விளைவுகள் மோசமா இருக்கும்.. ஜெ பாணியில் சுழற்றிய ஸ்டாலின்! அவரை மாதிரி இல்லையே.. அஞ்சிய நிர்வாகிகள்
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு எதிராகவே போட்டியிட்டு வென்ற திமுக நிர்வாகிகளுக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறார். இதில் இன்னும் சில கடுமையான நடவடிக்கைகள் வரும் நாட்களில் எடுக்கப்படலாம் என்ற தகவல்கள் வருகின்றன.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றியை பெற்றது. இதையடுத்து தலைவர், துணை தலைவர் பதவிகளுக்கு நடைபெற்ற மறைமுக தேர்தலில் சில இடங்களில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டு இருந்த இடங்களில் திமுக வேட்பாளர்கள் போட்டியிட்டு வென்றனர்.
விசிக, காங்கிரஸ், சிபிஎம் உள்ளிட்ட கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுகவினர் போட்டியிட்டு வென்றனர். தலைவர் பதவி வரும் என்றுதான் அவ்வளவு செலவு செய்தோம், இதை எப்படி கூட்டணிக்கு கொடுக்கலாம் என்று கேள்வி எழுப்பி, திமுகவினர் கூட்டணி கட்சிகளுக்கே எதிராக களமிறங்கி வென்றனர்.
தமிழ்நாடு உள்ளாட்சி பதவியேற்பில் பல இடங்களில் தகராறு: அடிதடி, கூட்டணிக்கு ஒதுக்கிய இடத்தில் போட்டி
ஸ்டாலின் ஸ்டிரிக்ட்
திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலினை இந்த விஷயம் டென்ஷனாக்கிய நிலையில் உடனே இவர்கள் எல்லோரும் பதவி விலக வேண்டும். என்னை நேரில் வந்து சந்திக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இதையடுத்து பல்வேறு நிர்வாகிகள் தொடர்ந்து தங்கள் நகராட்சி, பேரூராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர் பதவிகளை ராஜினாமா செய்தனர். ஆனாலும் இப்படி கூட்டணி கட்சிகளை வீழ்த்த துணையாக இருந்தவர்கள் மீது திமுக தலைமை கடுமையான நடவடிக்கை எடுத்தது.
தவறு என்றால் நடவடிக்கை
நகர செயலர்கள் ஏன் கடலூர் எம்எல்ஏ அய்யப்பன் உட்பட பலர் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பூந்தமல்லி நகர செயலாளர் ரவி குமார், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ் ராஜன் அவரின் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். இன்னும் சில சிறிய அளவிலான நிர்வாகிகளும் நீக்கப்பட்டு உள்ளனர். அதோடு மேலும் சிலர் வரும் நாட்களில் தற்காலிகமாக நீக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
நம்பிக்கை இல்லா தீர்மானம்
ஆனால் முதல்வர் ஸ்டாலினின் இந்த உத்தரவையும் மீறி சில நிர்வாகிகள் இன்னும் தங்கள் பதவியை ராஜினாமா செய்யவில்லை. நாங்கள் தேர்தல் செலவு செய்தோம் நாங்கள் ராஜினாமா செய்ய முடியாது என்று சில நிர்வாகிகள் முரண்டு பிடித்து வருகின்றனர். இவர்களை திமுகவில் தற்காலிகமாக அல்லாமல் நிரந்தரமாக நீக்கும் முடிவில் கட்சி தலைமை இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் இவர்கள் இருக்கும் நகராட்சி, பேரூராட்சி மன்றங்களில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து, அவர்களை பதவி இழக்க செய்யும் திட்டமும் தலைமையிடம் உள்ளதாக கூறப்படுகிறது.
ஜெ பாணி
கிட்டத்தட்ட ஜெயலலிதா பாணியை முதல்வர் ஸ்டாலின் கையில் எடுத்துள்ளார். அவர்தான் சிறிய அளவிலான நிர்வாகிகளுக்கு திடீரென வாய்ப்பு கொடுத்து வளர்த்துவிடுவார். அதே சமயம் எவ்வளவு நெருக்கமாக இருந்தால் தனது உத்தரவை மதிக்கவில்லை என்றால் உடனே அவர்களை நீக்குவார் அல்லது நடவடிக்கை எடுப்பார். ஆனால் முன்னாள் முதல்வர் கருணாநிதி இப்படி ஒருபோதும் செய்ய மாட்டார். அவர் கட்சியினரை அனுசரித்து செல்வார்.
இதற்கு முன்பே நடந்தது
முதல்வராக கருணாநிதி இருந்த போது ஒரு உள்ளாட்சி தேர்தலில் இப்படி கூட்டணி கட்சியினர் இடங்களில் திமுகவினர் வென்றனர். அப்போது ஸ்டாலின் போல கருணாநிதி நடவடிக்கை எடுக்கவில்லை. அப்போது இது போன்ற ஸ்டிரிக்ட் ஆக்சன்கள் எடுக்கப்படாமல் பிரச்சனை முடிந்தது. ஆனால் முதல்வர் ஸ்டாலினோ, கூட்டணி கட்சிகளும் முக்கியம், அதிகார பகிர்வு முக்கியம் என்பதால் சொந்த கட்சி நிர்வாகிகள் மீதே கடுமையான நடவடிக்கையை எடுத்துள்ளார்.
அஞ்சும் நிர்வாகிகள்
இதைத்தான் சமீபத்தில் நடந்த தூத்துக்குடி கூட்டத்தில் கூட தவறு செய்தால் தண்டனை கடுமையாக இருக்கும் என்று எச்சரிக்கை விடுத்து இருந்தார் முதல்வர் ஸ்டாலின். திமுக நிர்வாகிகளும் கூட முதல்வர் ஸ்டாலின் கருணாநிதி போல இல்லை. இவர் கண்டிப்புடன் இருக்கிறார் என்று கொஞ்சம் அச்சத்துடன் கூறி வருகிறார்களாம். ஆனால் முதல்வர் ஸ்டாலின் தரப்போ மா செக்கள் மீது கோபத்தில் எல்லாம் இல்லை. தேர்தல் நேரத்தில் அவர்கள் செய்த பணியால் மிகுந்த உற்சாகத்தில்தான் இருக்கிறார்.. சிலர் செய்த உள்ளடி வேலைகள்தான் அவரை வருத்தத்திற்கு உள்ளாக்கி உள்ளது என்று அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.