இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே! 5வது வேட்பாளரை களமிறக்கும் திமுக? அதகளமாகும் அதிமுக? அவர் வர்றாரா?
சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை (ராஜ்யசபா) உறுப்பினர் தேர்தல் ஜூன் 19ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. திமுக சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில், அதிமுக வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளனர். இந்த நிலையில் தேவையை விட திமுகவிடம் 23 எம்எல்ஏக்கள் உபரியாக இருக்கும் நிலையில் ஐந்தாவது வேட்பாளரை கூட நிறுத்தலாம் என்கின்றனர். இதற்கான சாத்திய கூறுகள் குறித்து திமுக தலைமை ஆராய்ந்து வருகிறது.
தமிழகத்திற்கு மாநிலங்களவையில் 18 எம்பிக்கள் இருக்கின்றனர். 6 இடங்களுக்கு என இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் தற்போது திமுக மாநிலங்களவை உறுப்பினர்களான வில்சன், சண்முகம், அப்துல்லா, அதிமுகவின் சந்திரசேகரன், பாமகவின் அன்புமணி, அதிமுகவின் வைகோ ஆகிய பதவி காலம் ஜூலை 24-ஆம் தேதியோடு நிறைவடைகிறது.
இதனை அடுத்து புதிதாக ஆறு புதிய மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்வு செய்ய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது தேர்தல் ஆணையம். ஜூன் இரண்டாம் தேதி மனு தாக்கல், ஜூன் 9ஆம் தேதி மனுதாக்கல் நிறைவு நாளும் வருகிறது.

ஒருவேளை போட்டி இருந்தால் ஜூன் 19ஆம் தேதி ஓட்டுப்பதிவு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது. அன்றைய தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்படும். தற்போதைய சூழலில் திமுக வேட்பாளர்களாக ஏற்கனவே எம்பியாக இருக்கும் வில்சன், கவிஞர் சல்மா, எஸ்ஆர் சிவலிங்கம் ஆகியோர் அறிவிக்கப்பட்டிருக்கின்றனர். மக்களவை தேர்தல் கூட்டணி ஒப்பந்தத்தின் படி மக்கள் நீதி மைய தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் நான்காவது வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். திமுகவுக்கு நான்கு எம்பிக்கள் உறுதியாக இருக்கும் இடையில் அதிமுகவுக்கும் இரண்டு எம்பிக்கள் கிடைப்பது உறுதி.
தற்போதைய சூழ்நிலையில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் திமுகவுக்கு 134 சட்டமன்ற உறுப்பினர்களும், அதிமுகவுக்கு 66 சட்டமன்ற உறுப்பினர்களும் இருக்கின்றனர். காங்கிரஸ் 17, பாமக 5, பாஜக நான்கு, விசிக 4, சிபிஐ 2, சிபிஎம் 2, மனிதநேய மக்கள் கட்சி, கொங்கு மக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, புரட்சி பாரதத்துக்கு தலா 1 உறுப்பினர்களும் இருக்கிறார்கள்.
அந்த வகையில் திமுக கூட்டணிக்கு 159 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள் நான்கு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு 156 எம்எல்ஏக்கள் ஆதரவு போதும் என்பதால், திமுகவுக்கு 23 வாக்குகள் உபரியாக இருக்கிறது. இதனால், கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு கூடுதல் வேட்பாளரை கூட இறக்க முடியும். அதாவது ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்கும் 4 வேட்பாளர்களோடு, ஐந்தாவது வேட்பாளரை கூட திமுக நிறுத்தலாம் எனக் கூறப்படுகிறது.
ஒருவேளை திமுக அப்படி ஐந்தாவது வேட்பாளர் நிறுத்தினால் பன்னீர்செல்வம் தரப்பு திமுகவுக்கு ஓட்டு போட்டாலும் அல்லது ஓட்டு போடாமல் தவிர்த்தாலும், அதிமுகவுக்கு சிக்கல் உருவாகும். 4 உறுப்பினர்களை வைத்திருக்கும் நிலையில் கடைசி நேர தகவல் முயற்சிகளும் இருக்கலாம். ஒருவேளை தேர்தல் வந்தால் எம்எல்ஏக்கள் இரண்டாவதாக விருப்ப ஓட்டு ஒன்றையும் போடலாம். அதில் யார் அதிக வாக்குகளை பெறுவார்களோ? அவர்களே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள். இதனால் புதிதாக ஒரு அதிரடியை திமுக அரங்கேற்றுமா? என்பது தான் எதிர்பார்ப்பாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications