நாட்டுக்கு நாடாளுமன்றம்... கழகத்திற்குப் பொதுக்குழு... மு.க.ஸ்டாலின் கடிதம்
சென்னை: நாட்டுக்கு எப்படி நாடாளுமன்றமோ அதை போல் உடன்பிறப்புகளின் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்த கழகத்திற்குப் பொதுக்குழு என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு மடல் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மனம் திறந்து எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது;
2019, நாடாளுமன்றத் தேர்தல் களத்திலும், அதனுடன் நடந்த இடைத்தேர்தல்களிலும், கழகம் அடைந்த வெற்றிக்குப் பிறகு நடக்கும் பொதுக்குழுக் கூட்டம், வரும் 10ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கூடவிருக்கிறது.
திறந்த மனது
கழகத் தலைவர் என்ற பொறுப்பில் இருந்தாலும், முன்னோடும் தொண்டனாகவே என்னைக் கருதிக் கொண்டிருக்கிறேன். எதையும் எவரிடமிருந்தும் மறைக்காமல், உண்மை நிலவரங்களை மறக்காமல், இயக்கத்தின் நலன்- வளர்ச்சி ஒன்றை மட்டுமே இலக்காகக் கொண்டு, திறந்த மனதுடன் கலந்தாலோசிக்கக் கூடுவதுதான் கழகப் பொதுக்குழு.
காரணம் என்ன?
வெற்றி பெற்ற போது நாம் வகுத்த வியூகங்கள் என்ன? களத்தில் வெளிப்படுத்திய உழைப்பு எத்தகையது? இவை அனைத்தும் இரு தொகுதிகளுக்கான களத்தில் என்னவாயிற்று? ஆளுந்தரப்பின் அதிகார துஷ்பிரயோகப் பாய்ச்சலைக் கணிக்க முடியாத சுணக்கம் நம்மிடம் இருந்ததா? ஒருங்கிணைப்பு குறைந்ததா? தோல்விக்கான உண்மையான, முழுமையான காரணங்கள் என்னென்ன? என்பவை அனைத்தும், உடன்பிறப்புகளின் உள்ளக் கிடக்கையை வெளிப்படுத்தும் வகையில், பொதுக்குழு வில் நேர்மையாக விவாதிக்கப்படும்.
நீதிமன்றத்தில் குட்டு
இந்த இடைத்தேர்தலில் மக்களின் ஆதரவு உண்மையாகவே தங்களுக்குக் கிடைத்திருப்பதாக ஆள்வோர் நம்பினால், உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு ஏன் தொடை நடுங்கிட வேண்டும்? "ஓட முடியாத குதிரைக்கு சறுக்கியது சாக்கு" என்பது போல, உள்ளாட்சித் தேர்தலை நடத்தத் துணிவில்லாத அ.தி.மு.க. அரசு, நியாயமான இட ஒதுக்கீட்டின்படி தேர்தல் நடத்தக்கோரி கழகம் தொடர்ந்த வழக்கைக் காரணம் காட்டி இழுத்தடித்து, நீதிமன்றங்களால் உச்சந்தலையில் குட்டுக்கு மேல் குட்டு வாங்கியுள்ளது.
அலட்சியம்
அ.தி.மு.க. ஆட்சியில் உள்ளாட்சி நிர்வாகம் தொடங்கி அனைத்தும் சீரழிந்து கிடக்கிறது. சாலையில் உள்ள குழிகளைச் சரிசெய்ய வக்கில்லை. ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தையை உயிருடன் மீட்பதில் முறையான திட்டமில்லை. ஒவ்வொரு இல்லத்திலும் அதிர்வை ஏற்படுத்திய பொள்ளாச்சி பாலியல் வழக்கில், குண்டர் சட்டத்திலிருந்து தப்பிக்கின்ற வகையில் அரசு மற்றும் காவல்துறை மெத்தனப் போக்குடன் அலட்சியமாகச் செயல்படுகிறது.
அதிமுக முதலிடம்
தமிழகத்தின் தனித்துவத்தையும் தமிழர்களின் உரிமைகளையும் பறிக்கும் மத்திய அரசின் திட்டங்களை, ராஜாவை விஞ்சும் ராஜ விசுவாசியாக இருந்து செயல்படுத்துவதில் அ.தி.மு.க.வுக்கே முதலிடமாகும். அதற்கு அண்மைக்கால எடுத்துக்காட்டு, 5ஆம் வகுப்பு, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத் தேர்வைத் திணித்து மத்தியஅரசு உத்தரவிடுவதற்கு முன்பே, புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் தீவிரமாக இருக்கிறது.
கழகத்திற்கு பொதுக்குழு
இடையில், இடைத்தேர்தல் போன்ற, நாம் சந்தித்த இடையூறுகள்கூட, நம்முடைய லேசான சோர்வையும் அலட்சியத்தையும் விரட்டி அடிக்கக்கூடிய விழிப்புணர்வு நிகழ்வேயாகும். இத்தகைய நிலையில்தான் கழகத்தின் பொதுக்குழு கூடுகிறது. நாட்டுக்கு எப்படி நாடாளுமன்றமோ, அதுபோல கழகத்திற்குப் பொதுக்குழு.
மனசாட்சி
நாட்டின் ஒட்டுமொத்த மக்களின் குரலும் நலனும் நாடாளுமன்றத்தில் எதிரொலிக்க வேண்டும்! கழகத்தின் பொதுக்குழு என்பது, உடன்பிறப்புகளின் உயர்வான குரல். எதிர்காலப் பயணத்திற்கான தெளிவான ஏற்றமிகு பாதையை வகுக்க, ஒவ்வொரு உடன்பிறப்பின் மனசாட்சியாகக் கூடுகிறது, கழகப் பொதுக்குழு.