"வாக்கை மீற மாட்டேன்".. 6 இடங்களுக்கு ஸ்டாலின் தந்த பரபர அசைன்மென்ட்.. திருப்பம் தர போகும் திருமா!
சென்னை: திமுக கூட்டணியில் விசிக போட்டியிடும் இடங்களுக்கு எல்லாம் ஸ்டாலின் ஸ்பெஷல் டீம் ஒன்றை அனுப்பி இருக்கிறாராம்.. விசிக தலைவர் திருமாவிடம் ஸ்டாலின் கொடுத்த வாக்கு ஒன்றுதான் இதற்கு காரணம் என்கிறார்கள்.
தமிழக சட்டசபை தேர்தலில் திமுக மிகப்பெரிய கூட்டணியை அமைத்து தேர்தலை சந்திக்கிறது. கிட்டத்தட்ட லோக்சபா தேர்தலில் உருவாக்கிய அதே கூட்டணியை வைத்து சட்டசபை தேர்தலையும் திமுக எதிர்கொள்கிறது.
ஆனால் திமுக தனது கூட்டணியில் இருக்கும் கட்சிகளிடம் மிகவும் கண்டிப்புடன் செயல்பட்டு மிக குறைவாக தொகுதிகளையே ஒதுக்கியுள்ளது. எந்த கட்சிக்கும் இந்த முறை திமுக அதிக இடங்களை ஒதுக்க முன்வரவில்லை.
திமுக
173 இடங்களை திமுக எடுத்துக்கொண்டு மற்ற தொகுதிகளை மட்டுமே கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியது. அதிலும் 187 தொகுதிகளில் திமுகவின் உதய சூரியன் சின்னம் போட்டியிடுகிறது. இதில் திமுக கூட்டணியில் விசிக 6 இடங்களில் போட்டியிடுக்கிறது. இதில் 6லும் விசிக தனி சின்னத்தில் போட்டியிட போகிறது.
எங்கு
மொத்தம் 4 தனி தொகுதிகள், 2 பொது தொகுதிகள் விசிகவிற்கு திமுகவில் ஒதுக்கப்பட்டுள்ளது.
- திருப்போரூர் - எஸ்.எஸ்.பாலாஜி
- நாகப்பட்டினம் - ஆளூர் ஷா நவாஸ்
- காட்டுமன்னார் கோயில் (தனி) - சிந்தனை செல்வன்
- வானூர் (தனி) - வன்னி அரசு
- அரக்கோணம் (தனி) - கௌதம சன்னா
- செய்யூர் (தனி) - பனையூர் பாபு ஆகிய தொகுதிகள் விசிகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
வாக்கு
இந்த தொகுதிகளை ஒதுக்கும் போது முதலில் விசிக இதை ஏற்கவில்லை. 6 எல்லாம் ரொம்ப குறைவு. இதை எப்படி ஏற்றுக்கொள்வது என்று கூறியது. ஆனால் திமுகவோ கூட்டணி வெற்றிதான் முக்கியம். ஆட்சியை 5 வருடம் நடத்துவது முக்கியம். 5 வருடம் மைனாரிட்டி ஆட்சி நடத்த முடியாது. உங்கள் கட்சியை அழிக்கும் எண்ணம் இல்லை.. புரிந்து கொள்ளுங்கள் என்று கூறி விசிகவை திமுக சம்மதிக்க வைத்தது .
விசிக சம்மதம்
அதோடு விசிகவிற்கு ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதியில்.. நீங்கள் 6 தொகுதி போட்டியிடுகிறீர்கள் என்று கவலைப்பட வேண்டாம். 6ல் போட்டியிட்டால் ஆறிலும் உங்களை வெற்றிபெற வைப்போம். உங்களுக்காக திமுக களப்பணி ஆற்றும்.. எல்லோரும் சட்டசபை செல்வார்கள் என்று உறுதியாக கூறினார். ஸ்டாலின் கொடுத்த இந்த வாக்குறுதியை இப்போது காப்பாற்றி உள்ளதாக களநிலவரம் தெரிவிக்கிறது.
வாக்குறுதி
அதன்படி ஸ்டாலின் தனக்கு நெருக்கமான சில நிர்வாகிகளையும், தேர்தல் களப்பணியாளர்களையும் மொத்தமாக தேர்தல் பணிகள் செய்ய இந்த 6 தொகுதிக்கு அனுப்பி உள்ளாராம். இவர்களை வெற்றிபெற வைப்பதே நிர்வாகிகளுக்கு கொடுக்கப்பட்ட அசைன்மென்ட். ஏற்கனவே இங்கு ஐ பேக் டீம் இருக்கிறது. அதை தாண்டி இன்னொரு பக்கம் தனியாக தனக்கு நெருக்கமான சில நிர்வாகிகளை அனுப்பி தேர்தல் பணிகளை கவனிக்க ஸ்டாலின் சொல்லி உள்ளாராம்.
ஸ்டாலின் உறுதி
6 இடங்களிலும் விசிக எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்பதில் விசிகவை விட திமுக உறுதியாக இருக்கிறதாம். முக்கியமாக நாகப்பட்டினம் - ஆளூர் ஷா நவாஸ், வானூர் (தனி) - வன்னி அரசு இரண்டு பேரும் வெற்றிபெற வேண்டும் என்பதில் திமுக தீவிரமாக இருக்கிறது. வானூரில் அதிமுக நான்காவது முறையாக வெற்றிபெறும் முனைப்பில் உள்ளது. அதை நடக்க விடாது என்பதில் திமுக கருத்தாக உள்ளது.
திமுக
சில திமுக தலைவர்களுக்கும் ஆளூர் ஷா நவாஸுக்கும் இடையே இருக்கும் நெருக்கம் காரணமாக திமுக நாகப்பட்டினத்தில் கூடுதல் களப்பணிகளை செய்து வருகிறது . கிட்டத்தட்ட விசிகவே திரும்பி பார்க்கும் அளவிற்கு திமுக இங்கு பணிகளை செய்து வருகிறதாம். 6 பேரில் ஒருவர் கூட தோல்வி அடைய கூடாது.. இவர்களின் பிரநிதித்துவம் முக்கியம் என்பதில் ஸ்டாலின் உறுதியாக இருப்பதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.