சட்ட வல்லுநர்களுடன் ஆலோசிக்கும் ஸ்டாலின்.. அதிமுக ஆட்சி அமைக்க திமுக ஆதரவா?
சென்னை: திமுக தலைவர் ஸ்டாலின் சட்ட வல்லுநர்களுடன் அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனையில் ஆ.ராசா, என்.ஆர்.இளங்கோ, பி.வில்சன், கனிமொழி, பொன்முடி, எ.வ.வேலு, டி.ஆர்.பாலு, கே.என்.நேரு உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர். இதனால் அதிமுக ஆட்சி அமைக்க திமுக ஆதரவு அளிக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில் 108 இடங்களில் வென்று தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருக்கிறது. ஆனால் பெரும்பான்மை நிரூபிக்க இன்னும் 11 எம்எல்ஏக்கள் தேவைப்பட்ட சூழலில், காங்கிரஸ் கட்சி கூட்டணி ஆட்சி அமைக்க சேர்ந்திருக்கிறது. ஆனால் தவெகவுக்கு இன்னும் 6 எம்எல்ஏ-க்கள் ஆதரவு தேவையாக இருக்கிறது.

இதற்காக தவெக நிர்வாகிகள் விசிக, சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகிய கட்சிகளின் ஆதரவை விஜய் நாடியுள்ளார். ஆனால் இந்த 3 கட்சிகளும் இதுவரை தங்களின் முடிவை அறிவிக்கவில்லை. இதனிடையே நேற்று அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்எல்ஏ-க்கள் மற்றும் மூத்த நிர்வாகிகளின் கூட்டம் நடைபெற்றது. அதேபோல் புதுச்சேரியில் அதிமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம் நடைபெற்றது.
இந்த இரு கூட்டங்களிலும் கட்சித் தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதேபோல் இரு தரப்பிடமும் திமுக - அதிமுக ஆகிய கட்சிகளுக்கு இடையில் கூட்டணி அமைகிறதா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு இரு தரப்புமே மறுப்பு தெரிவிக்கவில்லை. இதனால் தமிழக அரசியல் சூழல் பரபரப்பாகி இருக்கிறது.
இந்த நிலையில் இன்று அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் வழக்கறிஞர்கள் மற்றும் சீனியர் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆலோசனையில் ஆ.ராசா, என்.ஆர்.இளங்கோ, பி.வில்சன், கனிமொழி, பொன்முடி, எ.வ.வேலு, டி.ஆர்.பாலு, கே.என்.நேரு உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
அதெபோல் அண்ணா அறிவாலயத்திற்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியும் வந்துள்ளார். இதனால் திமுகவினர் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே இந்த ஆலோசனை கூட்டத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கவில்லை. இதன் பின்னணி என்ன என்ற கேள்வியும் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications