'சம்பவக்காரர் ஸ்டாலின்'-ஆளுநருடனான மோதலை முன்வைத்து தீயா பகிரப்படும் திமுக ஐடிவிங் பதிவு!
சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் ஆளும் திமுக அரசு- மாநில ஆளுநர் ஆர்.என்.ரவி இடையேயான மோதலை முன்வைத்து சம்பவக்காரர் ஸ்டாலின் என்ற தலைப்பில் திமுக ஐடிவிங் வெளியிட்ட பதிவு சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு சட்டசபையில் நடப்பாண்டின் முதல் கூட்டத் தொடர் நேற்று காலை தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். பொதுவாக ஆளுநர் உரை என்பது ஆளும் மாநில அரசால் தயாரிக்கப்படும். பின்னர் ஆளுநரிடம் ஒப்புதல் பெறப்படும். அதனையே ஆளுநர் சட்டசபையில் வாசிப்பார்.
ஆனால் தமிழ்நாடு சட்டசபையில் நேற்று ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றுகையில், தமிழ்நாடு அரசு தயாரித்த உரையை அப்படியே வாசிக்காமல் சில பகுதிகளை மாற்றி, நீக்கி வாசித்தார். அதேபோல் தமிழ்நாடு அரசு என்பதற்கு பதில் இந்த அரசு என்றும் கருணாநிதியின் மேற்கோளை தவிர்த்தும் உரையாற்றினார் ஆளுநர் ஆர்.என்.ரவி. தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரது பெயரையும் தமது உரையில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி தன்னிச்சையாகவே நீக்கிவிட்டார். மேலும் திராவிட மாடல் அரசு, சமூகநீதி, சுயமரியாதை, பெண் உரிமை, மதநல்லிணக்கம் ஆகியவற்றையும் ஆளுநர் தவிர்த்துவிட்டார்.
இது சட்டசபையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் சட்டசபையில் ஆளுநர் சொந்தமாக இணைத்து, தவிர்த்து படித்தவை சபை குறிப்பில் இடம்பெறாது என கண்டனத் தீர்மானம் நிறைவேற்றினார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இதனால் அதிருப்தி அடைந்த ஆளுநர் தமிழ்நாடு சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தார். தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவியின் இந்த நடவடிக்கை கடும் விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது. ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக பல்வேறு முழக்கங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. ஆளுநர் ரவியின் நடவடிக்கையை பெரும்பாலான அரசியல் தலைவர்கள் கடுமையாக கண்டித்துள்ளனர்.
இந்நிலையில் திமுக ஐடிவிங் சம்பவக்காரர் ஸ்டாலின் என்ற தலைப்பில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளது. அந்தப் பதிவு சமூக வலைதளங்களில் திமுகவினரால் பகிரப்பட்டு வருகிறது. சம்பவக்காரர் ஸ்டாலின் என்ற தலைப்பில் திமுக ஐடிவிங் பதிவிட்டிருப்பதாவது: இந்திய அரசியலமைப்புச் சாசனத்தின் வழி நிறுவப்பட்ட ஒரு நியமனப் பதவியில் இருந்து கொண்டு சனாதனம், இந்து ராஷ்டிரம், அகண்ட பாரதம் என்றெல்லாம் இந்திய அரசியலமைப்புக்கு எதிராகவே பிதற்றி திரிந்து வந்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு, நூற்றாண்டு கண்ட தமிழ்நாடு சட்டப்பேரவையின் மைய மண்டபத்தில் வைத்து இன்று ஜனநாயக ரீதியில் பதில் கொடுத்திருக்கிறார் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
அரசு தயாரித்து, முன்பே ஆர்.என்.ரவியால் பேரவையில் வாசிக்க ஒப்புதல் வழங்கப்பட்ட அரசின் கொள்கைகள், சாதனைகள், எதிர்காலத் திட்டங்கள் அடங்கிய உரையில் குறிப்பிட்டவற்றை தவிர்த்து, தமது சனாதன கொள்கைகளை புகுத்த முயன்ற ஆர்.என்.ரவியின் முயற்சிகளை நேருக்கு நேர் கண்டித்ததுடன் அவை பேரவைக் குறிப்பிலும் இடம்பெறாது என தீர்மானம் நிறைவேற்றி அதிரடி காட்டியிருக்கிறார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின். முதல்வரின் இந்த எதிர்வினையை எதிர்கொள்ள முடியாமல் பேரவையில் இருந்து வெளியேறிய ஆளுநர் ரவியின் செயல், அவை மரபை மீறியதுடன் தமிழ்நாட்டு மக்களிடம் கடும் கோபத்தை உண்டாக்கியுள்ளது. ஆளுநரே வெளியேறு என குரல்கள் ஒலிக்கின்றன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.