விருதுநகர் நமக்குத்தான் விட்டுத்தரக்கூடாது.. மல்லுக்கட்டும் திமுக நிர்வாகிகள்.. காங்கிரஸ் அதிர்ச்சி
சென்னை: லோக்சபா தேர்தலில் எந்த தொகுதியில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது என்று திமுக நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வரும் நிலையில் விருதுநகர் தொகுதியை கூட்டணி கட்சிக்கு விட்டுத்தர எதிர்ப்பு எழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விருதுநகர் லோக்சபா தொகுதி கடந்த 2009 ஆம் ஆண்டு உருவானது. திருப்பரங்குன்றம், திருமங்கலம், சாத்தூர், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை ஆகிய சட்டசபை தொகுதிகளைக் கொண்டது விருதுநகர் லோக்சபா தொகுதி. 2009ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்று லோக்சபாவிற்கு சென்றார். தொகுதிக்கு புதியவராக இருந்தாலும் அவரை எதிர்த்து போட்டியிட்ட வைகோவை தோற்கடித்தவர் என்ற சிறப்பு உள்ளது. அதற்குக் காரணம் திமுகவின் உழைப்புதான்.

2014ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது திமுக காங்கிரஸ் கூட்டணி பிரிந்தது. விருதுநகர் லோக்சபா தொகுதியில் திமுகவும் காங்கிரஸ் கட்சியும் தனித்தனியாக வேட்பாளரை நிறுத்தியது. அதே நேரத்தில் அதிமுகவும் தனித்து போட்டியிட்டு விருதுநகர் தொகுதியை வென்றது. 2014 லோக்சபா தேர்தலில் திமுக வேட்பாளராக போட்டியிட்ட ரத்தினவேலு 241,505 வாக்குகளை பெற்றார். அதே நேரத்தில் அப்போதைய சிட்டிங் எம்.பியாக இருந்த மாணிக்கம் தாகூர் வெறும் 38,482 வாக்குகள் மட்டுமே பெற்று படுதோல்வியடைந்தார்.
2019ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது மீண்டும் திமுக காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. 470,883 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் மாணிக்கம் தாகூர். பாஜக அதிமுக கூட்டணியில் இணைந்திருந்த தே.மு.தி.க வேட்பாளர் ஆர்.அழகர்சாமி 316,329 வாக்குகள் பெற்றார். விருதுநகர் தொகுதி தொடங்கப்பட்ட நாளில் இருந்து இதுவரை 3 தேர்தல்களை சந்தித்து உள்ளது. 2 முறை எம்.பியாக வென்றுள்ளார் மாணிக்கம் தாகூர். இந்த முறையும் தொகுதி தனக்குத்தான் என்று உறுதியாக இருக்கிறாராம் மாணிக்கம் தாகூர்.
இந்த சூழ்நிலையில் லோக்சபா தேர்தலுக்காக தொகுதி வாரியாக நிர்வாகிகளுடன் திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை நடத்தி வருகிறது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்றைய தினம் சிவகங்கை, விருதுநகர் தொகுதி நிர்வாகிகளோடு திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை நடத்தியது.
அமைச்சர்கள் கே.என்.நேரு தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின், எ.வ.வேலு மற்றும் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இதேபோல், விருதுநகர், சிவகங்கை மாவட்டத்தில் இருக்கக்கூடிய நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பொறுப்பு அமைச்சர், மேயர், துணை மேயர் நகர்மன்ற தலைவர் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோர் ஆலோசனையில் பங்கேற்றனர்.
கடந்த 2009, 2019 லோக்சபா தேர்தலில் விருதுநகர் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது திமுக வேட்பாளர் போட்டியிட சீட் தர வேண்டும் என்று நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது காங்கிரஸ் கட்சிக்கும் தற்போது எம்.பியாக உள்ள மாணிக்கம் தாகூருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications