'முகவர்களுக்கான கட்டுப்பாடுகள் சாத்தியமில்லை...' - தேர்தல் ஆணையத்திடம் திமுக கடிதம்
சென்னை: வாக்கு எண்ணும் மையத்திற்கு செல்லும் அரசியல் கட்சி முகவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளில் உள்ள முரண்களை களைய வேண்டும் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை மறுதினம் (மே.2) நடைபெறுகிறது. தமிழகத்தில் புதிய ஆட்சியை அமைக்க போவது யார் என்பது அன்று தெரிந்துவிடும்.
தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பிலும், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பிலும் திமுக ஆட்சியைப் பிடிக்கும் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், திமுக தலைமை மகிழ்ச்சியில் உள்ளது. அப்படி ஜெயிக்கும் பட்சத்தில், 10 ஆண்டுகளுக்கு பிறகு, மீண்டும் அதிகாரத்திற்கு வருகிறது திமுக. அதேசமயம், அதிமுக கேம்ப்பில் மயான அமைதி நிலவுகிறது. முக்கியமான தலைகள் கூட, தேர்தலில் தோற்க வாய்ப்புள்ளதாக கருத்துக்கணிப்புகள் தெரிவிப்பதால் ஏக அப்செட்டில் இருக்கிறது அதிமுக தலைமை. எல்லாம் இன்னும் 48 மணி நேரத்தில் தெரிந்துவிடும் என்பதால், இரு தரப்பும் பெரிதாக எதற்கும் ரியாக்ட் செய்யவில்லை.
எக்ஸிட் போல் கொடுத்த உற்சாகம்.. இன்று மாலை தி.மு.க வேட்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!
அடுத்த 10 நாட்களுக்கு
ஒருவேளை திமுக ஆட்சிக்கு வந்தாலும், கையெழுத்திட்ட அடுத்த நொடி முதல் ஏகப்பட்ட பிரச்சனைகள் க்யூவில் காத்திருக்கின்றன. அந்த பிரச்சனைகளுக்கு தலைமை தாங்குவது சாட்சாத் கொரோனா தான். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா அதிகரிக்கிறது என்று சொல்வதை விட, எகிறுகிறது என்று தான் சொல்ல வேண்டும். அடுத்த 10 நாட்களுக்கு, மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று தெரிவித்துள்ளார். இந்த இக்கட்டான நிலையில் தான், தேர்தல் வாக்குகள் மே 2ம் தேதி எண்ணப்படுகின்றன.
72 மணி நேரத்திற்குள்
இந்த நிலையில், தலைமை தேர்தல் ஆணையரும், தமிழக தலைமை தேர்தல் அதிகாரியும், வாக்கு எண்ணும் மையத்தில் அரசியல் கட்சி முகவர்கள் பின்பற்ற வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து இருவேறு அறிவிப்புகள் வெளியிட்டுள்ளனர். தலைமை தேர்தல் அதிகாரியை பொறுத்தவரை, அரசியல் கட்சி முகவர்கள் 72 மணிநேரத்திற்குள் கொரோனா பரிசோதனை மேற்கொண்டிருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும், கொரோனா தடுப்பூசி ஒரு தவணை போட்டிருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேசமயம், அரசியல் கட்சி முகவர்கள் 48 மணிநேரத்திற்கு முன் கொரோனா பரிசோதனை மேற்கொண்டிருக்க வேண்டும் எனவும்,கொரோனா தடுப்பூசி இரண்டு தவணையும் போட்டிருக்க வேண்டும் என்றும் தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
சாத்தியமில்லை
இந்த நிலையில், அடிப்படையில் மாறுபட்ட இந்த அறிவிப்புகளில் உள்ள முரண்களைக் களைய வேண்டும் என வலியுறுத்தி உள்ள ஆர்.எஸ்.பாரதி, அரசியல் கட்சி முகவர்கள், முழு கவச உடை அணிய வேண்டும் என்ற தலைமை தேர்தல் ஆணையத்தின் உத்தரவை, பல்வேறு மருத்துவப் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். அதில், "ஒரு டோஸ் தடுப்பூசி தேவையா அல்லது இரண்டு டோஸ் தடுப்பூசி தேவையா என்பது தெரியவில்லை. முதல் டோஸ் போட்ட நாளிலிருந்து 4 முதல் 8 வாரங்கள் வரை காத்திருக்காமல், தடுப்பூசி இரண்டாவது டோஸ் பெறுவது சாத்தியமில்லை" என்று திமுக தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நமது கடமை
இதுகுறித்து ஆர்.எஸ்.பாரதி கூறுகையில், "தடுப்பூசி அளவைப் பெறுவதில் 'பெரும் பற்றாக்குறை' நிலவுகிறது. இந்த சூழலில் வேட்பாளர்கள் இரண்டு டோஸ்களையும் போட்டிருக்க வேண்டும் என்று வலியுறுத்துவது நடைமுறையில் சிரமமாகும். அமைதியான மற்றும் விரைவான வாக்கு எண்ணும் செயல்முறைக்கு தடையாக இருக்கும் நடைமுறை சிக்கல்களை சுட்டிக்காட்டுவது நமது கடமையாகும்" என்று தெரிவித்துள்ளார்.