ஆடாமல் ஜெயிச்சுட்டோமே..போட்டியின்றி தேர்வான திமுக வேட்பாளர்கள்..நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ட்விஸ்ட்
சென்னை: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்து சின்னங்கள் ஒதுக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திமுக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற உள்ளது. சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என, தமிழகத்தில் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, வார்டு வரையறை செய்யப்பட்டபடி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது.
தமிழகத்தில் தற்போது ஆளும் கட்சியான திமுகவும், எதிர்க் கட்சியாக உள்ள அதிமுகவும் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தங்களது பலத்தை நிரூபிக்க தயாராகி வருகின்றன. குறிப்பாக மாநகராட்சிகள், முக்கிய நகராட்சிகளை கைப்பற்றுவதில் இருவருக்கும் போட்டா போட்டி நிலவுகிறது.

நகப்புற உள்ளாட்சி தேர்தல்
வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த நிலையில் இன்று வேட்பு மனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள். தொடர்ந்து வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கும் பணியும் அந்தந்த தேர்தல் அலுவலர்கள் தலைமையில் நடைபெற்று வருகிறது. மேலும் சுயேச்சையாக போட்டியிடும் வேட்பாளர்களுக்கு சின்னங்களை ஒதுக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. அதில் மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுவோர் இன்று கலந்து கொண்டனர்.

வேட்பு மனு வாபஸ்
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட மனு செய்தவர்களில் குறிப்பிட்ட சதவீதத்தினர் தங்கள் அளித்த வேட்பு மனுவை இன்று திரும்பப் பெற்றுக் கொண்டனர். குறிப்பாக திமுக வேட்பாளர்களுக்கு எதிராக போட்டியிட்ட அதிமுகவினரின் உள்ளிட்ட பலரதுமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. திமுகவுக்கு ஆதரவாக அரசுத்துறை அதிகாரிகள் செயல்படுவதாக அதிமுக குற்றம் சாட்டி வந்த நிலையில் பல்வேறு பகுதிகளில் சுயேச்சைகளின் வேட்பு மனுக்களும் நிராகரிக்கப்பட்டன.

திமுகவினர் கொண்டாட்டம்
இந்த நிலையில் பல்வேறு பகுதிகளில் திமுக வேட்பாளர்களுக்கு எதிரான வேட்புமனுக்களை சுயேச்சைகள் உள்ளிட்டோர் திரும்பப் பெற்றதால் போட்டியின்றி தேர்வு ஆகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து திமுகவினர் தற்போதே பட்டாசு வெடித்தும் வேட்பாளர்களுக்கு மாலை அணிவித்தும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். பல திமுக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வான நிலையில் தற்போதே மேயர், தலைவர் கனவில் வலம் வருவதாக கட்சியின் மூத்த தலைவர்கள் கூரியுள்ளனர்.

போட்டியின்றி தேர்வு
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பேரூராட்சியில் திமுக பெண் வேட்பாளர்கள் சாமுண்டீஸ்வரி, சுகாசினி பிரியா இரண்டு பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். பழனி கீரனூர் பேரூராட்சியில் அமராவதி என்ற சுயேட்சை வேட்பாளரும், சித்தையன்கோட்டை பேரூராட்சியில் காங்கிரஸ் பெண் வேட்பாளர் மக்முதாம்மாள் போட்டியின்றி தேர்வானார். மேலும், ஒட்டன்சத்திரம் நகராட்சியில் இரண்டு திமுக வேட்பாளர்களும், எரியோடு பேரூராட்சியில் மஞ்சுளா என்ற திமுக வேட்பாளர் ஒருவரும் போட்டியின்றி தேர்தெடுக்கப்பட்டுள்ளனர். இதேபோல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திமுகவின் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications