“காவல்துறைக்கு கொடுத்த வாக்குறுதி என்னாச்சு?” முதலமைச்சருக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி
சென்னை: 20 ஆண்டுகள் பணிமுடித்த காவலர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படும் என திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்தது, ஆனால் தற்போது அது நடைமுறை சாத்தியமற்றதாக இருக்கிறது என்று தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், "சொன்னதைச் செய்வோம், செய்வதைச் சொல்வோம் என்று வாயளவில் நாடக வசனம் முழங்கிவிட்டு, 'சொல் வேறு, செயல் வேறு' என்று செயல்படுவதையே வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார், காவல் துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

கடந்த 2021 திமுக தேர்தல் அறிக்கை எண். 389-ல், 20 ஆண்டுகள் பணிமுடித்த காவலர்களுக்கு சிறப்பு சார்பு ஆய்வாளர்களாக பதவி உயர்வு வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளனர். ஓட்டுக்காக வாக்குறுதி அளிப்பதும், அதிகாரம் கைக்கு வந்தவுடன் அவைகளைக் காற்றிலே பறக்கவிடுவதும் திமுக-விற்கு கை வந்த கலை.
இந்தப் புதிய பதவி உயர்வு உத்தரவால், புதிதாக பணியில் சேரும் காவலர்களுக்கு ஏதாவது பலன் இருக்குமோ, இல்லையோ, 2001-2005 காலகட்டங்களில் பணியில் சேர்ந்த சுமார் 35,000 காவலர்களுக்குப் பதவி உயர்வில் பாதிப்பு ஏற்படும் என்றும், நடைமுறைச் சிக்கல்கள் ஏற்படும் என்றும் காவலர்கள் தெரிவிக்கின்றனர்.
மக்களைக் காக்கும் பணியில் உள்ள பெரும்பாலான காவலர்கள் பாதிக்கப்படக்கூடிய இந்த உத்தரவை திரும்பப்பெற வேண்டும் என்றும், பணியில் உள்ள காவலர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல், 2021-ல் திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிப்படி 20 ஆண்டுகள் பணிமுடித்த காவலர்களுக்கு சிறப்பு சார்பு ஆய்வாளர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும் என்றும், விடியா தி.மு.க. ஸ்டாலின் மாடல் அரசை வலியுறுத்துகிறேன்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications