“இதை பத்தி டெல்லியில பேசுறேன்” - சொன்னார்.. செஞ்சார்.. திமுக எம்.பி-யை கொண்டாடும் உடன்பிறப்புகள்!
சென்னை : ஃபேஸ்புக்கில் ஒருவர் எழுப்பிய கோரிக்கைக்கு 'இதைப் பத்தி நான் டெல்லியில பேசுறேன்' என கவுண்டமணியின் சினிமா வசனத்தை கமென்ட்டாக பதிவு செய்த திமுக எம்.பி அப்துல்லா, சொன்னபடி, ராஜ்யசபாவில் அதுகுறித்துப் பேசியுள்ளது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஃபேஸ்புக் பதிவு எழுப்பிய விஷயத்தின் முக்கியத்துவம் உணர்ந்து அதனை நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்திய திமுக எம்.பி அப்துல்லாவின் செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
குறிப்பிட்ட பதிவை எழுதியவர் எம்.பி அப்துல்லாவை புகழ்ந்துள்ள நிலையில், அதனையும் "ஒரு வேலைக்காரன் தனது முதலாளி பேச்சைக் கேட்பதில் என்ன ஆச்சர்யம்!?" என தலைவணங்கி ஏற்றுள்ளார் அப்துல்லா.
திமுக எம்.பியின் இந்தச் செயல் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. திமுக உடன்பிறப்புகள் பலரும் அப்துல்லா எம்.பியை கொண்டாடி வருகின்றனர்.
ரூ.2.80 லட்சம் கோடி.. பாஜக அரசின் இமாலய ஊழல்! 2ஜி போல் 5ஜியை பேசுங்க - திமுக எம்பி அப்துல்லா
மழைக்காலக் கூட்டத்தொடர்
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த ஜூலை 18ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்ற வருகிறது. நாடாளுமன்றத்தில் விலைவாசி உயர்வு, உணவுப்பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி வரி விதிப்பு, உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக சில நாட்கள் இரு அவைகளும் முடங்கிய நிலையில், கடந்த மூன்று நாட்களாக மீண்டும் அவை நடவடிக்கைகள் தொடர்ந்து வருகின்றன.
திமுக எம்.பி அப்துல்லா
அந்தவகையில், நாடாளுமன்ற ராஜ்யசபாவில் திமுகவைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா, தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் வசூலிக்கப்படும் FASTag சேவைக்கான குறைந்தபட்ச கட்டாய நிதி இருப்பை ரத்து செய்யக்கோரி நேற்று கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு பேசினார். அப்துல்லா எம்.பி ராஜ்யசபாவில் எழுப்பிய இந்த விவாதம் தான் ஃபேஸ்புக்கில் ட்ரெண்டாகி வருகிறது. அதற்கு காரணம் இருக்கிறது.
ஃபேஸ்புக்கில் எழுந்த கோரிக்கை
ஃபாஸ்டேக்கில் குறைந்தபட்ச நிதி இருப்பு தொடர்பான கோரிக்கையை ஃபேஸ்புக் சமூக வலைதளத்தில் ராகேஷ் நீலகண்டன் என்பவர் கடந்த ஜூன் மாதம் எழுப்பியிருந்தார். அதில், "டோல் கட்டணம் fast tag மூலமாக எடுப்பது நல்லதுதான். ஆனால், அதில் மினிமம் பேலன்ஸ் இருக்கவேண்டும் என்ற விதி எதற்கு?" எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.
மினிமம் பேலன்ஸ் எதற்கு?
கடந்த ஜூன் மாதம் ராகேஷ் வெளியிட்டிருந்த ஃபேஸ்புக் பதிவில், ஸ்ரீபெரும்புதூர் டோல் வழியாக போக வேண்டிய நிலை ஏற்பட்டது, டோல் கேஷ் லேன் மூடி இருந்தது. நார்மல் லேன் போனால் பேலன்ஸ் இல்ல, 100 ரூபாய் இருக்கு. டோல் 50 தான் ஆனால் மினிமம் பேலன்ஸ் இருக்கணும்னு சொல்றாங்க. சரி காசு குடுத்தா 100 ரூபாய் ஏன் டபுள் சார்ஜ் கேட்டா fast tag லேன் சொன்னாங்க. நீங்க தான் கேஷ் லேன் மூடி வெச்சிருக்கீங்கனு சொன்னா எல்லாம் கேஷ் லேன் தான் என பதில். எம்பிக்கள் எம்.எம். அப்துல்லா, டாக்டர் செந்தில் குமார் இதை தேசிய நெடுஞ்சாலைத்துறை கவனத்திற்கு கொண்டு போய் தீர்வு காண உதவி செய்யவும் எனப் பதிவிட்டிருந்தார்.
டெல்லியில பேசுறேன்
இந்த ஃபேஸ்புக் பதிவைப் பார்த்த தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா, அந்த பதிவிலேயே, "கொஞ்சம் பெரிய பிரச்சனைதான்! இதைப் பத்தி நான் டெல்லியில பேசுறேன். ( நிஜமாதான்.. கவுண்டர் மாதிரி இல்லை." என கமெண்ட்டில் தெரிவித்திருந்தார். அதன்படியே, இந்த பிரச்சனை தொடர்பாக ராஜ்யசபாவில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்து பேசியுள்ளார் திமுக எம்.பி அப்துலா.
ராஜ்யசபாவில் பேச்சு
ஃபாஸ்டேக்கில் குறைந்தபட்ச கட்டாய இருப்பை பராமரிக்க வேண்டும் என்ற விதி தொடர்பான தரவுகளை முன்வைத்து ராஜ்யசபாவில் பேசிய அப்துல்லா எம்.பி, தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் ஃபாஸ்டேக் சேவைக்கான குறைந்தபட்ச கட்டாய நிதி இருப்பை ரத்து செய்யுமாறு கோரினார். இது திமுக உடன்பிறப்புகள், சமூக வலைதளவாசிகள் மத்தியில், பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
உடன்பிறப்புகள் கொண்டாட்டம்
இதையடுத்து, ராகேஷ் நீலகண்டன, தனது முந்தைய கோரிக்கை பதிவை சுட்டிக்காட்டி, "சொன்னதை செய்வோம்! ஒன்றரை மாதங்களுக்கு முன்பு fast tag மினிமம் பேலன்ஸ் பற்றி பதிவிட்டு அப்துல்லா அண்ணனை டேக் செய்திருந்தேன். அதைப் பற்றி டெல்லியில் பேசுவதாகச் சொன்னார். சொன்னபடியே இப்போது பேசி இருக்கிறார். சாமானியன் கேள்விக்கு செவி மடுக்கும் கழகம். இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் சாமானியனின் குரலாய் பதிவு செய்த அண்ணன் எம்.எம். அப்துல்லா எம்.பி.க்கு நன்றி" எனத் தெரிவித்திருந்தார்.
வேலைக்காரன்
அதற்கு பதில் அளித்துள்ள எம்.எம். அப்துல்லா எம்.பி, "ஒரு வேலைக்காரன் தனது முதலாளி பேச்சைக் கேட்பதில் என்ன ஆச்சர்யம்!?" எனத் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, ஃபேஸ்புக்கில் ஒருவர் எழுதிய கோரிக்கையில் கவனம் செலுத்தி, நாடாளுமன்றத்தில் அதை விவாதமாக்கியுள்ள திமுக எம்.பி அப்துல்லாவை திமுகவினர் மட்டுமல்லாது பலரும் பாராட்டி வருகின்றனர்.