தமிழக அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்... மருத்துவர்களை அழைத்துப் பேச வலியுறுத்தல்
தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்களை முதலமைச்சர் அழைத்துப் பேசி தீர்வு காண வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு மருத்துவர்களை போராட்டக் களத்திற்கு தள்ளிவிட்டிருக்கும் அதிமுக அரசுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கண்டுகொள்ளவில்லை
அரசு மருத்துவமனைகளையே நம்பியிருக்கும் லட்சக்கணக்கான உள் நோயாளிகளுக்கும், ஏற்கனவே அறுவை சிகிச்சைக்கான தேதி குறிக்கப்பட்டவர்களுக்கும் ஏற்படும் கடுமையான பாதிப்பு குறித்து "குட்கா புகழ்" சுகாதாரத்துறை அமைச்சரோ, முதலமைச்சர் எடப்பாடி திரு பழனிச்சாமியோ கண்டு கொள்ளவில்லை என்பது மிகுந்த கவலையளிக்கிறது.

கையாலாகத் தனம்
நான்கு முக்கியக் கோரிக்கைகளை அரசு மருத்துவர்கள் முன் வைத்து போராட்டக் களத்தில் நிற்கிறார்கள். இந்த கோரிக்கைகளை எழுத்து பூர்வமாக அரசிடம் முன் கூட்டியே கொடுத்தும் - இதுநாள் வரை மருத்துவர்களை அழைத்துப் பேசி - இந்த போராட்டத்தை தடுக்க முடியாத கையாலாகாத் தனமான அரசாக அதிமுக அரசு விளங்குகிறது.

நிர்வாக லட்சணம்
பருவமழை குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி முதல்வர் ஆலோசனை" என்று பத்திரிக்கைளில் செய்தி வந்தாலும், அந்த ஆலோசனையில் கூட இந்த மருத்துவர்கள் போராட்டம் குறித்து விவாதித்து முதலமைச்சர் ஏன் பிரச்சினைக்கு தீர்வு காணவில்லை? "மக்கள் எக்கேடு கெட்டால் என்ன? என்று முதலமைச்சரும், அமைச்சர்களும் அமைதி காப்பதுதான் அதிமுக அரசின் நிர்வாக லட்சணமா?

வலியுறுத்தல்
அரசு மருத்துவமனைகளை நாடி வரும் மக்களுக்கும், அங்கு சிகிச்சை பெற்று வரும் உள் நோயாளிகளுக்கும் உயிர்நாடி மருத்துவர்கள் என்பதை முதலமைச்சர் உணர்ந்து, போராடும் அரசு மருத்துவர்களை உடனடியாக அழைத்துப் பேச வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

கைவிடுக
உயிர் காக்கும் பணியில் இருக்கும் மருத்துவர்கள் இது போன்று "வேலை செய்ய மாட்டோம்" என்ற போராட்ட முறையைக் கைவிட்டு, முதலமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தி, தங்களது நியாயமான கோரிக்கைகளுக்கு தீர்வு காண முயற்சி செய்ய வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.












Click it and Unblock the Notifications