அதிமுக மட்டும்தான் எதிரி.. சொல்லாமல் சொன்ன ஸ்டாலின்! விஜய் எல்லாம் பொருட்டே இல்லையாம்! கவனிச்சீங்களா
சென்னை: தி.மு.க.வின் முப்பெரும் விழா கரூரில் நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. இவ்விழாவில் தி.மு.க. தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குறித்து அவர் தனது உரையில் கடுமையாக விமர்சித்தார்.
கொள்கைகள் என்றால் என்னவென்று அறியாத எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க.வையே மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் அடமானம் வைத்துவிட்டதாக முதல்வர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார். தி.மு.க. ஆட்சியின் கடந்த நான்காண்டுகால சாதனைகளையும், நலத்திட்டங்களையும் அவர் பட்டியலிட்டார்.

தி.மு.க.வின் முப்பெரும் விழா
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலுக்காக தி.மு.க. தொண்டர்கள் தீவிரமாக உழைக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். மத்திய அரசு தமிழகத்திற்கு போதிய ஆதரவு தராவிட்டாலும், பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
"ஆட்சி அதிகாரத்தில் இருந்த காலகட்டத்தில் தமிழக மக்களுக்கு எதுவும் செய்யாத எடப்பாடி பழனிசாமி, தற்போது மக்களின் குரலாக ஒலிக்க திராணியற்று பா.ஜ.க.விற்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துள்ளார். இப்போதும் பா.ஜ.க. தன்னுடன் இருப்பதாக அவர் வாய்க் கொழுப்போடு பேசி வருகிறார்" என்று ஸ்டாலின் சுட்டிக்காட்டினார்.
ஸ்டாலின் எடப்பாடி அட்டாக்
மேலும், எதிர்க்கட்சித் தலைவர் என்ற கண்ணியத்தைக் கூட எடப்பாடி பழனிசாமி கடைபிடிக்காமல் தன்னைப் பற்றி ஒருமையில் பேசுவதாகவும் ஸ்டாலின் விமர்சித்தார். "கொள்கை இல்லாத அவரது தரம் தாழ்ந்த பேச்சுக்கு நான் பதில் சொல்லத் தேவையில்லை" என்றும் அவர் கூறினார்.
திராவிடம் என்றால் என்னவென்றே தெரியாதவர் எடப்பாடி பழனிசாமி என்பது வெட்கக்கேடானது என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டார். அ.தி.மு.க. அண்ணா வழி வந்த கட்சி என்றார்கள், ஆனால் அதை அடிமையிசம் என்று மாற்றி, அமித் ஷாவிடம் சரணடைந்துவிட்டார் என்றும் சாடினார்.
எடப்பாடி மீது ஸ்டாலின் கடும் விமர்சனம்
சமீபத்தில் டெல்லியில் அமித் ஷாவை சந்தித்தபோது, எடப்பாடி பழனிசாமி தனது முகத்தை கர்சீப்பால் மூடியிருந்த சம்பவத்தை முதல்வர் ஸ்டாலின் சுட்டிக்காட்டினார். "காலிலேயே விழுந்த பிறகு முகத்தை மூடிக்கொள்ள கர்சீப் எதற்கு" என்று மக்கள் கேட்பதாக அவர் கேலியாகத் தெரிவித்தார்.
இந்த விமர்சனத்தின் போது, மேடையில் உடனிருந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிரித்ததோடு, தொண்டர்களும் உற்சாகமாக ஆரவாரம் செய்தனர். எடப்பாடி பழனிசாமி உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த பின்னர் முகத்தை மூடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி, அரசியல் அரங்கில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது, என்று ஸ்டாலின் கடுமையாக தாக்கி பேசி இருந்தார்.
விஜய் ஸ்டாலின்
இந்த கூட்டத்தில் ஒருமுறை கூட விஜய் பற்றிய ஸ்டாலின், இந்த கூட்டம் முழுக்க விஜயை ஒரு பொருட்டாக மதித்தது போல கூட ஸ்டாலின் காட்டவில்லை. இன்னும் சொல்லப்போனால் அதிமுகதான் ஒரே எதிரி.. மற்ற கட்சிகளுக்கு எல்லாம் அந்த தகுதி இல்லை என்று ஸ்டாலின் சொல்லாமல் சொல்லி இருக்கிறார்.
சமீபத்தில் விஜயின் அங்கிள் பேச்சு வெளியாகி சர்ச்சையானது. இதை ஸ்டாலினும் கவனித்து இருக்கிறார். ஆனால் அதை அவர் கண்டுகொள்ளவில்லை. விஜய் என்னவேண்டுமானாலும் பேசட்டும், அவரை எல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ள கூடாது என்று ஸ்டாலின் புறந்தள்ளிவிட்டார் என்று கூறப்படுகிறது.
விஜய் பேசியதை பற்றி பெரிதாக அவர் கொஞ்சம் கூட அலட்டிக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. விஜய், முதல்வர் ஸ்டாலினை கடுமையாகக் கேலி செய்த போதிலும், ஸ்டாலின் இதுவரை விஜய் குறித்துப் பேசியதில்லை. விஜயை ஒரு பொருட்டாக கூட ஸ்டாலின் பார்ப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாகவே விஜயின் பேச்சு, எப்படியாவது ஸ்டாலினை பேச வைக்க வேண்டும் அல்லது விமர்சனத்தைப் பெற வேண்டும் என்ற திட்டத்துடன் அமைந்திருந்தது.
"அங்கிள்" என்று சொன்னால் ஸ்டாலின் கோபப்பட்டு விமர்சிப்பாரா, அல்லது தனக்கு பதிலடி கொடுத்து தன்னை முக்கியத்துவம் வாய்ந்தவராகப் பார்க்க வைப்பாரா என்ற நோக்கத்துடன் விஜய் பேசியதாகத் தோன்றியது. ஆனால், விஜய் கருத்துக்கு பதிலடி தர வேண்டாம் என திமுக மேலிடம் கட்சித் தலைவர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
செயலாளர் அளவில் உள்ள சிலர் மட்டும் இப்போதைக்குப் பதிலடி தரட்டும் என்றும், இதற்கு மேல் யாரும் பதிலடி தர வேண்டாம் என்றும் திமுக தலைமை அறிவுறுத்தியுள்ளது. விஜய் அவர்களுக்குப் போட்டியே இல்லை என்றும், அவரைப் பொருட்படுத்த வேண்டாம், முக்கியத்துவம் தர வேண்டாம் என்றும் கட்சித் தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications