அதிசயம் ஆனால் உண்மை... எந்த அமைச்சரும் முதலமைச்சர் ஸ்டாலின் காலில் விழவில்லை..!
சென்னை: தமிழக அமைச்சர்களாக பொறுப்பேற்றவர்கள் யாரும் முதலமைச்சர் காலில் விழவில்லை என்பது இன்றைய தினம் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாக திகழ்கிறது.
பொதுவாக இது போன்ற தருணங்களில் உணர்ச்சிவசப்பட்டு தலைமைக்கு தங்கள் நன்றியை தெரிவிக்கும் பொருட்டு காலில் விழுந்து வணங்கும் நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம்.
ஆனால் சுயமரியாதையை கொள்கையாக பின்பற்றுவதாலோ என்னவோ இந்தச் சடங்குகளை திமுக அமைச்சரவை பதவியேற்பு விழாவில் காண முடியவில்லை.

திமுக அமைச்சரவை
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அமைச்சரவையில் இடம்பெற்றவர்கள் அனைவரும் இன்று காலை ஆளுநர் மாளிகையில் பதவியேற்றுக் கொண்டனர். அப்போது முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்திருந்த ஸ்டாலினை நோக்கி அவர்கள் வணக்கம் மட்டுமே தெரிவித்தனர். ஒரு சிலர் பொன்னாடையை கையில் கொடுத்து தங்கள் நன்றியையும், மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினர்.

காலில் விழவில்லை
இதில் ஒருவர் கூட ஸ்டாலின் காலில் விழவில்லை என்பது சற்று கூர்ந்து கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாக திகழ்கிறது. யாரும் யாருக்கும் அடிமைகள் இல்லை என்பதை உணர்த்தும் விதமாகவும் அமைச்சர்கள் அவரவர் சுயமாக செயல்படுவதற்கு உரிய சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது என்பதை குறிப்பிடும் விதமாகவும் இந்தக் காட்சிகள் அமைந்திருக்கின்றன.

பதவிப் பிரமாணம்
ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்த பிறகு மேடையில் அமர்ந்திருந்த ஸ்டாலினை நோக்கி கம்பீரமாக வணக்கம் தெரிவித்துவிட்டு அமைச்சர்கள் சென்றார்கள். மேலும், அவர்கள் எல்லோரும் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வரும்போதும் சரி அதற்கு பிறகு அங்கிருந்து செல்லும் போதும் சரி மிக கேசுவலாக எப்போதும் போல் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கேசுவல்
அமைச்சர் பதவி கிடைத்துவிட்டது என்பதற்காக ஸ்டாலினின் காலில் விழுந்து வணங்கியோ, அவரது புகழ் புராணம் பாடவோ இல்லை. மாறாக தங்கள் புன்னகையை மட்டுமே ஸ்டாலினை நோக்கி செலுத்தினர். இதனிடையே சுற்றுலாத்துறை அமைச்சராக பதவியேற்ற டாக்டர் மதிவேந்தன் மட்டும் முதல் முறை அமைச்சரானதால் சற்று பதற்றத்துடன் காணப்பட்டார்.












Click it and Unblock the Notifications