கருணாநிதி நினைவு நாள்.. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி.. திமுக அறிவிப்பு!
சென்னை: திமுக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவு தினத்தையொட்டி அமைதிப் பேரணி நடைபெறும் என்று திமுக அறிவித்துள்ளது.
தமிழக முன்னாள் முதலமைச்சரும், திமுக முன்னாள் தலைவருமான கருணாநிதியின் 4ம் ஆண்டு நினைவு தினம் வரும் ஆகஸ்ட் 7ம் தேதி அனுசரிக்கப்பட உள்ளது. அந்த நாளில் அவரது நினைவை போற்றும் வகையில், திமுக சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கவும் கட்சியினர் திட்டமிட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக திமுக சார்பாக மாரத்தான் போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மாரத்தான் போட்டிகளில் பங்கேற்பதற்கு பதிவுக் கட்டணமாக 42 கி.மீ. தொலைவு கொண்ட மாரத்தான் போட்டியில் பங்கேற்க ரூ.500ம், 21 கி.மீ. தொலைவு கொண்ட மாரத்தான் போட்டியில் பங்கேற்க ரூ.300ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் 10 கி.மீ. மராத்தான் மற்றும் 5 கி.மீ. மாரத்தான் போட்டிகளும் நடைபெறுகின்றன. இதற்கான பரிசுத்தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் மரக்கன்றுகள் நடும் விழாவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அதேபோல் மாணவர்களுக்கு உதவித்தொகை, நோட்டு, புத்தகங்கள் வழங்கவும் திமுக நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 7ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் அமைதிப் பேரணி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பேரணி ஆகஸ்ட் 7 ஆம் தேதி காலை 8.30 மணிக்கு சென்னை ஓமந்தூரார் வளாகத்தில் அமைந்துள்ள கருணாநிதி சிலை அருகே புறப்பட்டு, காமராஜர் சாலையில் அமைந்துள்ள கருணாநிதி நினைவிடம் வரை நடைபெறுகிறது. இதனைத்தொடர்ந்து பேரணியின் நிறைவில் கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்படுகிறது.
இதில் திமுக அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் திமுக நிர்வாகிகள் லட்சக்கணக்கானோர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் திமுக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மறைவையொட்டி பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கவும் திமுகவினர் திட்டமிட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications