புதிய கல்விக்கொள்கை... கருணாநிதி பயந்தது போலவே நடந்துள்ளது... மு.க.ஸ்டாலின் பேச்சு

Subscribe to Oneindia Tamil

சென்னை: புதிய கல்விக்கொள்கை விவகாரத்தில் 4 ஆண்டுகளுக்கு முன்பு கருணாநிதி எதையெல்லாம் சொல்லி பயந்தாரோ அதுதான் இன்று வந்துள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கல்வியாளர்கள் பங்கேற்ற புதிய கல்விக் கொள்கை பற்றிய காணொலிக் கருத்து மேடை நிகழ்வில் பேசிய மு.க.ஸ்டாலின் இதனைக் கூறினார்.

மேலும், அவர் அந்த நிகழ்ச்சியில் பேசியதாவது;

''இன்றைக்கு வந்திருப்பது கஸ்தூரிரங்கன் குழுவினுடைய அறிக்கை. ஆனால், இதற்கு முன்னால் டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன் என்ற கேபினெட் செயலாளர் தலைமையில்தான் குழு அமைத்தார்கள். அவர் 200 பக்கத்துக்கு ஓர் அறிக்கையைக் கொடுத்தார்.அந்த சுப்பிரமணியம் அறிக்கையைக் கண்டித்து தலைவர் கலைஞர் அவர்கள் அறிக்கை வெளியிட்டார்கள். அதில் தலைவர் கலைஞர் அவர்கள் சொல்லி இருந்த ஒரு சில கருத்துக்களை மட்டும் அப்படியே சொல்கிறேன்,

dmk president mk stalin discuss about new education policy with educationalist

1. புதிய கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கு கல்வியாளர் தலைமையில் குழுவை உருவாக்காமல் அரசு அதிகாரி தலைமையில் குழு அமைத்தது ஏன்?

2. இக்குழுவின் பல அம்சங்கள் மாநில அரசுகளின் அதிகாரத்தில் தலையிடுவதாக உள்ளன.

3. பொதுத்தேர்வுகளை வரிசையாக நடத்துவதால் பள்ளியை விட்டு வெளியேறும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகம் ஆகும். இதனால் அனைவருக்கும் கல்வி என்பது செயலற்றதாகும். இதனால் கிராமப்புற மாணவர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள்.

4. ஒரு மாணவன் தொடர்ந்து தேர்ச்சி பெறவில்லை என்றால், அவனை தொழிற்பயிற்சிக்கு அனுப்பலாம் என்பது நயவஞ்சகம் இல்லையா?

இது மறைமுகமாகக் குலக் கல்வித் திட்டத்தைக் கொண்டுவர மத்திய அரசு திட்டமிடுகிறதோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது.

5. அனைவருக்கும் வேலைவாய்ப்பை உருவாக்குங்கள்.

6. பிளஸ் 2 முடித்தவர்கள், பின்னர் தேசிய அளவிலான தகுதித் தேர்வு எழுத வேண்டும் என்று சொல்வது, இந்தியாவின் பன்முகத் தன்மையைச் சிதைக்கும்.

7. கல்வியில் தாராளமயம் புகுந்து விடும்; கல்வி முற்றிலும் வணிக மயமாகி விடும்; கல்விக் கட்டண உயர்வுக்கு வழி ஏற்பட்டு விடும்; உயர் கல்வி செல்வந்தர் வீட்டுச் செல்லப் பிள்ளைகளுக்கு மட்டுமே உரிய தனி உடைமையாகி, பணக்காரக் கல்வி, ஏழைக் கல்வி என்ற பாகுபாட்டை ஏற்படுத்தி விடும்.

8. பாடத்திட்டம் வகுப்பதிலும், கற்க வேண்டிய மொழிகளை முடிவு செய்வதிலும், மாநிலங்களின் விருப்பத்திற்கு மாறாக, மத்திய அரசு திணிப்பு நடவடிக்கையில் இறங்கி வருகிறது.

9. இந்தி, சமஸ்கிருத மொழியையும், கலாச்சாரத்தையும் திணிப்பதை - மேலும் எளிதாக்கிடவே மறைமுகமாக ஆழ்ந்த உள்நோக்கத்துடன் இக்கொள்கை பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

10. "புதிய கல்விக் கொள்கை" என்ற மத யானை தமிழகத்திற்குள் புகுந்து, "கல்வி சிறந்த தமிழ்நாட்டை" நாசப்படுத்திடவோ, காலங்காலமாக நாம் போற்றி வரும் சமூகநீதி மற்றும் சமநீதிக் கொள்கைகளுக்குக் கேடு ஏற்படுத்திடவோ அனுமதிக்கக் கூடாது. வருமுன் காப்பதே அறிவுடைமை!

- இப்படி 2016-ஆம் ஆண்டு அறிக்கை வெளியிட்டார் தலைவர் கலைஞர் அவர்கள்.நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் அவர் எதையெல்லாம் சொல்லிப் பயந்தாரோ; அதுதான் இன்று புதிய கல்விக் கொள்கையாக வந்துள்ளது.கல்வியில் சிறந்த தமிழ்நாட்டை மத யானை புகுந்து நாசம் செய்யத் திட்டமிட்டு இருப்பதைத் தான் இப்போது நாம் பார்க்கிறோம்.

எனவேதான், இந்தக் கல்வி அறிக்கை குறித்து ஆராய கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆய்வுக்குழு அமைத்தோம்.அக்குழுவில் பத்து கல்வியாளர்கள் இடம்பெற்று இருந்தார்கள்; புதிய கல்விக் கொள்கையில் 400-க்கும் மேற்பட்ட பக்கங்களை இவர்கள் அலசி ஆராய்ந்தார்கள். ஓர் அறிக்கையைக் கொடுத்தார்கள்.

1. இக்கல்விக் கொள்கை காவிமயமாக்கலாக உள்ளது.

2. வேதக் கலாச்சாரத்தைத் திணிப்பதாக உள்ளது.

3. சமூகநீதி புறக்கணிக்கப்பட்டுள்ளது.

4. பெண் கல்வி குறித்துக் கவலைப்படவில்லை.

5. தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

6. தமிழகத்தில் பேரறிஞர் அண்ணாவால் அறிமுகப்படுத்தப்பட்ட இருமொழிக் கொள்கைக்கு விரோதமாக மும்மொழிக் கொள்கை திணிக்கப்படுகிறது.

7. மூன்று வயதுக் குழந்தையை முறைசார்ந்த பள்ளியில் சேர்ப்பது, குழந்தைகளின் உரிமைக்கு எதிரானது.

8. மதிய உணவுத்திட்டத்தைக் கைவிடுகிறார்கள்.

9. தொழிற்கல்வி என்ற பெயரால், குலக்கல்வி முறையை அமல்படுத்த நினைக்கிறார்கள்.

10. மாநில அளவில் 3,5,8-ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

11. கலைக்கல்லூரிகளில் சேர்வதற்கு அகில இந்திய நுழைவுத் தேர்வை ஏற்க முடியாது.

- இப்படி பல்வேறு பரிந்துரைகளைச் சொல்லி அறிக்கை தயாரிக்கப்பட்டது.

28.7.2019 அன்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சருக்கு திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலமாக நேரில் கொண்டு சென்று இந்த அறிக்கை தரப்பட்டது.

இந்த புதிய கல்விக் கொள்கையை மொத்தமாக திரும்பப் பெற வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். நாம் மட்டுமல்ல; இந்தியாவில் உள்ள பல்வேறு அமைப்புகள், கல்வியாளர்கள் இந்தக் கோரிக்கையை வைத்தார்கள். ஆனால் அது எதையும் ஏற்காமல் மத்திய அரசு, அந்தக் கொள்கையை அமல்படுத்தி விட்டது.

'மத்திய அரசுப் பள்ளிகளில் தாய்மொழிக் கல்வியைச் செயல்படுத்த இயலாது' என்று அதிகாரிகள் சொன்னதால் மத்திய அரசு பல்டி அடித்துள்ளது.
"ஐந்தாம் வகுப்புவரை தாய்மொழியிலேயே பயிற்றுவிக்க வேண்டும். அதனை எட்டாம் வகுப்புவரை நீட்டிக்கவும் செய்யலாம்" என்று இரண்டு நாட்களுக்கு முன்னால் சொன்னதும் இதே மத்திய அரசுதான்.இப்போது அதில் மட்டும் பின்வாங்குகிறார்கள் என்றால், இவர்களுக்கு நிரந்தரமான கொள்கை என்று எதுவும் இல்லை என்று தெரிகிறது.

"மாணவர்களின் ஒளிமயமான எதிர்காலத்தை மனதில் கொண்டு இத்திட்டத்தை உருவாக்கி இருக்கிறோம்" என்று சொல்லி இருக்கிறார் பிரதமர்.
"இப்போது நீங்கள் அறிமுகம் செய்திருக்கும் திட்டத்தால் மாணவர்கள் பலரும் பாதியிலேயே பள்ளிகளை விட்டு விரட்டப்படுவார்கள்" என்று பிரதமர் அவர்களுக்கு தாழ்மையுடன் சொல்ல விரும்புகிறேன்."அனைவருக்கும் கல்வி கிடைக்கும்" என்று நேற்றைய தினம் பிரதமர் அவர்கள் சொல்லி இருக்கிறார். "இல்லை பிரதமர் அவர்களே... உயர் கல்விக்கு மாணவர்கள் செல்வது தடுக்கப்படும்." என்று நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

பிரதமர் சொல்வது போல, அனைவருக்கும் கல்வி கிடைக்காது.பிரதமர் அவர்கள் நாட்டு மக்களை ஏமாற்றுவதாக நினைத்து தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்கிறார்.இந்தக் கல்விக் கொள்கை அமலானால், இன்னும் பத்து ஆண்டுகளில் கல்வி என்பது சிலருக்கு மட்டுமே சொந்தமானதாக ஆகிவிடும்.கிராமங்கள் சிதைந்துவிடும். ஏழைகள் மேலும் ஏழைகளாக ஆவார்கள்.இந்தியாவின் பலமே இளைஞர் சக்தி என்பார்கள். அந்த இளைஞர் சக்தியை பெரும்பாலும் இழந்துவிடுவோம்.

புதிய கல்விக் கொள்கையை தமிழக அரசு மறுக்க வேண்டும்; நிராகரிக்க வேண்டும்.பேரறிஞர் அண்ணா அவர்களின் திருப்பெயரைக் கட்சியின் பெயரில் இணைத்துக் கொண்டிருக்கும் அ.தி.மு.க., மும்மொழிக் கொள்கையைக் கொண்ட புதிய கல்விக் கொள்கையை எதிர்க்காமல் மௌனம் சாதிக்கக் கூடாது.அப்படி மௌனமாக இருந்தால்; அது பேரறிஞர் அண்ணாவின் பெயருக்கு அவமானம்.

அரசியல் ரீதியாக மத்திய அரசுக்குப் பயந்து தமிழ்நாட்டு மக்களின் - மாணவர்களின் எதிர்காலத்துக்கு துரோகம் செய்துவிடாதீர்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.அனைவருக்குமான கல்வி என்பது நமது இலக்கு. நூறு ஆண்டுகளுக்கு முன்னால் நீதிக்கட்சி ஆட்சியால் விதைக்கப்பட்ட விதை - இந்த சமூகநீதிக் கல்வி''.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+