பெண் போலீசிடம் அத்துமீறிய திமுகவினர்.. “கட்சிக்கு அவப்பெயர்”.. அதிரடி ‘ஆக்ஷன்’ எடுத்த தலைமை!
சென்னை : திமுக பொதுக்கூட்டத்தில் இளைஞரணியைச் சேர்ந்த 2 நிர்வாகிகள், பெண் காவலரிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியது பெரும் சர்ச்சையாக வெடித்த நிலையில், சம்பந்தப்பட்ட 2 இளைஞர்களையும் கட்சியில் இருந்து நீக்கி திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை விருகம்பாக்கம் பகுதியில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட பெண் காவலரிடம் அத்துமீறலில் ஈடுபட்ட திமுகவினரை கைது செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை உள்ளிட்டோர் வலியுறுத்தினர்.
இதையடுத்து சம்பந்தப்பட்ட இருவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், இருவரும் கூட்ட நெரிசலில் தங்களது கை பெண் போலீஸ் மீது தவறுதலாக பட்டிருக்கலாம் என்றும், தங்களுக்கு அதுபோன்ற நோக்கம் எதுவும் இல்லை எனவும் தெரிவித்தனர். பெண் காவலரிடம் அவர்கள் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தனர்.
அந்த பெண் காவலரும் தான் கொடுத்த புகார் மனு மீது நடவடிக்கை எடுக்க தேவையில்லை என எழுதிக் கொடுத்ததை அடுத்து பிரச்சனை சுமூகமாக தீர்த்துவைக்கப்பட்டது. இந்நிலையில், அந்த இருவர் மீதும் கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திமுக பொதுக்கூட்டம்
சமீபத்தில், சென்னை விருகம்பாக்கம் தசரதபுரம் பேருந்து நிறுத்தம் அருகே திமுக சார்பில், பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி, தென்சென்னை எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன், விருகம்பாக்கம் எம்எல்ஏ பிரபாகர் ராஜா மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 22 வயதுடைய பெண் காவலரிடம் திமுக இளைஞரணியை சேர்ந்த இருவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

பெண் காவலரிடம் அத்துமீறல்
அவர்கள் எல்லை மீறவே, அந்தப் பெண் காவலர் கதறி அழுதுள்ளார். உடனே சக காவலர்கள் இதை தட்டிக் கேட்டுள்ளனர். தகவல் அறிந்து சென்ற விருகம்பாக்கம் காவல் ஆய்வாளர் தாம்சன் சேவியர், அங்கிருந்து தப்ப முயன்ற இளைஞர்களை விரட்டிப்பிடித்து, காவல் நிலையம் அழைத்துச் செல்ல முயன்றுள்ளார். அப்போது அங்கிருந்த திமுக நிர்வாகிகள், போலீசாரை தடுத்து நிறுத்தி, சமரச முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, பிடிபட்ட திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்காமல், அவர்களை போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.

களமிறங்கிய எதிர்க்கட்சிகள்
இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பொதுக்கூட்டத்தில் பெண் காவலரை திமுக நிர்வாகிகள் பாலியல் ரீதியாக துன்புறுத்திய சம்பவத்தை அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கையில் எடுத்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தன. அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் பழனிசாமி, திமுக ஆட்சியில் சாதாரண பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதை இது போன்ற சம்பவங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன எனச் சாடினார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாலியல் தொந்தரவு கொடுத்தவர்களை கைது செய்ய முற்பட்ட காவல் துறையினரிடம், திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டது உச்சகட்ட அவலம், பாலியல் சீண்டலில் ஈடுபட்ட 2 பேரையும் உடனே கைது செய்யுமாறு முதல்வர் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினார்.

மன்னிப்பு
இதையடுத்து காவல்துறை அதிகாரிகள் உத்தரவின் பேரில், பெண் காவலரிடம் அத்துமீறி நடந்து கொண்ட சாலிகிராமத்தை சேர்ந்த பிரவீன் (23), சின்மயா நகரை சேர்ந்த ஏகாம்பரம் (24) ஆகியோரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது இருவரும் கூட்ட நெரிசலில் தங்களது கை பெண் போலீஸ் மீது தவறுதலாக பட்டிருக்கலாம் என்றும், தங்களுக்கு அதுபோன்ற நோக்கம் எதுவும் இல்லை எனவும் தெரிவித்தனர். மேலும் பெண் காவலரிடம் அவர்கள் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தனர். அதேபோல் சம்பந்தப்பட்ட பெண் காவலரும் தான் கொடுத்த புகார் மனு மீது நடவடிக்கை எடுக்கத் தேவையில்லை என எழுதிக் கொடுத்ததை அடுத்து போலீசார் பிரச்சனையை சுமூகமாக தீர்த்துவைத்தனர்.

சஸ்பெண்ட்
இந்நிலையில், பெண் காவலரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக எழுந்த புகாரில் சம்பந்தப்பட்ட இருவரையும் சஸ்பெண்டு செய்துள்ளது திமுக. இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை தெற்கு மாவட்டம், கலைஞர் நகர் வடக்குப்பகுதி, 129-வது வட்டத்தை சேர்ந்த எஸ்.பிரவீன் மற்றும் சி.ஏகாம்பரம் ஆகியோர் கட்சி கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கிவைக்கப்படுகின்றனர்" எனக் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications