சிலிண்டர் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசு! திமுக சரமாரி குற்றச்சாட்டு
சென்னை: தமிழகத்திற்கு சிலிண்டர் தட்டுப்பாடு என்ற நெருக்கடியை ஏற்படுத்தி, மத்திய அரசு வஞ்சகம் செய்வதாக திமுக குற்றம்சாட்டியுள்ளது. ஈரான் போரால் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவியுள்ள நிலையில் இது போன்ற விமர்சனம் எழுந்துள்ளது.
இதுகுறித்து திமுக (DMK Updates) தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவற்றின் எரிவாயு நிரப்பும் நிலையங்களில், வர்த்தக ரீதியிலான சிலிண்டர்கள் நிரப்பப்படாமல் முடங்கிக் கிடக்கின்றன.

இதனால் தமிழகத்தில் உள்ள உணவகங்கள், தேநீர் விடுதிகள் மற்றும் சிறு வணிகங்கள் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை முதல் 5, 19, 35, 47.50 மற்றும் 450 கிலோ எடையுள்ள வர்த்தக சிலிண்டர்கள் நிரப்பும் பணி முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, வீட்டு உபயோக சிலிண்டர்களில் 80% மட்டுமே விநியோகிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தத் தட்டுப்பாட்டைப் பயன்படுத்தி வர்த்தக சிலிண்டர்கள் இரண்டு மடங்கு அதிக விலைக்குக் கறுப்புச் சந்தையில் விற்கப்படுகின்றன. சென்னை ஹோட்டல் சங்கத் தலைவர் ஆர். ரவி கூறுகையில், பெரிய உணவகங்களுக்கே இன்னும் இரண்டு நாட்களுக்கு மட்டுமே இருப்பு உள்ளது என்றும், பல சிறிய உணவகங்கள் ஏற்கனவே மூடப்பட்டுவிட்டன என்றும் தெரிவித்தார்.
எரிவாயுவைச் சிக்கனப்படுத்த இனிப்பு மற்றும் கார வகைகள் தயாரிப்பது நிறுத்தப்பட்டு, மிகக் குறைந்த எரிபொருள் தேவைப்படும் உணவுகளுக்கு உணவகங்கள் மாறி வருகின்றன. இது தமிழக மக்களின் உணவுப் பழக்கத்தையும் வாழ்வாதாரத்தையும் நேரடியாகப் பாதிக்கிறது.
மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சரைச் சந்தித்து முறையிட்டும் இதுவரை எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை. ஒரு நபருக்கு ஒரு வேளை உணவு சமைக்க 140 கிராம் எரிவாயு தேவைப்படும் நிலையில், விநியோகத்தை முடக்குவது மக்களைப் பட்டினி போடுவதற்குச் சமம் என உணவக உரிமையாளர்கள் ஆதங்கப்படுகின்றனர். நுகர்வோர் முன்பதிவு செய்யும் IVRS முறையும் முறையாக வேலை செய்யவில்லை.
போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டிய மத்திய அரசு, தமிழகத்தின் கோரிக்கைகளை அலட்சியப்படுத்தி மக்களை வஞ்சிப்பது இச்சம்பவங்கள் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தமிழகத்தின் வர்த்தக மற்றும் வாழ்வாதாரத் தேவைகளை மத்திய அரசு திட்டமிட்டே புறக்கணிப்பதாகப் பொதுமக்கள் கருதுகின்றனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications