மோடி அரசின் வஞ்சகம்.. சிறுபான்மையினர் மீதான தாக்குதல்! கொந்தளித்த திமுக ராஜீவ் காந்தி - என்னாச்சு?
சென்னை: சுதந்திர போராட்ட வீரரும், இந்தியாவின் முதல் கல்வி அமைச்சருமான மௌலானா அபுல் கலாம் ஆசாத் பெயரில் வழங்கப்பட்டு வந்த சிறுபான்மை சமுதாய மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை மத்திய அரசு நிறுத்தி இருப்பதற்கு திமுக செய்தித் தொடர்பு இணை செயலாளர் ராஜீவ் காந்தி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
1 முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மை சமுதாயத்தை சேர்ந்த மாணவர்களுக்கு ப்ரீ மெட்ரிக் எனப்படும் கல்வி உதவித் தொகை திட்டம் காங்கிரஸ் ஆட்சியில் கடந்த 2008-09 ஆம் ஆண்டில் இருந்து மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின் கீழ், கல்வி உதவித்தொகை நேரடியாக மாணவர்களின் வங்கிக் கணக்குக்கு செலுத்தப்படுகிறது. இதனால் இஸ்லாமியர், கிறித்தவர், சீக்கியர், பாரசீகர், பௌத்தர் ஆகிய சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த மாணவர்கள் பயன்பெற்று வந்தனர்.

யாருக்கு தகுதி
ஆண்டுக்கு ஒரு லட்சத்துக்கும் குறைவான வருமானம் கொண்ட, சென்ற ஆண்டு இறுதித் தேர்வில் குறைந்த பட்சம் 50% மதிப்பெண் பெற்றிருந்த சிறுபான்மையின மாணவர்களுக்கு இந்த கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வந்தது. சிறுபான்மை சமூக பெற்றோர்கள் குழந்தைகளை இடைநிறுத்தம் செய்யாமல் தொடர்ந்து பள்ளிக்கு அனுப்பி, பள்ளிக் கல்வியை முடிக்க வைப்பதை ஊக்குவிப்பதை உறுதி செய்வதும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

மத்திய அரசின் திடீர் மாற்றம்
இந்த நிலையில் இந்த கல்வி உதவித் தொகை திட்டமானது 9 மற்றும் 10 வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள், இஸ்லாமிய இயக்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். அந்த வகையில் திமுக செய்தித் தொடர்பு இணை செயலாளர் ராஜீவ் காந்தியும் இதற்கு கண்டனம் தெரிவித்து உள்ளார்.

மோடி அரசின் வஞ்சக செயல்
இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டு இருக்கும் அவர், "சுதந்திரப் போராட்ட வீரர், காந்தியின் நண்பர் இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் மவுலானா அபுல்கலாம் ஆசாத் பெயரில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மதச் சிறுபான்மையின மாணவர்களின் மேற்படிப்புக்காக வழங்கப்பட்டு வரும் ப்ரீ மெட்ரிக் உதவித்தொகையை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது ஒன்றிய பாஜக அரசு. மதத்தின் பெயரால் ஜனநாயகப் படுகொலை செய்யும் மோடி அரசின் மற்றுமொரு வஞ்சகச் செயலே இந்த முடிவு.

குஜராத் முதலமைச்சராக இருந்தபோது..
இந்தத் திட்டம், 2006ம் ஆண்டு ஆய்வுக்குட்படுத்தி, 2009ம் ஆண்டு நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது. இதுநாள் வரை இந்தத் திட்டத்தில் பல ஆயிரமான மாணவர்கள் பயனடைந்திருக்கிறார்கள். 2013ல் குஜராத் முதல்வராக மோடி இருந்தபோது இந்தத் திட்டத்தை நிறுத்துவதாக அறிவித்தார். உடனடியாகத் தலையிட்ட உச்சநீதிமன்றம் கல்விக்காக வழங்கப்படும் உதவித்தொகை. அதை எக்காரணம் கொண்டும் நிறுத்தக் கூடாது எனக் குட்டு வைத்தது.

சிறுபான்மையினர் மீதான தாக்குதல்
ஆனால், அதையெல்லாம் மீறி மீண்டும் மத சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதலைத் தொடுத்திருக்கிறது மோடி தலைமையிலான ஒன்றிய அரசு. பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்காக வாதிடுகிறோம் எனச் சொல்லிக்கொண்டு, பொருளாதாரத்தில் பின்தங்கிய சிறுபான்மையினருக்கான கல்வி உதவித் தொகையை நிறுத்தியிருப்பது ஜனநாயக விரோதமானது.

மீண்டும் வழங்க வேண்டும்
"ஜனநாயகம் என்பது பெரும்பான்மை எண்ணிக்கை அடிப்படையிலான ஆட்சி மட்டுமல்ல; சிறுபான்மையினரின் உரிமைகள், உணர்ச்சிகள் ஏற்று, போற்றிப் பாதுகாத்துச் செயல்படுவது தான்" என்பார் பேரறிஞர் அண்ணா. இதைப் புரிந்துகொண்டு ஜனநாயகத்தைக் குழி தோண்டிப் புதைக்கும் கொடுஞ்செயலைக் கைவிட்டுவிட்டு, நிறுத்தப்படுவதாக அறிவித்த மவுலானா அபுல் கலாம் ஆசாத் கல்வி உதவித் தொகை மீண்டும் வழங்குவதை ஒன்றிய பாஜக அரசு உறுதி செய்ய வேண்டும்!












Click it and Unblock the Notifications