Exclusive: கமலாலயத்தை தாக்கிய திமுக, பாஜகவுக்கு ரவுடி பட்டம் கொடுப்பதா? வானதி சீனிவாசன் கேள்வி
சென்னை: திமுகவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் எப்படி எப்படி கிரிமினல் செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்பதற்கு நானே சாட்சி என்று காட்டமாக தெரிவித்துள்ளார், தமிழக பாஜக துணைத் தலைவர் வானதி சீனிவாசன்.
'ஒன்இந்தியாதமிழ்' இணையதளத்திற்கு வீடியோ மூலம் அளித்த பேட்டியில், தமிழக அரசியல் தொடர்பாக வானதி சீனிவாசன் பல்வேறு முக்கிய விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
Recommended Video
திமுகவுடன் பாஜக கூட்டணி அமைக்குமா, பாஜகவில் ரவுடி பட்டியலில் இருந்த பலரும் இணைகிறார்களே.. என்பது உள்ளிட்ட பல கேள்விகளுக்கு தனக்கே உரித்தான புன்முறுவலுடன், அதேநேரம் காரசாரமாகவும் பதிலளித்தார் வானதி சீனிவாசன்.
இதோ அவரது பேட்டியிலிருந்து சில துளிகள்:
கேள்வி: அதிமுக கூட்டணியில் பாஜக இருக்கிறது. தமிழக சட்டசபை தேர்தலின்போது, யாருடைய தலைமையில் தேர்தலை சந்திப்பீர்கள்? முதல்வர் வேட்பாளராக பாஜக யாரையாவது முன்னிறுத்துமா?
வானதி சீனிவாசன்: கூட்டணி மற்றும் கூட்டணிக்கான தலைமை என்பதெல்லாம் தேர்தல் நேரத்தில்தான் முடிவெடுக்கப்படும். தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிமுகதான் தலைமையேற்று இருக்கிறது என்பதை பாஜக தேசிய தலைவர்கள் பலரும் ஏற்கனவே கூறியுள்ளனர். இதில் எந்த சந்தேகமும் கிடையாது.
கேள்வி: திமுகவுடன் கூட்டணி வைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறதா?
வானதி சீனிவாசன்: ஏதாவது ஒரு கட்சி அரசியலில் தீண்டத்தகாத கட்சி என்று இருக்கிறதா? நிச்சயமாக இல்லை. திமுக மற்றும் பாஜக இரண்டும் நேரெதிர் துருவங்களாக அரசியல் செய்யும் கட்சி. இருப்பினும் மத்தியில் பிரதமராக வாஜ்பாய் பதவியேற்கும்போது, பாஜக கூட்டணியில் திமுக இருந்தது என்பதை மறுக்க முடியாது.
திராவிட கட்சிகளுக்கு மாற்றாகவும், கழகங்கள் இல்லாத ஆட்சி என்பதும் எங்களது லட்சியம். ஆனால் அரசியல் கூட்டணி என்பது தேர்தலுக்காக அமைக்கப்படுவது. ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கொள்கை மற்றும் லட்சியம் இருக்கிறது. தேர்தல் அரசியல் என்று வரும்போது தேர்தல் கணக்குதான் கூட்டணிகளை உறுதி செய்யும்.
கேள்வி: ரவுடி பட்டியலில் இருந்தவர்கள் பாஜகவில் இணைவதாக வரும் விமர்சனங்கள் பற்றி..
வானதி சீனிவாசன்: ஒரு அரசியல் கட்சியில் சமுதாயத்தில் உள்ள அனைத்து வகை மனிதர்களும் இணையத்தான் செய்வார்கள். ஒரு நேரத்தில் அவர் குற்றவாளியாக இருந்தார் என்பதற்காக எப்போதுமே குற்றவாளி என்று கூறிவிடமுடியாது.
ஒருபோதும் கட்சியின் பெயரை பயன்படுத்தியோ, கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலோ யார் செயல்பட்டாலும் அதை பாஜக ஏற்றுக் கொள்ளாது. ஒரு சிலர் கிரிமினல் குற்றங்களில் இருந்து விடுதலை பெற்ற பிறகு கட்சிக்கு வந்து சேர்ந்துள்ளனர். இதற்காக கட்சி ஸ்திரத் தன்மையை இழந்துவிட்டது என்று கூறினால் அதை ஏற்க முடியாது. அவர்களும் திருந்துவதற்கு ஒரு வாய்ப்பு கொடுப்பதில் தவறு கிடையாது.
திமுக முன்வைக்கும் அடுத்த முழக்கம்.. தமிழ் எங்கள் உயிர்.. மு.க.ஸ்டாலின் அணிந்த கலக்கல் டி -ஷர்ட்..!
கல்லூரி ஆசிரியர்கள், பெண்கள், மாணவர்கள் என பலதரப்பட்டவர்களும் தினமும் பாஜகவில் வந்து சேருகிறார்கள். அதில், ஒரு சிலர் முன்பு குற்ற வழக்கில் இருந்தவர்கள். அவர்கள் கட்சியில் சேருவதை மட்டும் குற்றம் சொல்வது சரியில்லை. இப்படி குறை சொல்வது திமுகதான். ஆனால், திமுகவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் எப்படி எப்படி கிரிமினல் செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்பதற்கு நானே சாட்சி. பாஜக தலைமை அலுவலகம் கமலாலயத்தை அடித்து நொறுக்கி சேதப்படுத்திய திமுக நபர்கள் மீது நான் எனது கையால் போலீசில் புகார் எழுதிக் கொடுத்துள்ளேன்.
அப்படிப்பட்ட கட்சி, பாஜகவை ரவுடி கட்சி என்று கூறுவதில் ஒரு போதும் உண்மை கிடையாது. இவ்வாறு வானதி சீனிவாசன் தெரிவித்தார்.