அத்தைக்கு மீசை முளைக்கட்டும்.. இது திராவிட மண்.. தமிழக பாஜகவுக்கு திமுக அமைச்சர் பதிலடி
அண்ணாமலைக்கு திமுக அமைச்சர் சேகர் பாபு பதிலடி தந்துள்ளார்
சென்னை: அத்தைக்கு மீசை முளைக்கட்டும், அப்பறம் சித்தப்பா என பெயர் வைக்கலாம்.. இது திராவிட மண்" என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை அமைச்சர் சேகர்பாபு விமர்சித்துள்ளார்.
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு சேப்பாக்கம் பகுதி சார்பில் திமுக மூத்த முன்னோடிகள் 100 பேருக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி சிந்தாதரிபேட்டையில் இன்று நடந்தது.
புதுச்சேரியில் திடீரென வெடித்த மர்மப் பொருள்... தரைமட்டமான வீடு.. 3 பேர் கவலைக்கிடம்!
இந்த நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டு, திமுக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழியை வழங்கினார்.
பேட்டி
பிறகு செய்தியாளர்களிடம் பேசியபோது அமைச்சர் சேகர்பாபு சொன்னதாவது: "மக்கள் பலன் பெறும் வகையில் நலத்திட்டங்களை வழங்கி கொண்டு வருகிறோம்.. அடுத்த அரை நூற்றாண்டுக்கு திமுக தலைவருக்கு தோள் கொடுக்கும் வகையில் உதயநிதி ஸ்டாலின் இருக்கிறார்.. மழைக்காலத்திலும் தொடர்ந்து மக்களை நேரில் சந்தித்து வருகிறார் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின்..
உழைப்பு
நாளை நாங்கள் தான் ஆட்சிக்கு வருவோம் என்பவர்கள் கூட பத்திரிக்கை செய்திகளுக்காக சில நாட்களுக்கு மட்டும் வந்துவிட்டு சென்றுவிட்டனர்.. தரைதட்டும் இடத்தில் படகு விடுகின்றனர்... முதல்வருக்கு பின் தமிழகத்தில் அதிக தூரம் பயணித்தவர் உதயநிதி ஸ்டாலின்.. அவர் இரவு பகல் பாராமல் உழைத்துள்ளார்.. அவர், நேரடியாக பதவிக்கு வரவில்லை.. திமுகவில் உழைப்பவரே உயர்வு பெறுவர்" என்றார்.
கலைஞர் உணவகம்
பின்னர், கலைஞர் உணவகம் திட்டம் குறித்து ஓ.பன்னீர்செல்வம் கருத்து குறித்து செய்தியாளர்கள் சேகர்பாபுவிடம் கேள்வி எழுப்பினர்.. அதற்கு அவர், "இன்னார் இனியவர்களுக்கு என்று பார்ப்பதில்லை.. ஏற்கனவே அம்மா உணவகத்தின் மீது தாக்குதல் நடத்தியவர்களை சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுத்துள்ளனர்.. புதிய திட்டம் தான் கலைஞர் உணவக திட்டம்.. ஏற்கனவே இருக்கின்ற திட்டத்தை எடுக்கும் திட்டம் இந்த ஆட்சியில் இல்லை.. அதுபோன்ற காழ்ப்புணர்ச்சி கொண்டவர் இல்லை நம் முதலமைச்சர்" என்றார்.
அண்ணாமலை
பாஜக 2026-ல் ஆட்சிக்கு வரும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சொல்லி இருக்கிறாரே என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, முதலில் அத்தைக்கு மீசை முளைக்கட்டும், சித்தப்பா என பெயர் அப்பறம் வைக்கலாம்.. இது திராவிட மண்.." என்று அண்ணாமலைக்கு பதிலளித்தார் அமைச்சர் சேகர்பாபு... முன்னதாக, கலைஞர் உணவகம் குறித்து வரவேற்பதாக அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கருத்து கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.