மருத்துவமனைக்கு கலைஞர் பெயரை சூட்டினால் போதாது.. மருத்துவர்களையும் பாதுகாக்க வேண்டும்! சீமான் தாக்கு
சென்னை: கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவர் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலுக்குப் பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், இதற்கு நாம் தமிழர் கட்சியின் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி மீது இன்று காலை தாக்குதல் நடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாக்குதல் நடத்திய நபரின் தாய் கடந்த 6 மாதங்களாக அங்கு தான் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்தச் சூழலில் தான் திடீரென காலை அந்த நபர் மருத்துவரைத் தாக்கியுள்ளார்.
சீமான்: மருத்துவரைக் கத்தியால் குத்திய அந்த நபரை போலீசார் ஏற்கனவே கைது செய்துள்ள நிலையில், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. பணியில் இருந்த அரசு மருத்துவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பல்வேறு தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இதற்கிடையே நாம் தமிழர் கட்சியின் சீமான் இந்த விவகாரத்தில் திமுக அரசைக் கடுமையாகச் சாடியுள்ளார்.
அரசு மருத்துவமனைக்குக் கலைஞர் பெயரைச் சூட்டுவதில் காட்டிய அக்கறையில் அணுவளவாவது அரசு மருத்துவர்களைப் பாதுகாப்பதில் திமுக அரசு காட்டாதது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் புற்றுநோய்த்துறை மருத்துவர் பாலாஜி மீது, மருத்துவமனைக்குள்ளேயே கத்தியால் குத்தி கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியையும், மிகுந்த மனவேதனையையும் அளிப்பதாகக் கூறியிருக்கிறார்.
சட்ட ஒழுங்கு: இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக ஆட்சியில் மக்களின் உயிர்காக்கும் மருத்துவர்களின் உயிருக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவது வன்மையான கண்டனத்திற்குரியது. தமிழ்நாட்டின் தலைநகரில் பட்டப்பகலில் அரசு மருத்துவமனை வளாகத்திலேயே புகுந்து மருத்துவர் மீதே கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது தமிழ்நாட்டில் சட்டம்- ஒழுங்கு எந்த அளவிற்குச் சீரழிந்துள்ளது என்பதையே காட்டுகிறது.
அண்மையில் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் அரசு மருத்துவமனை வளாகத்திலேயே பெண் மருத்துவர் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட நிகழ்வு நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது திமுக அரசுக்கு தெரியாதா? அல்லது அந்நிகழ்வினால் மருத்துவர்கள் தங்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டுமென்று நாடு தழுவிய அளவில் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டது தெரியாதா?
இறுதியில் உச்சநீதிமன்றம் தலையிட்டு மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததுதான் தெரியாதா? அவற்றிலிருந்து திமுக அரசு எவ்விதப் பாடமும் கற்காதது ஏன்?
அக்கறை இல்லை: கொல்கத்தா கொடும் நிகழ்விற்கு பிறகாவது மருத்துவமனை மற்றும் மருத்துவர்களின் பாதுகாப்பில் திமுக அரசு கூடுதல் அக்கறை செலுத்தியிருந்தால் தற்போது மருத்துவர் பாலாஜி மீதான கொலைவெறித்தாக்குதல் நிகழ்ந்தே இருக்காது. மருத்துமனைக்கு கலைஞர் பெயரைச் சூட்டுயதில் காட்டிய அக்கறையில் அணுவளவாவது அரசு மருத்துவர்களைப் பாதுகாப்பதில் திமுக அரசு காட்டாதது ஏன்? திமுக அரசின் சிறிதும் பொறுப்பற்ற அலட்சியமே அரசு மருத்துவர் பாலாஜி மீதான கொலைவெறித் தாக்குதலுக்கு முழுமுதற் காரணமாகும்.
ஆகவே, திமுக அரசு இனியாவது மெத்தனமாக இல்லாமல், தமிழ்நாடு முழுவதுமுள்ள அரசு மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகளின் பாதுகாப்பினை உறுதிசெய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென இவ்வறிக்கையின் வாயிலாக வலியுறுத்துகிறேன். கொலைவெறித் தாக்குதலுக்கு ஆளாகி தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில், அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்படவிருக்கும் மருத்துவர் பாலாஜி விரைந்து நலம்பெற விழைகிறேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications