நிலைக்குழு தலைவர் பதவியை தட்டிய கனிமொழி.. காரணம் ‘ஸ்ரீவெங்கடேசபுரம்’.. முதல்வரை சந்தித்து வாழ்த்து!
சென்னை : திமுக எம்.பி கனிமொழி கருணாநிதி இன்று சென்னையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார்.
நாடாளுமன்ற நிலைக்குழுக்கள் மாற்றியமைக்கப்பட்டு நேற்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. மத்திய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிலைக்குழுவின் தலைவராக திமுக எம்.பி கனிமொழி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், திமுக தலைவரும் தமிழக முதல்வருமான முக ஸ்டாலினை சந்தித்து தூத்துக்குடி எம்.பி கனிமொழி வாழ்த்துப் பெற்றார்.
நாடாளுமன்ற நிலைக்குழுக்கள்.. காங்-க்கு திமுக கனிமொழி மூலம் பாஜக வேட்டு.. டெல்லியில் உள்குத்து அனல்
பஞ்சாயத்து ராஜ் திட்டம்
மத்திய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் கமிட்டி திட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள கிராமங்களை முன்னேற்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்தில் ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் ஒரு கிராமத்தை தத்தெடுத்து அதில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொண்டு முன்னேற்றும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அசத்திய கனிமொழி
இந்த திட்டத்தின் கீழ் கிராமத்தை தத்தெடுத்து வெற்றிகரமாக பணிகளை செய்த வெகுசில எம்.பிக்களில் கனிமொழியும் ஒருவர். ராஜ்யசபா எம்.பியாக இருந்தபோது, தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவெங்கடேசபுரம் கிராமத்தை தத்தெடுத்த கனிமொழி எம்.பி, அங்கு குடிநீர், சாலை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் தொடங்கி விவசாய குளம் வரை ரூ.2 கோடி செலவில் சீரமைத்துக் கொடுத்தார். தமிழகத்தில் இருந்து முதல் எம்.பியாக இவரே கிராமத்தை தத்தெடுத்து 'சன்சத் கிராம் ஆதர்ஷ் யோஜனா' திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்தினார். இது பலராலும் பாராட்டப்பட்டது.
நிலைக்குழு உறுப்பினர்கள் நியமனம்
இந்நிலையில், மத்திய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிலைக்குழுவின் உறுப்பினர்களை நியமனம் செய்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, மக்களவை உறுப்பினர்கள் 21 பேரும், மாநிலங்களவை உறுப்பினர்கள் 10 பேரும் மத்திய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிலைக்குழுவின் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டனர்.
தலைவராக கனிமொழி
மத்திய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் நிலைக்குழுவின் தலைவராக திமுக மகளிரணி செயலாளரும், தூத்துக்குடி திமுக எம்.பியுமான கனிமொழி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் தலைமையில் 31 எம்.பிக்கள் குழுவில் இடம்பெற்றுள்ளனர். இதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. ஸ்ரீ வெங்கடேசபுரம் கிராமத்தை தத்தெடுத்து சிறப்பாகச் செயல்பட்டதன் காரணமாகவே இந்த தலைவர் பதவி கனிமொழிக்குக் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
ஸ்டாலினை சந்தித்த கனிமொழி
இந்நிலையில், இன்று சென்னையில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார் கனிமொழி. நாடாளுமன்றத்தின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிலைக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டதை அடுத்து தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து இன்று வாழ்த்து பெற்றார் கனிமொழி எம்.பி.
நிலைக்குழு
மக்களவையில் 24 மற்றும் மாநிலங்களவையில் 10 எம்.பி.க்களைக் கொண்ட திமுகவுக்கு நிலைக்குழுக்களில் இரண்டு தலைவர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. திமுக ராஜ்யசபா எம்.பி திருச்சி சிவா தொழில்துறை குழுவிற்கும், லோக்சபா எம்.பி கனிமொழி ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் குழுவிற்கும் தலைமை வகிக்க உள்ளனர்.