அதிமுக 5 வருடத்தில் செய்ததை திமுக அரசு 3 வருடத்திலேயே முந்தியது.. காலரை தூக்கி விட்ட செந்தில் பாலாஜி
சென்னை: முந்தைய அதிமுக ஆட்சியில் 5 ஆண்டுகளில் வழங்கப்பட்ட மின் இணைப்புகள் 1,38,592 மட்டுமே என்றும் ஆனால் திமுக ஆட்சி காலத்தில் மூன்று ஆண்டுகளில் 1,69,564 புதிய வேளாண் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியின் மூன்றாண்டு காலத்தில் 1,69,564 புதிய வேளாண் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்றும், உழவர்களின் உண்மைத் தோழனாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாதித்துக் காட்டியிருக்கிறார் என்றும் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

விவசாய மின் இணைப்புகள் தொடர்பாக அமைச்சர் வி.செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திட இந்தியாவிலேயே முதன் முறையாக 1989-1990 ஆண்டில் விவசாயிகளுக்கு இலவச மின்சார திட்டத்தைத் தொடங்கி வைத்தவர் கலைஞர் கருணாநிதி. தொலைநோக்குப் பார்வையில் தொடங்கப்பட்ட இத்திட்டத்தால் தமிழ்நாட்டின் கிராமங்கள் துரித வளர்ச்சியை அடைந்தன. விவசாய நிலப்பரப்பு விரிவடைந்தது. விவசாயிகள் தன்னிறைவு பெற்றனர். 2010-2011 ஆம் ஆண்டு காலத்தில் ஒரே ஆண்டில் 77,158 இலவச வேளாண் மின் இணைப்புகளைக் கொடுத்துச் சாதனை படைத்தார் கலைஞர் கருணாநிதி.
அந்தச் சாதனைகளின் அடிச்சுவட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசு கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 1,69,564 புதிய வேளாண் மின் இணைப்புகளைக் கொடுத்துப் புதிய சரித்திரம் படைத்திருக்கிறது. அதற்காக மின் கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த 2016-2021 ஆண்டுகளில் அ.தி.மு.க ஆட்சியில் உழவர்களுக்கு வழங்கப்பட்ட மொத்த வேளாண் மின் இணைப்புகளின் எண்ணிக்கை 1,38,592 மட்டுமே. ஆனால், திராவிட மாடல் ஆட்சியில் மூன்றே ஆண்டுகளில் அந்த எண்ணிக்கையைக் கடந்து 1,69,564 புதிய மின் இணைப்புகளை வழங்கி சாதனை புரிந்துள்ளது.
வேளாண் பெருங்குடி மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்காக திட்டங்களைத் தீட்டி அக்கறையோடு செயலாற்றிவரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனைகளால் வேளாண் மின் இணைப்புகளின் எண்ணிக்கை இந்த அளவிற்கு உயர்ந்திருக்கிறது. இதனால், 3,38,380 ஏக்கர் வேளாண் நிலங்கள் பாசன வசதியைப் பெற்றிருக்கின்றன.
உழவர்களின் உண்மைத் தோழனாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சாதித்துக் காட்டியிருக்கிறார்; உழவர்களின் உள்ளத்தை வென்றிருக்கிறார்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications