எம்ஜிஆர் சினிமா லவ் காட்சிகள் மீதான திமுக எம்.பி.யின் திடீர் விமர்சனம்..வாத்தியார் ரசிகர்கள் 'நறநற'
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வரும் அதிமுக நிறுவனருமான எம்.ஜி.ஆர். நடித்த சினிமா காட்சிகளை சுட்டிக்காட்டி திமுக ராஜ்யசபா எம்.பி. அப்துல்லா பதிவிட்ட சமூக வலைதளப் பதிவு எம்ஜிஆர் ரசிகர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.
தமிழக அரசியல் களத்தில் இப்போது ஹைலைட் விமர்சனப் பொருளாகி இருப்பது அக்கா- தம்பி பேச்சுதான். பாஜக நிர்வாகிகளான டெய்சி மற்றும் திருச்சி சூர்யா இடையேயான தொலைபேசி உரையாடல் பெரும் புயலை கிளப்பி இருந்தது.
திருச்சி சூர்யா, டெய்சி சரணுடனான தொலைபேசி உரையாடலில் மிக மிக இழிவாக ஆபாசமாக பேசியிருந்தார். எழுதவே முடியாத நாரச மொழிகளையும் திருச்சி சூர்யா பயன்படுத்தி இருந்தார். இந்த ஆடியோ வெளியிடப்பட்டது, பாஜகவில் சர்ச்சையாகிப் போனது.
ஆபாச பேச்சு- 6 மாதம் கட்சி பொறுப்பில் இருந்து நீக்கிய அண்ணாமலை- ஆஹோ ஓஹோவென புகழ்ந்த திருச்சி சூர்யா!
பாஜக பஞ்சாயத்து
பெண்களை இழிவாக ஆபாசமாக பேசிய திருச்சி சூர்யா மீது நடவடிக்கை எடுக்க கோரிய பாஜக நடிகை காயத்ரி ரகுராம், கட்சியில் இருந்து 6 மாதம் நீக்கப்பட்டார். பின்னர் திருச்சி சூர்யா, டெய்சி சரண் ஆகியோரை வரவழைத்து பாஜக ஒழுங்கு நடவடிக்கை குழு திருப்பூரில் விசாரணை நடத்தியது. இந்த விசாரணைக்குப் பின்னர், சூர்யாவும் டெய்சியும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அக்கா, தம்பியான சூர்யா-டெய்சி
டெய்சியும் சூர்யாவும் கூட்டாக அளித்த பேட்டிதான் இப்போது நடக்கும் அக்கா- தம்பி விமர்சனங்களுக்கு அச்சாரமே. அந்தப் பேட்டியில், தாம் பேசியதற்கு சூர்யா மன்னிப்பு கேட்டார். அதனால் நாங்கள் இருவரும் எப்போதும் போல அக்கா- தம்பியாக இருப்போம் என்றார் டெய்சி. இன்னும் ஒருபடிம் மேலே போய் சூர்யா, எங்களுக்கு இடையேயான குடும்ப நட்பு தொடரும் என்று கூறினார். இவ்வளவு நாரசமாக விமர்சித்துவிட்டு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அக்கா- தம்பி என இருவரும் உறவு பாராட்டுவதுதான் சமூக வலைதளங்களில் விமர்சனங்களை உருவாக்கி இருக்கிறது.
திமுக எம்பியின் ஃபேஸ்புக் பதிவு
இந்த களேபரங்களுக்கு நடுவில் பாஜக பஞ்சாயத்தை குறிப்பிடாமல் திமுகவின் ராஜ்யசபா எம்.பி. அப்துல்லா ஒரு ஃபேஸ்புக் பதிவை போட்டிருந்தார். அதில், எம் ஜி ஆர் படத்துல எல்லாம் ஹீரோயின் இல்லாம இன்னொரு பொண்ணு ஒண்ணு வரும்.. அதுக்கு எம் ஜி ஆர் மேல லைட்டா லவ் இருக்கும்! அந்தப் பொண்ணுக்கும் எம் ஜி ஆருக்கும் கனவு சீன் பாட்டெல்லாம் இருக்கும்! அந்தப் பாட்டுல எம் ஜி ஆரும் அந்தப் பொண்ணை தடவு தடவுனு தடவி உச்சகட்ட ரொமான்ஸ் எல்லாம் பண்ணுவாரு! அப்புறமா அந்தப் பொண்ணு அவர்கிட்ட தான் ஆசைப்படும் விசயத்தை சொல்லும் போது '' அய்யோ..நான் உன்னை என் சொந்தத் தங்கச்சியாவுல நினைச்சேன்னு'' எம் ஜி ஆர் சொல்வாரு!! அதைக் கேட்டுட்டு அந்தப் பொண்ணும் ''அண்ண்ண்ணா'' அப்படின்னு அழுதுட்டே சொல்லும். இவரும் கண் கலங்கி ''தங்கச்ச்ச்சி'' அப்படினு பாசமா சொல்வாரு. ரெண்டு பேரும் கட்டிப் பிடிச்சிப்பாங்க!! இது ஏன் திடீர்னு இன்னைக்கு எனக்கு நினைப்புல வருதுனு தெரியலை!!! என கூறியிருந்தார்.
கொந்தளித்த எம்ஜிஆர் ரசிகர்கள்
அவ்வளவுதான்.. அப்துல்லா எம்.பி.யின் இந்த பதிவுக்கு எதிராக எம்ஜிஆர் ரசிகர்கள் தங்கள் கொந்தளிப்பை கொட்டிவிட்டனர். மூத்த பத்திரிகையாளரான ஏழுமலை வெங்கடேசன், அப்துல்லாவின் பதிவை பகிர்ந்து, எங்கள் தங்கம் (1970) படத்தில் எம்ஜிஆரோடு ஜெயலலிதா கனவு காணுகிற மாதிரி ஓவர் கிளாமர் சீன் அமைத்த முரசொலி மாறன சொல்றார் போல இருக்குது என எழுதி இருந்தார். அதேபோல் அப்துல்லாவின் ஃபேஸ்புக் பக்கத்தில் எம்ஜிஆர் ஆதரவு, எதிர்ப்பு கருத்துகள் குவிந்து கொண்டிருக்கின்றன.