முகம் மாறிய இந்தியா கூட்டணி.. திமுகவிடம் இருந்து பிரிந்த காங்கிரஸ்
சென்னை: தவெக ஆட்சியமைப்பதற்கு காங்கிரஸ் ஆதரவளிப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தவெகவுக்கு நிபந்தனையுடன் ஆதரவளிப்பதாக தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் அறிவித்துள்ளார். காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பனையூர் சென்றுள்ளனர். இதன் மூலம் திமுக காங்கிரஸ் கூட்டணி முறிந்துள்ளது. கொள்கை கூட்டணி என்று அறிவிக்கப்பட்டிருந்த திமுக - காங்கிரஸ், தேர்தல் முடிந்த 2 நாட்களிலேயே முறிந்திருப்பது தமிழக அரசியலில் திருப்பத்தை ஏற்படுத்தியது.
சட்டமன்ற தேர்தலில் தவெக பெரும் வெற்றியை பெற்றுள்ளது. 108 தொகுதிகளில் வெற்றி பெற்றாலும், பெரும்பான்மைக்கு தேவைப்பட்ட 118 தொகுதிகள் அவர்களிடம் இல்லை. இதனால் மற்ற கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடக்கிறது. காங்கிரஸ் - தவெக இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. காங்கிரஸிடம் நேரடியாக விஜய் ஆதரவு கோரினார். செல்வப்பெருந்தகை ஓரங்கட்டுப்பட்டு, கிரிஷ் சோடங்கர் மூலம் இந்த டீலிங்கை முடிப்பதற்கு முயற்சிகள் நடந்தன.

திமுக காங்கிரஸ் கூட்டணி முறிவு
தமிழ்நாடு காங்கிரஸில் பெரும்பாலானோர் தேர்தலுக்கு முன்பு தவெகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்கிற ஆர்வத்தில் இருந்தனர். ராகுல் காந்தி, மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்தி, ஜோதிமணி ஆகியோர் தவெகவுக்கு ஆதரவு தெரவித்தனர். ஆனால் சிதம்பரம், செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் திமுகவுடன் கூட்டணியை தொடர விருப்பம் தெரிவித்தனர்.
சிதம்பரம் முயற்சியால் திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்தது. காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள், ஒரு மாநிலங்களவை ஒதுக்கப்பட்டது. தேர்தலில் காங்கிரஸ் 5 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தேர்தலுக்கு பிறகு தவெக - காங்கிரஸ் கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் தவெக ஆட்சியமைக்க ஆதரவளிப்பதாக காங்கிரஸ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
முகம் மாறிய இந்தியா கூட்டணி
மதவாத சக்திகளுடன் இணைய கூடாது என்கிற நிபந்தனையுடன் தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவளித்துள்ளது. மேலும் வருகிற உள்ளாட்சி தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலிலும் தவெகவுக்கு ஆதரவளிப்பதாக காங்கிரஸ் கூறியுள்ளது. இதன் மூலம் நீண்ட காலமாக இருந்த திமுக காங்கிரஸ் கூட்டணி முறிவுக்கு வந்துள்ளது. நாட்டில் இந்தியா கூட்டணி வலுவாக இருந்தது தமிழகத்தில் தான்.
கடந்த 2016 தேர்தலில் இருந்து திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்தது. 2016 சட்டமன்ற தேர்தலில் இருந்து, 2026 தேர்தல் வரை சந்தித்தனர். ஸ்டாலினும், ராகுல் காந்தியும் சகோதரர்களாக வலம் வந்தனர். ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்த முதல் தலைவர் ஸ்டாலின் தான். இந்நிலையில் தேர்தல் முடிந்த 2 நாட்களுக்குள் அந்த கூட்டணி முறிந்திருப்பது தமிழ்நாடு அரசியலில் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த லோக்சபா தேர்தலிலும் காங்கிரஸ்-விஜய் கட்சி கூட்டணி தொடரும் என அறிவித்திருப்பதால் இந்தியா கூட்டணியில் திமுக இல்லை என ஆகி அதன் முகமே மாறியுள்ளது.












Click it and Unblock the Notifications