மதம் மாறியோருக்கு மீண்டும் எஸ்.சி அந்தஸ்து.. இதுகூடவா பா.ஜ.க.வுக்கு தெரியவில்லை?- டோஸ் விட்ட முரசொலி

Subscribe to Oneindia Tamil

சென்னை: மதம் மாறிய ஆதி திராவிடர்களுக்கான இடஒதுக்கீடு வழங்க கோரும் தீர்மானத்தை எதிர்க்கும் பாஜகவினருக்கு முரசொலி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி எழுதியிருப்பதாவது: கிறிஸ்தவர்களாக மதம் மாறிய ஆதிதிராவிடர்களையும் பட்டியலில் சேர்த்து - அந்த பட்டியலின மக்களுக்கு அரசியலமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அனைத்து உரிமைகளையும் வழங்க வேண்டும் என்ற தீர்மானத்தை தமிழ்நாடு சட்டமன்றத்தில் கொண்டு வந்து அதனை அனைவரின் ஆதரவுடன் நிறைவேற்றிக் காட்டி இருக்கிறார் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

DMK Official Murasoli slam BJP on Reservation to Dalit Christians

அதற்கான காரணத்தையும் முதலமைச்சர் அவர்கள் தனது உரையில் தெளிவுபடுத்தினார்கள். "ஆதிதிராவிடர்களாக இருந்து மதம் மாறிய பின்னர் தீண்டாமை உள்ளிட்ட சாதிய வன்கொடுமைகளுக்கு அவர்கள் ஆளாவது தொடரவே செய்கிறது. எனவே இதனை கனிவோடு நாம் கவனிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்" என்ற முதலமைச்சர் அவர்கள், "வரலாற்று ரீதியாகவே அவர்கள் ஆதிதிராவிடர் வகுப்பினராக இருக்கும் போது --அவர்களுக்கு பட்டியலின வகுப்புக்கான உரிமைகளை வழங்குவதே சரியானதாக இருக்கும். அதன் மூலமாகத்தான் அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவை கிடைக்கும். அதன் மூலமாகச் சமூகத்தில் அவர்களுக்கான உயர்வும், மேம்பாடும் கிடைக்கும். மதம் மாறிவிட்டார்கள் என்பதற்காக சமூகரீதி யாக அவர்களுக்கு தரப்பட்டு வந்த -- அதே சமூகத்தைச் சேர்ந்த மற்றவர்கள் அனுபவித்து வரும் உரிமைகளை இவர்களுக்கு தர மறுப்பது சரியல்ல என்பது நமது நிலைப்பாடு ஆகும்" என்பதைத் தெளிவாகச் சொன்னார்கள்.

மதம் மாற அனைவருக்கும் உரிமை உண்டு, ஜாதி மாற முடியாது என்பதையும் சுட்டிக் காட்டினார்கள். அத்தகைய ஜாதி ஏற்றத்தாழ்வை களைந்து அனைவரையும் சமம் ஆக்க கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் அதிகாரத்தை வழங்குதல் ஆகியவற்றால் தான் முடியும். அதனை உருவாக்கித் தருவதே இடஒதுக்கீடு ஆகும். அந்த இடஒதுக்கீடு உரிமையை பட்டியலின மக்கள் மதம் மாறிவிட்டார்கள் என்பதால் எடுத்துவிடுவது சரியல்ல என்பது முதலமைச்சரின் சமூகக் கணிப்பு ஆகும். இதன் உள்ளார்ந்த நோக்கத்தை வழக்கம் போல பா.ஜ.க.வினரால் புரிந்து கொள்ள இயலவில்லை. இந்த தீர்மானத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல் பா.ஜ.க. உறுப்பினர் வானதி சீனிவாசன் அவர்கள் எதிர்ப்புக் கருத்துகளை பதிவு செய்தார். அவை, அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டன.

உடனடியாக பா.ஜ.க. உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தார்கள். 'மதம் மாறினால் தீண்டாமை போய்விடும் என்று மதம் மாறுகிறார்கள், ஆனால் மதம் மாறியவர்களுக்கும் இடஒதுக்கீடு கொடுப்பதைப் பார்த்தால் தீண்டாமை அதன்பிறகும் போகாது என்றே தெரிகிறது' என்கிறார் பா.ஜ.க. உறுப்பினர் வானதி சீனிவாசன். ஒருவர் எதற்காக மதம் மாறுகிறார் என்பதே பா.ஜ.க. உறுப்பினருக்குத் தெரியவில்லை. சாதி பாகுபாடு காண்பிக்கப்படுகிறது என்பதற்காக மட்டுமே ஒருவர் மதம் மாறுவது இல்லை. அவருக்கு எந்தக் கடவுள் பிடிக்கிறதோ அதனை வணங்குவதற்காகத் தான் மதம் மாறுகிறார்கள். ஒரு மதத்தில் இருக்கும் போது இன்னொரு மதத்தின் கடவுள் பிடிக்கிறது என்பதற்காக மதம் மாறுகிறார்கள். மாற்று மதத்தின் சிந்தனைகள், மாற்று மத ஆன்மிக வாதிகளின் உரைகள் பிடித்து மதம் மாறுகிறார்கள்.

