''முறைகேடுகளின் மொத்த உருவம் பழனிசாமி ஆட்சி''! சி.ஏ.ஜி.அறிக்கையை அலசி ஆராய ஆரம்பித்த முரசொலி!
சென்னை: எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கடந்த அதிமுக ஆட்சியில், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளின் கணினிகள் மூலம் ஒப்பந்ததாரர்கள் டெண்டர் தாக்கல் செய்திருப்பது சிஏஜி அறிக்கை மூலம் இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ஒரே ஐ.பி. முகவரியில் இருந்து தாக்கல் செய்யப்பட்ட 490 டெண்டர்கள் ஏற்கப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் அதிகபட்ச போட்டி ஏலத்தைப் பெற வேண்டும் என்ற துறையின் முயற்சி நிறைவேறவில்லை எனவும் சிஏஜி ரிப்போர்ட் சுட்டிக்காட்டியுள்ளது.

இதனிடையே சி.ஏ.ஜி. அறிக்கை குறித்து முரசொலி வெளியிட்டுள்ள தலையங்கம் வருமாறு;
''தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் என்பது இந்திய அரசு, மாநில அரசுகளின் வரவு செலவுக் கணக்கை சரிபார்க்கும் அதிகாரம் கொண்ட அமைப்பு ஆகும். இதன் தலைவராக இருப்பவர் குடியரசுத் தலைவருக்கு நேரடியாகக் கட்டுப்பட்டவர் ஆவார்.

இத்தகைய தணிக்கைத் துறையின் அறிக்கை வெளியாகி இருக்கிறது. பழனிசாமி முதலமைச்சராக இருந்த காலத்தில் என்ன மாதிரி நடந்து கொண்டுள்ளார் என்பதை கண்ணாடியைப் போல எடுத்துக் காட்டுகிறது இந்த அறிக்கை.
தமிழக நெடுஞ்சாலைத் துறையின் 2016 முதல் 2021 வரையிலான செயல்பாடுகள் குறித்து சி.ஏ.ஜி. எனப்படும் இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறைத் தலைவரின் அறிக்கை தமிழக சட்டப்பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதில் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளின் கணினிகளைப் பயன்படுத்தி ஒப்பந்ததாரர்கள் டெண்டரை சமர்ப்பித்து உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில் ஒப்பந்ததாரர்களால் ஏலம் சமர்ப்பிக்கப் பட்ட கணினியின் அடையாள முகவரியும், துறை சார்ந்த பயனர்களின் அடையாள முகவரியும் தரவுத் தளம் கைப்பற்றியது. ஏலங்கள் சமர்ப்பிக்கப்பட்ட அடையாள முகவரி மற்றும் துறை பயனர்களுடன் அடையாள முகவரியுடன் ஒப்பிடுகையில், ஒப்பந்ததாரர்கள் தங்களின் ஏலங்களைச் சமர்ப்பிக்க நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளின் கணினிகளைப் பயன்படுத்தியது தெரியவந்தது.
2019ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளின் 57 கணினிகளைப் பயன்படுத்தி 87 ஒப்பந்ததாரர்கள் டெண்டர் தாக்கல் செய்துள்ளனர். இந்தக் காலகட்டத்தில் 2091 டெண்டர்கள் ஒரே கணினியைப் பயன்படுத்தி தாக்கல் செய்யப் பட்டுள்ளதாக அறிக்கை கூறுகிறது.
இந்த மூன்று ஆண்டில் கோரப்பட்ட 907 ஒப்பந்தப் புள்ளிகளில் ஒவ்வொரு ஒப்பந்தப் புள்ளிக்கும் 2 முதல் 4 டெண்டர்கள் ஒரே ஐ.பி. முகவரியில் இருந்து தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஒரே ஐ.பி. முகவரியில் இருந்து தாக்கல் செய்யப்பட்ட 490 டெண்டர்கள் ஏற்கப்பட்டுள்ளன.
ஏலதாரர்கள், துறைசார் கணினிகளின் வாயிலாக ஏலங்களைச் சமர்ப்பித்ததின் மூலம் ஒப்பந்தப் புள்ளி நெறிமுறைகளை மீறியதையும். அதிகபட்ச போட்டி ஏலத்தைப் பெற வேண்டும் என்ற துறையின் முயற்சியும் நிறைவேறவில்லை.
மே 2022 இறுதிக் கலந்தாய்வின்போது முதன்மைச் செயலாளர் இதைப் பரிசீலனை செய்வதாக உறுதி அளித்தார்.
அரசு இதை ஏற்றுக் கொண்டு ஆகஸ்ட் 2022-ல் இதுபோன்ற தவறுகளை ஆய்வு செய்து, இதுபோன்ற செயல்கள் மீண்டும் நிகழாத வகையில் கடுமையான நடவடிக்கை எடுக்க அனைத்து ஒப்பந்தப் புள்ளி அழைக்கும் அதிகாரிகளுக்கும் தகுந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டதாகக் கூறியது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.''












Click it and Unblock the Notifications