திமுக எதிரி அல்ல.. இந்து மதத்தின் பொற்காலமாக ஸ்டாலின் ஆட்சி இருக்கும்.. சரவெடியாக மாறிய சேகர் பாபு
சென்னை: திமுக இந்து மதத்திற்கு எதிரிகள் இல்லை, திரிகள் என்றும் இந்து சமய அறநிலையத்துறைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி காலம் பொற்காலமாக இருக்கும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார்.
Recommended Video
இந்து சமய அறநிலையத்துறை மீதான மானியக்கோரிக்கை விவாதம் தமிழக சட்டசபையில் இன்று நடைபெற்றது. அதில் பங்கேற்று பேசிய அமைச்சர் சேகர்பாபுவுக்கு சட்டமன்ற உறுப்பினர்களும், சக அமைச்சர்களும் வாழ்த்து மழை பொழிந்தனர்.
மதிய உணவு இடைவெளிக்கு பிறகு பேசத் தொடங்கிய அமைச்சர் சேகர்பாபு முதல்வர் ஸ்டாலினை பாராட்டி புகழ்ந்ததோடு தனக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது குறித்தும் உருக்கமுடன் நன்றி தெரிவித்துக்கொண்டார்.
அதிகாரம் இருக்கிறது என்பதற்காக முதல்வர் ஸ்டாலின் உச்சாணிக் கொம்பில் அமராமல் அச்சாணியாக திகழ்ந்து கொண்டிருக்கிறார் எனத் தெரிவித்தார்.

அர்ச்சகர்களுக்குப் பங்கு
அன்னைத் தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்களுக்கு அர்ச்சனை கட்டணத்தில் 60 % பங்கு தொகை தரப்பட்டும் என அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்களை ஊக்குவிக்க சிறப்பு கட்டணச்சீட்டுகள் அறிமுகம் செய்யப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

பொற்கால ஆட்சி
தன்னை தேடி வருபவர்களுக்கு வரன் தரும் மூலவராகவும் வர இயலாதவர்களுக்கும் வீடு தேடிச்சென்று வரன் தரும் உற்சவராகவும் முதலமைச்சர் ஸ்டாலின் திகழ்வதாக அமைச்சர் சேகர்பாபு பாராட்டினார். திமுக இந்து மதத்திற்கு எதிரிகள் இல்லை, திரிகள் என்றும் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்காலத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் காலம் பொற்காலமாக இருக்கும் என்றார்.

கும்பாபிஷேகம்
1000 திருக்கோயில்களில் ரூ.500 கோடியில் திருப்பணிகள், பராமரிப்பு, புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என சட்ட பேரவையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார். தமிழர் பண்பாடு மற்றும் கலாசாரத்தை விளக்கும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடத்த கலாசார மையங்கள் அமைக்கப்படும் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். ராமேஸ்வரம், மதுரை, திருவண்ணாமலை கோவில்களில் முழு நேர அன்னதான திட்டம் செயல்படுத்தப்படும் அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலங்களை மீட்டெடுக்கும் வேட்டை தொடரும் எனவும் அவர் அறிவித்தார்.

சேகர்பாபு பெருமிதம்
திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி என்று பரப்படுவதாக மு.க ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்தார். இந்து சமயத்திற்கு எதிரான கட்சி இல்லை என்று அவ்வப்போது கூறி வரும் சேகர்பாபு இது ஆன்மீக அரசு என்றும் சில மாதங்களுக்கு முன்பு பேட்டி அளித்திருந்தார். இன்றைய தினம் சட்டசபையில் மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பேசும் போது இந்துமதத்திற்கு மு.க ஸ்டாலின் ஆட்சிக்காலம் பொற்காலம் என்று கூறியுள்ளார்.

ஆதீனம் பல்லக்கு சர்ச்சை
தருமபுரம் ஆதீனம் பட்டினப்பிரவேசம் பற்றிய கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளித்து பேசும் போதும் ஆதீனங்களுக்கு திமுக ஆட்சி காலத்தில் செய்யப்பட்ட நற்பணிகளைப் பட்டியலிட்டு முதல்வரின் கவனம் ஈர்த்தார். இந்துக்களுக்கு எதிரிகள் இல்லை திரிகள் என்று ரைமிங் ஆக பேசி அப்ளாஸ் அள்ளியுள்ளார் அமைச்சர் சேகர்பாபு.












Click it and Unblock the Notifications