காதலுக்காக மதம் மாறுகிறார்கள். திருமணத்துக்காக மதம் மாறுகிறார்கள். தனது குடும்பத்தைச் சேர்ந்த மூத்த உறுப்பினர் மதம் மாறியதால், அவரை பின்பற்றி மதம் மாறுகிறார்கள். இப்படி எத்தனையோ காரணங்கள் இருக்கின்றன. சாதியால் ஒடுக்கப்பட்ட மக்கள் மட்டுமே மதம் மாறுவது இல்லை. உயர்ந்த சாதியினர் என்று சொல்லிக் கொள்பவர்களும் மதம் மாறுகிறார்கள். அதற்கு என்ன காரணம்? தீண்டாமை தான் காரணமா? இதுகூடவா பா.ஜ.க.வுக்கு தெரியவில்லை? இதைக் கூடத் தெரிந்து கொள்ளாமலா அரசியல் நடத்துகிறார்கள்? அஷ்வினி உபாத்தியாயா என்ற வழக்கறிஞர் மதமாற்றத்தைத் தடை செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து இருந்தார். அப்போது உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்.ஆர்.ஷா மற்றும் ஹிமா கோஹ்லி அடங்கிய அமர்வு, கட்டாய மதமாற்றத்தைக் கடுமையாகக் கண்டித்தது. ஆனால் மதம் மாறும் உரிமை அனைவர்க்கும் உண்டு என்று சொன்னது.

"இந்தியாவில் மதமாற்றம் சட்டத்தில் தடை செய்யப்படவில்லை. ஒவ்வொருவரும் அவரவர் விரும்பியபடி எந்த மதத்தையும் தேர்வு செய்யவும், பின்பற்றவும் உரிமை உண்டு. இது அரசியலமைப்பு உரிமை ஆகும். இந்தியாவில் இன்றியமையாத உரிமைகளில் ஒன்று சுதந்திரமாக மதத்தை பின்பற்றும் உரிமை ஆகும். இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் தனது நம்பிக்கையை அமைதி யாகக் கடைப்பிடிக்க உரிமை உண்டு" என்று நீதிபதிகள் சொன்னார்கள். நம்பிக்கை, திருமணம், விவகாரத்து ஆகிய காரணங்களுக்காகவும் மத மாற்றங்கள் நடப்பதாகவும் நீதிபதிகள் சொல்லி இருக்கிறார்கள். இதுவும் பா.ஜ.க.வினருக்குத் தெரியவில்லை. கிறித்துவர்களாக மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கும், அரசியல் சட்ட சமூகநீதி உரிமைகள் தரப்பட வேண்டும் என்பதே சரியான நிலைப்பாடு ஆகும். இதனை மனதில் வைத்து வைக்கப்பட்ட கோரிக்கைகள் பற்றி ஆலோசனை செய்து அறிக்கை தருவதற்கு உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதியரசர் கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையில் ஆணையம் அமைத்ததே பா.ஜ.க. அரசு தான்.

இதற்கும் தமிழ்நாடு பா.ஜ.க. உள்நோக்கம் கற்பிக்குமா? கடந்த ஆண்டு தான் இந்த ஆணையம் அமைக்கப்பட்டது. நீதியரசர் கே.ஜி.பாலகிருஷ்ணன் அவர்களைத் தலைவராகவும் பேராசிரியர் சுஷ்மா யாதவ், முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி ரவீந்தர் குமார் ஆகியோர் உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இதற்கான அரசாணை அறிவிப்பை சமூக நீதி மற்றும் அதிகார வழங்கல் அமைச்சகம் வெளியிட்டது. அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 341 இன் கீழ் அவ்வப்போது வெளியிடப்படும் குடியரசுத் தலைவர் உத்தரவுகளின் அடிப்படையில் இந்த விவகாரத்தை ஆய்வு செய்யும். மேலும், தலித் சமூகத்தினர் வேறு மதங்களுக்கு மாறிய பிறகு அவர்களின் பழக்கவழக்கங்கள், மரபுகள், அவர்களின் சமூக பாகுபாடு மற்றும் தாழ்வு நிலை ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை கணக்கில் எடுத்துக் கொள்வதோடு, இவர்களுக்கு மீண்டும் எஸ்.சி. அந்தஸ்து அளிக்கப்படும் போது தற்போதைய எஸ்.சி பிரிவினருக்கு ஏற்படும் தாக்கங்களையும் ஆய்வு செய்து, அது தொடர்பான அறிக்கையை அடுத்த 2 ஆண்டுகளுக்குள் ஒன்றிய அரசிடம் சமர்ப்பிக்கும் என்றும் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இப்படி ஆராயும் போது மாநில அரசின் கருத்துகளைக் கேட்க வேண்டும் என்று முதலமைச்சர் அவர்கள் சொல்லி இருக்கிறார்கள். இதில் பா.ஜ.க. உறுப்பினர்கள் என்ன குறையைக் கண்டுள்ளார்கள்? இவ்வாறு முரசொலியில் எழுதப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+