கமலின் திட்டங்களை பார்த்து திமுகவும் அதிமுகவும் காப்பி அடிக்கின்றன.. கலாம் உதவியாளர் பொன்ராஜ் தாக்கு
சென்னை: மக்கள் நீதி மய்யத்தின் திட்டங்களை திமுக தலைவர் ஸ்டாலின் காப்பி அடிக்கிறார் என்றும் அவரை பார்த்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி காப்பி அடிக்கிறார் என்றும் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளரும் அப்துல் கலாமின் உதவியாளருமான பொன்ராஜ் ஒன் இந்தியா தளத்திற்கு அளித்த சிறப்புப் பேட்டியில் விமர்சித்துள்ளார்.
ஏவுகணை மனிதர் என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்டவர் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம். இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவுக்காக இவர் பல திட்டங்களை முன்னின்று நடத்தியுள்ளார்.
அப்துல் கலாமிடம் நீண்ட காலமாக உதவியாளராக பணிபுரிந்தவர் பொன்ராஜ். இவர் சமீபத்தில் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார். இவருக்கு அண்ணா நகர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
அண்ணா நகர் ஏன்
இந்நிலையில் ஒன் இந்தியா தளத்திற்கு பொன்ராஜ் அளித்த சிறப்புப் பேட்டியில் அவர் கூறுகையில், "அண்ணா நகரில் போட்டியிடும்படி என்று கமல் என்னைக் கேட்டுக்கொண்டார். தேர்தலுக்கு நேரம் குறைவாக உள்ளதால், தமிழகம் முழுவதும் கலாமின் கொள்கைகளை எடுத்துச் செல்ல வேண்டும் என்ற பணி எனக்கு இருந்தது. இதனால் போட்டியிட மறுத்தேன். இருந்தாலும், கமல் வற்புறுத்தியதாலேயே நான் தேர்தலில் போட்டியிடுகிறேன்" என்றார்.
பிரச்சனையை சரி செய்ய முடிவில்லை
பிரசார திட்டங்கள் குறித்துப் பேசிய அவர், "பொதுமக்களை முன்னிறுத்தியே நாங்கள் இந்த தேர்தலை எதிர்கொள்கிறோம். மக்களின் முதல் அணியாக நாங்கள் தேர்தலில் களம் காண்கிறோம். பொதுமக்களின் குரல்களைப் புறக்கணித்ததால் தான் இன்று இத்தனை பிரச்சனை. அவற்றுக்குத் தீர்வு கொடுக்கும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் இல்லை. எனவே, மக்களுக்கு தற்போது மாற்றம் தேவைப்படுகிறது. அந்த மாற்றத்தை எங்களால் மாற்றத்தைக் கொடுக்க முடியும்" என்றார்.
விஷன் 2023
தொடர்ந்து பேசிய பொன்ராஜ், "ஜெயலலிதா 'விஷன் 2023' ன்ற திட்டத்தை அறிவித்திருந்தார். அந்தத் திட்டத்திற்காக நான் அவருடன் இணைந்து பணியாற்றினேன். அந்தத் திட்டத்தை முறையாகச் செயல்படுத்தியிருந்தால் தனிநபர் வருமானம் ஏழு லட்சத்தை அடைந்திருக்கும். ஆனால் இதை அதிமுகவால் செய்ய முடியவில்லை. தற்போது 21 லட்சம் கோடியாக உள்ள மாநிலத்தின் ஜிடிபியை 10 ஆண்டுகளில் 36 லட்சம் கோடியாக உயர்த்த முடியும் என ஸ்டாலின் குறிப்பிடுகிறார், ஆனால் கமலுடன் இணைந்து எங்களால் ஒரு டிரில்லயன் டாலர் ஜிடிபியை அளிக்க முடியும்" என்று கூறினார்.
அப்துல் காலம் பிறந்த ஊர்
அப்துல் கலாமின் சொந்த ஊராக அடக்கஸ்தலம் அமைந்துள்ள ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடாதது ஏன் என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், "எனக்கும் விருப்பம்தான். ஆனால் அந்த தொகுதி பெரிய தொகுதி. தற்போது நமக்கு இருக்கும் நேரமோ குறைவாக உள்ளது. தமிழகம் முழுவதும் சென்று பிரச்சாரம் செய்ய வேண்டும். இதனாலேயே சென்னையில் இருக்கும் ஒரு தொகுதியைத் தேர்வு செய்தேன்" என்று அவர் குறிப்பிட்டார்.
காப்பி அடிக்கின்றனர்
கமல் அறிவிக்கும் திட்டங்களை ஸ்டாலின் கப்பி அடிக்கிறார் என்றும் அதைப் பார்த்து எடப்பாடி பழனிசாமி காப்பி அடிக்கிறார் என்றும் பொன்ராஜ் விமர்சித்துள்ளார். மேலும், இவர்கள் இருவரும் வரி வருவாயை நம்பியே ஆட்சி செய்பவர்கள் என்று தெரிவித்த அவர், இவர்களால் 5 ஆண்டுகளுக்கு இல்லத்தரசிகளுக்கு ஊதியத்தை வழங்க முடியாது என்றும் ஆனால் மக்கள் நீதி மய்யத்தால் வழங்க முடியும் என்றும் அவர் கூறினார்.