அமித்ஷா சொன்னதுதான் நடக்குமா?.. அதிமுக முடிவால் இஸ்லாமியர்கள் அதிருப்தி.. திமுக கை ஓங்கும்!
திமுக, காங்கிரஸ் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்
சென்னை: இன்று மிக முக்கியமான நிகழ்வு ஒன்று சட்டப்பேரவையில் நடந்துள்ளது... என்பிஆருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற பேரவை மறுத்ததால் எதிர்க்கட்சிகள் திரண்டு வந்து வெளிநடப்பு செய்துள்ளன!
Recommended Video
உள்துறை அமைச்சர் அமித்ஷா அன்று என்ன சொன்னாரோ அதுதான் இப்போது நடந்துள்ளது.. தமிழகத்தை பொறுத்தவரை குறிப்பாக அதிமுக அரசுக்கு பெரும் தலைவலியாக இருப்பது திமுகதான்! உச்சக்கட்ட அதிருப்தி எதுவும் இல்லாததால்தான் இடைத்தேர்தல்களில் சுபலமாக வெற்றியை தக்க வைத்தது அதிமுக.
ஆனால் எப்போது சிஏஏ, என்ஆர்சி விவகாரம் வந்ததோ அப்போதிருந்தே இது பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது.. இதை திமுகவும் தனக்கு சாதகமாகவே கையெழுத்து இயக்கம் முதல் அனைத்தையும் சிறப்பாக கையாண்டும் வருகிறது.

என்ஆர்சி
இந்த காலகட்டத்தில்தான் சிஏஏ விவகாரம் பற்றியும், திமுக இதை வைத்து பெரிய அளவில் அரசியல் செய்து வருவதால், என்ஆர்சி வேண்டாம் என சட்டமன்றத்தில் ஒரு தீர்மானம் கொண்டு வர உள்ளதாகவும் அமித்ஷாவிடம் தமிழக அமைச்சர்கள் டெல்லிக்கே சென்று விளக்கமாக சொன்னார்கள்.. "அப்படி ஒரு தீர்மானத்தை எல்லாம் சட்டமன்றத்தில் நிறைவேற்ற வேண்டாம், நீங்கள் இப்படி செய்தால், நாளைக்கு இன்னொருத்தர் வந்து கேட்பாங்க.. முதல்ல போய் உங்க மாநிலத்தில சட்டம் ஒழுங்கை சரி பண்ணுங்க" என்று தெரிவித்தாராம் அமித்ஷா.

ஆவேசம்
இதற்கு அமைச்சர்கள், "தீர்மானம் இயற்றினால் சட்டம் ஒழுங்கை வழிக்கு கொண்டு வந்துவிடலாம், போராட்டக்காரர்களுக்கு தேவை தீர்மானம் இயற்றுவதுதான்.. இது திமுகவுக்கும் ஒரு பதிலடியாக இருக்கும்" என்று விளக்கம் சொல்லியும் அமித்ஷா கேட்கவில்லை.. "பிரதமரே என்ஆர்சி கொண்டு வரபோகும் திட்டம் எதுவும் இல்லைன்னு சொல்லிட்டாரே, அதையா எதிர்த்து தீர்மானம் போட போறீங்க? என்று ஆவேசமானாராம்.

கோரிக்கை
அமித்ஷாவின் அந்த குரல்தான் இன்று சட்டப்பேரவையில் எதிரொலித்துள்ளது.. முக ஸ்டாலின்தான் இது சம்பந்தமாக முதலில் பேச ஆரம்பித்தார்... "தேசிய மக்கள் தொகை பதிவேடு தொடர்பாக தமிழக அரசு எழுதிய கடிதத்துக்கு மத்திய அரசு பதில் அளித்துவிட்டதா?" என்று கேள்வி எழுப்பியதுடன் என்பிஆர்க்கு எதிரான தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

சபாநாயகர்
இதற்கு அமைச்சர் ஆர்பி உதயகுமார் பதில் அளிக்கும்போது, "என்பிஆரில் உள்ள சந்தேகங்கள் குறித்து தமிழக அரசு எழுதிய கடிதத்துக்கு மத்திய அரசு இன்னும் பதிலளிக்கவில்லை... ஆனால், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை சட்டமன்ற தீர்மானம் கட்டுப்படுத்தாது... மக்களை ஏமாற்றும் பொய்யான தீர்மானத்தை கொண்டுவர தமிழக அரசு விரும்பவில்லை" என்றார். இதையடுத்து, தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முடியாது என்று சபாநாயகர் தனபாலும் தெரிவித்தார்.

சிறுபான்மையினர்
இதையடுத்துதான் திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.. முக ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசும்போது, "சிறுபான்மையினருக்கு பாதிப்பில்லை என்றே அமைச்சர் சொல்கிறர்.. என்னென்ன பாதிப்புகள் வரும் என்று சொல்லியும் அப்படித்தான் பேசுகிறார்... வண்ணாரப்பேட்டையில் போராடுபவர்களை அழைத்து பேச வேண்டும் என்று சொன்னேன்.. அதையும் செவிமடுக்கவில்லை.. அதனால்தான் வெளியேறினோம்" என்றார்.

பதாகை
அதேபோல, மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவரும் எம்எல்ஏவுமான தமிமுன் அன்சாரி வெளிநடப்பு செய்தார்.. இவர் திடீரென சட்டப்பேரவைக்கு வெளியே தரையில் உட்கார்ந்து தர்ணாவில் இறங்கிவிட்டார்.. அவர் கையில் கோரிக்கை பதாகை ஏந்தியிருந்தார்... தமிழக அரசு, மத்திய அரசுக்கு எதிரான கண்டன முழக்கங்களை அவர் தன்னந்தனி ஆளாக எழுப்பியதும் சட்டப்பேரவையே பரபரப்புக்கு உள்ளானது.. "பீகார் அரசுக்கு இருக்கும் துணிச்சல்கூட தமிழக அரசுக்கு இல்லையா" என்ற வாசகத்தை பதாகையில் எழுதி நீட்டியபடியே இருந்தார்..

விஜயதரணி
போலீசார் அப்புறப்படுத்த முயன்றும், அன்சாரி எதிர்ப்பு தெரிவித்தார்.. அதற்கு பிறகு ஒரு மணி நேரம் கால அவகாசம் தந்தனர்.. தமிமுன் அன்சாரியின் போர்க்கோலத்தை கண்டதும், விஜயதரணியும் வந்து பக்கத்தில் உட்கார்ந்துவிட்டார். இன்றைய சட்டப்பேரவையின் வழக்கமான நிகழ்வுகள் என்று மட்டும் இதை நாம் எடுத்து கொண்டுவிட முடியாது.. அன்று அமைச்சர்கள் தங்கமணி, ஜெயக்குமார் இருவரிடமும் அமித்ஷாவை சொன்னதைதான் அதிமுக அரசு செய்துள்ளதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

திமுக பலம்
நடக்கவிருக்கும் கூட்டத்தொடரில் என்பிஆருக்கு எதிராக தீர்மானத்தை தமிழக முதல்வர், இனியாவது கொண்டுவந்து விடுவாரா? அல்லது வண்ணாரப்பேட்டை மக்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவாரா? என நமக்கு தெரியவில்லை.. அப்படி தீர்மானம் கொண்டு வந்தால் நிச்சயம் அது அதிமுக அரசுக்கு சாதகமாக இருக்கும் என்பதிலும் சந்தேகமே இல்லை.. இல்லாவிட்டால் திமுகவுக்கு பலம் கூடவே செய்யும்!












Click it and Unblock the Notifications