரிவு
2011 சட்டசபை தேர்தலில் 7.9% பெற்ற தேமுதிகவில் அடுத்தடுத்து எம்.எல்.ஏக்கள் விலகல், கட்சி தாவல் என 2-ம் கட்ட தலைவர்கள் பலரும் காணாமலேயே போகினர். 2014 லோக்சபா தேர்தலில் மிதமிஞ்சிய நம்பிக்கையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணியில் இடம்பெற்றது தேமுதிக. 14 தொகுதிகளில் போட்டியிட்டு அத்தனை இடங்களிலும் தோற்று 5.1% வாக்குதான் பெற்றது. 2016 சட்டசபை தேர்தலிலும் கூட தேமுதிகவுக்கான டிமாண்ட் குறையாமல்தான் இருந்தது. திமுக அணியில் 55 சீட்டுகள் வரை கொடுக்கவும் தயாராக இருந்தனர். ஆனால் அப்போது மக்கள் நலக் கூட்டணிக்கு போனது தேமுதிக.104 இடங்களில் போட்டியிட்ட தேமுதிக அப்போதும் ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை. அத்துடன் வாக்கு சதவீதமும் 2.39% என அதளபாதாளத்துக்கு போனது.

அடைக்கலம் கொடுத்த அதிமுக
2019 லோக்சபா தேர்தலில் திமுகவுடனும் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்த நிலையில் அவமானத்துள்ளாகி அதிமுகவிடம் அடைக்கலமானது தேமுதிக. அப்போது 4 சீட்டுகளை தந்தது அதிமுக. ஆனால் இந்த 4 தொகுதிகளிலும் தேமுதிக வெல்லவும் இல்லை. அதன் வாக்கு சதவீதம் 2.19% ஆனது. ஆம் கழுதை தேய்ந்து கட்டெறும்பாகியே போய்விட்டது தேமுதிக. தற்போதைய தேர்தலில் வலிமையான கூட்டணியில் இடம்பெற்று இழந்த வாக்கு சதவீதத்தை மீட்டெடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறது தேமுதிக. ஆனால் இப்போது அந்த வாய்ப்பையும் தூக்கி எறிந்துவிட்டு அதிமுக கூட்டணியை விட்டு விலகுவதாக அறிவித்திருக்கிறது தேமுதிக. அதனால் இந்த தேர்தலில் தேமுதிகவின் வாக்கு சதவீதம் 2%-க்கும் கீழே போகப் போகிறதா? நோட்டாவுடன் மல்லுகட்டப் போகும் கட்சிகளில் ஒன்றாகப் போகிறதா? என்கிற நிலையில் இருக்கிறது தேமுதிக.












Click it and Unblock the Notifications