11-வது உலகத் தமிழ் மாநாடு: கருணாநிதி கனவை நிறைவேற்றுமா தி.மு.க. அரசு?மத்திய பா.ஜ.க. அரசும் தீவிரம்!
சென்னை: திமுக ஆட்சிக் காலங்களில் உலகத் தமிழ் மாநாடுகள் நடத்தப்படவில்லையே என்கிற மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ஏக்கத்தை நிறைவேற்றும் வகையில் 11-வது உலகத் தமிழ் மாநாடு நடத்துவதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும் என்பது தமிழறிஞர்கள், மூத்த திமுக தலைவர்களின் விருப்பமாகும்.
தமிழ் மொழிக்கு உலகளாவிய அளவில் கவனிப்பை உருவாக்க வேண்டும் என்பதற்காக தனிநாயகம் அடிகள் உள்ளிட்ட தமிழறிஞர்களின் பெருமுயற்சியால் உருவாக்கப்பட்டது உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம். உலகத் தமிழறிஞர்களை ஒன்று சேர்த்து அவர்களது ஆராய்ச்சிகளை வெளிப்படுத்த உதவும் வகையில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகத் தமிழ் மாநாடு நடத்தவும் உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் திட்டமிட்டது.
மும்பையில் 4 நாட்கள் கனமழை.. 5ஆவது நாளாக இன்று வெளுத்து வாங்கும்.. ரெட் அலர்ட் வார்னிங்
இந்த உலகத்தமிழ் ஆராய்ச்சி மன்றம் தொடங்கிய 1964-ம் ஆண்டு முதல் இதுவரை 27 மாநாடுகள் நடந்திருக்க வேண்டும். ஆனால் பல்வேறு காரணங்களால் மொத்தம் 10 உலகத் தமிழ் மாநாடுகள்தான் நடைபெற்றுள்ளன. முதலாவது உலகத் தமிழ் மாநாடு 1966-ல் மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்றது. 2-வது உலகத் தமிழ் மாநாடு நடத்த காங்கிரஸ் ஆட்சியில் முதல்வராக இருந்த பக்தவச்சலம் ஒப்புதல் பெற்றார். ஆனால் தேர்தலில் காங்கிரஸ் தோற்று திமுக ஆட்சிக்கு வந்தது. முதல்வராக பேரறிஞர் அண்ணா பதவி வகித்த போது தமிழக அரசின் நிதி உதவியுடன் 1968-ல் சென்னையில் பிரமாண்டமாக 2வது உலகத் தமிழ் மாநாடு நடத்தப்பட்டது.
2-வது மாநாடு
1968-ம் ஆண்டு நடத்தப்பட்ட 2-வது உலகத் தமிழ் மாநாட்டின் போதுதான் சென்னை மெரினா கடற்கரையில் தமிழறிஞர்களுக்கு வரிசையாக சிலைகள் வைக்கப்பட்டன. இந்த மாநாட்டி ல் ஜனாதிபதியாக இருந்த ஜாகீர் உசேன், பிரதமராக இருந்த இந்திரா காந்தி உள்ளிட்டோர் இம்மாநாட்டில் பங்கேற்றனர். அப்போது பொதுப்பணித்துறை அமைச்சராக கருணாநிதி இருந்தார். அவரது முன்முயற்சியில்தான் சென்னை மெரினா கடற்கரையில் தமிழறிஞர்கள் சிலை உருவாக்கப்பட்டது. அதன் பின்னர் முதல்வராக கருணாநிதி பதவி வகித்த காலங்களில் உலகத் தமிழ் மாநாடுகள் நடத்துவதற்கு பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் அது நிறைவேறாமல் போனது.
எம்ஜிஆர், ஜெ. ஆட்சியில்...
எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த போது 1981-ம் ஆண்டு மதுரையில் 5-வது உலகத் தமிழ் மாநாடு நடத்தப்பட்டது. இந்த மாநாட்டிலும் பிரதமராக இருந்த இந்திரா காந்தி பங்கேற்றார். 1995-ம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்த போது தஞ்சாவூரில் 8-வது உலகத் தமிழ் மாநாட்டை நடத்தினார். ஆனால் அந்த மாநாட்டில் சிவத்தம்பி உள்ளிட்ட ஈழத் தமிழறிஞர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது மிகப் பெரும் சர்ச்சையானது. சென்னை விமான நிலையத்தில் இருந்தே தமிழறிஞர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதற்கு தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
செம்மொழி மாநாடு
பின்னர் 2010-ம் ஆண்டு கருணாநிதி ஆட்சிக் காலத்தில் கோவையில் உலகத் தமிழ் மாநாடு நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் அதற்கு ஒப்புதல் தராததால் செம்மொழி மாநாடாக நடைபெற்றது. கடைசியாக 10-வது உலகத் தமிழ் மாநாடு அமெரிக்காவின் சிகாகோ நகரில் 2018-ல் நடத்தப்பட்டது.
11-வது உலகத் தமிழ் மாநாடு
அடுத்ததாக 11-வது உலகத் தமிழ் மாநாடு நடத்தப்பட வேண்டும். இந்த 11-வது உலகத் தமிழ் மாநாடு நடத்துவதற்கு தற்போதே திமுக அரசு முன்முயற்சிகளை மேற்கொண்டு திட்டமிட்டால்தான் வெற்றிகரமாக நடத்த முடியும் என்பது தமிழறிஞர்களின் கருத்து. அதேநேரத்தில் தமிழகத்தில் கடும் அதிருப்தியை எதிர்கொண்டுள்ள மத்திய பா.ஜ.க. அரசு, 11-வது உலகத் தமிழ் மாநாடு நடத்துவது தொடர்பாக தீவிரமாக பரிசீலித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
திமுக அரசு நடத்துமா?
11-வது உலகத் தமிழ் மாநாடு நடத்துவதன் மூலம் தமிழக மக்களுடன் இணக்கமான சூழலை உருவாக்க முடியும் என்பது மத்திய பா.ஜ.க. அரசின் வியூகம். அதேநேரத்தில் 10 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆட்சியில் அமர்ந்துள்ள திமுக அரசு, உலகத் தமிழ் மாநாட்டை நடத்தி கருணாநிதியின் ஏக்கத்தை நிறைவேற்ற வேண்டும்; அண்ணாவுக்கு அடுத்ததாக முதல்வர் மு.க.ஸ்டாலின் உலகத் தமிழ் மாநாட்டை பிரமாண்டமாக நடத்தி சரித்திரம் படைக்க வேண்டும் என்பது மூத்த திமுக தலைவர்களின் எண்ணம்.